இந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கிடையே இந்த அய்சால் நகரம் வீற்றிருக்கிறது. 100 ஆண்டு கால பழமையை கொண்ட இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1132 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வடபகுதி துர்ட்லாங் மலையின் கம்பீரமான சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நகரமான இந்த அய்சால் மிசோரம் மாநிலத்தின் முக்கிய நகரம் என்பதால் பல அடுக்கு கட்டிடங்களுடன் நவீன தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
மிசோ இன மக்களின் பூமி!
மிசோரம் என்பதற்கு மிசோ இன மக்களின் பூமி என்பதே பொருள். மிசோ என்பது மலைபூமியில் வசிக்கும் மக்களை குறிக்கிறது. இந்திய நாட்டின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் மிசோரம் மாநிலம் தனது எல்லையை அண்டை நாடுகளான மியான்மார் மற்றும் பங்களாதேஷுடனும் இந்தியா மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மணிபூர் ஆகியவற்றுடனும் பகிர்ந்துகொள்கிறது.
1987ம் ஆண்டு தனி மாநிலமாக மாற்றப்படும் வரை இது ஒரு இந்திய யூனியன் பிரதேசமாக விளங்கி வந்தது. மங்கோலிய வம்சத்தின் வழித்தோன்றல்களாக கருதப்படும் மிசோ இன மக்கள் பல நூற்றாண்டுகளாக இங்குள்ள மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
மிசோ இன மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்!
காலங்காலமாக விவசாயத்தொழிலில் ஈடுபட்டு வரும் இனம் என்பதால் மிசோ இனத்தாரின் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் போன்றவை விவசாய அறுவடைக்காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பருவங்களை மையமாக கொண்டுள்ளன.
பல நூற்றாண்டுகளாக மிசோ இனத்தவர்கள் ஜும் எனப்படும் விவசாய முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த முறைப்படி அறுவடை முடிந்து வயல்களுக்கு தீ வைப்பது வழக்கமாக உள்ளது.
மிம் குட் மற்றும் பாவல் குட் ஆகியவை இங்கு கொண்டாடப்படும் இரண்டு முக்கியமான அறுவடை திருநாட்களாகும். இவை முறையே ஆகஸ்ட்-செப்டம்பர் மற்றும் டிசம்பர்-ஜனவரி போன்ற மாதங்களில் கொண்டாடப்படுகின்றன.
செராவ் எனப்படும் ஒரு பாரம்பரிய நடனம் இம்மக்களின் முக்கியமான கலைவடிவமாக புகழ்பெற்றுள்ளது. மூங்கில் கொம்புகளை ஏந்தியபடி நுணுக்கமான ஒத்திசைவுகளுடன் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. இப்படி பல்வேறு விதமான பாரம்பரிய கலாச்சார அம்சங்கள் அய்சால் நகரத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
அய்சால் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
ஒரு கோட்டை நகரம் போன்று காட்சியளிக்கும் அய்சால் நகரம் ஏராளமான சுற்றுலா சுவாரசியங்களை பெற்றிருக்கிறது. இன்னும் அவ்வளவாக பிரபல்யமடையாத நகரம் என்றாலும்கூட இந்த நகரத்தை சுற்றி விசேஷமான கவர்ச்சி அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.
இப்பகுதியில் ஓடும் டிலாங் ஆறு பார்க்க வேண்டிய அம்சங்களில் முதன்மையானதாக அமைந்துள்ளது. நகருக்கு மேற்கே பள்ளத்தாக்குகளின் வழியாக இந்த ஆறு ரம்மியமாக வழிந்து ஓடுகிறது.
இது தவிர நகருக்கு கிழக்கே டுரியல் எனும் ஆறு மற்றும் அதனை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதி போன்றவை பிரமிக்க வைக்கும் அழகுடன் வீற்றிருக்கின்றன. மற்றொரு முக்கியமான கவர்ச்சி அம்சமாக அமைந்திருக்கும் ‘டம்டில்’ ஏரியில் பயணிகள் படகுச்சவாரி பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.
மீன்பிடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இங்குள்ள சிம்டுய்பூய் எனும் ஆற்றுப்பகுதிக்கு விஜயம் செய்யலாம். இவை தவிர மிசோ மாநிலத்திலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சியாக விளங்கும் வன்டாவாங் நீர்வீழ்ச்சியும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய எழில் அம்சமாகும். இது 750 அடி உயரத்திலிருந்து விழுகிறது.
மேலும், இப்பகுதியில் உள்ள பவாங்பூய் எனும் சிகரம் ஆர்க்கிட் மற்றும் ரோடோடென்ட்ரோன் மலர்த்தாவரங்களுக்கும், மலை ஆடுகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இது மிசோரம் மாநிலத்திலேயே மிக உயரமான சிகரம் எனும் பெருமையுடனும் வீற்றிருக்கிறது.
அய்சால் நகரம் மாநிலத்தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சாரத்தலைநகரமாகவும் திகழ்கிறது. மிசோரம் ஸ்டேட் மியூசியம், சாலமன் கோயில் மற்றும் அய்சால்-ருங்டில் இரட்டை ஏரி போன்றவை இங்குள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.
அய்சால் நகரத்துக்கு அருகிலேயே ‘ரேயக்’ எனும் கலாச்சார கிராமம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மிசோ இனத்தாரின் தனித்தன்மையான குடிசை வீடுகளை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்கலாம். மேலும், இக்கிராமத்தை ஒட்டியே இயற்கைக்காடுகள், பாறைச்சிகரங்கள் போன்றவையும் அமைந்திருக்கின்றன.
எப்படி செல்லலாம் அய்சால் சுற்றுலாத்தலத்திற்கு?
அய்சால் நகரம் கல்கொத்தா மற்றும் குவஹாட்டி நகரங்களுடன் விமான சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இந்த இரண்டு நகரங்களுக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் அய்சால் நகரத்துக்கு வரலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் நகரத்திலிருந்து 184 கி.மீ தூரத்திலுள்ள சில்சார் எனும் இடத்தில் உள்ளது. NH 54 தேசிய நெடுஞ்சாலை இந்நகரத்தை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கிறது.
அய்சால் பருவநிலை
மிதமான பருவநிலையை கொண்டுள்ள அய்சால் நகர்ப்பகுதி இதமான கோடைக்காலம் மற்றும் அதிக குளிர் அல்லாத குளிர்காலம் போன்றவற்றை கொண்டுள்ளது. இங்கு சராசரி வெப்பநிலையாக 20°C முதல் 29°C வரை காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் 254 செ.மீ மழையையும் இப்பகுதி பெறுகிறது.