இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்திலுள்ள அலிகார் மாவட்டத்தில் அலிகார் நகரம் அமைந்துள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உட்பட, முக்கியமான பல கல்வி நிலையங்களை கொண்டிருக்கும் கல்வி மையமாக இந்நகரம் விளங்குகிறது. நீண்ட வரலாற்றைப் கொண்டிருக்கும் அலிகாரில் தான், ஆங்கில மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கு இடையேயான அல்லி குர் போரும் நடைபெற்றது.
முன்பொரு காலத்தில் அலிகாரில் வாழ்ந்த பூர்வ குடியினரான கோல் இனத்தவரின் பெயராலேயே அலிகார் அழைக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த பெயர் ஒரு மலையின் பெயர் அல்லது முனிவரின் பெயர் அல்லது ஒரு பேயின் பெயராகவோ இருக்கலாம் என கருதப்படும் கதைகளும் உள்ளன.
லோடி வம்ச அரசர் இப்ராஹிம் லோடியின் காலத்தில், கோல் பகுதியின் ஆளுநராக இருந்த உமர் என்பவரின் மகன் முகம்மது என்பவரால் கோல் என்ற பெயரில் ஒரு கோட்டையும் இங்கே கட்டப்பட்டுள்ளது.
இன்றைய அலிகாரின் முக்கிய பார்வையிடமாக விளங்கும் இந்த கோட்டை, அலிகார் கோட்டை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காலகட்டங்களில், பலரின் கைகளுக்கு மாறிய இந்நகரம் முகம்மதுகார், சபித்கார், ராம்கார் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு இறுதியாக அலிகார் என்று இன்றைய பெயரைப் பெற்றுள்ளது.
முதன்மையான கல்வி மையமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், வட இந்தியாவின் புகழ் பெற்ற வணிக மையமாகவும் அலிகார் விளங்குகிறது. முகலாயர் காலத்தில் தொடங்கப்பட்ட பூட்டு தயாரிக்கும் தொழில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாக அலிகார் உள்ளது.
பித்தளை பொருட்கள் மற்றும் 'அலிகார் பைஜாமா' போன்ற அலிகார் நகரத்தின் பிரபலமான பொருட்களை இரயில்வே சாலை மார்க்கெட் மற்றும் சென்டர் பாயிண்ட் மார்க்கெட்களில் உங்களால் வாங்க முடியும்.
அலிகாரின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
அலிகாரின் பிரபலமான சுற்றுலா தலமாக அலிகார் கோட்டை விளங்குகிறது. இதன் துணையாக இருக்கும் டோர் கோட்டைப்பகுதி, தற்போது சிதைந்த நிலையில் காணப்பட்டாலும், அது கட்டப்பட்ட காலத்தின் பெருமைய பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
மேலும், அலிகாரில் இருக்கும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமும் நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
சர் சையது அகாடமி மியூசியம், சாச்சா நேரு கியான் புஸ்ப் மற்றும் ஹக்கீம் ஹுசைன் மியூசியம் என சில குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்களும் இந்த நகரில் உள்ளன. வழிபாட்டுத் தலங்களைக் குறிப்பிடும் போது, சிவ்ராஜ்பூரில் இருக்கும் கேரேஸ்வர் கோவிலின் உயரத்திற்கு அலிகாரின் ஜாமா மசூதியும் நிமிர்ந்து நிற்கிறது.
கோவில்கள் மற்றும் ஆய்வு மையங்களைக் கொண்டிருக்கும் வளாகங்களில் ஒன்றான “தீர்த்தம் மாங்கல்யதான்” என்ற இடத்தை நோக்கி சமண மதத்தவரின் பாதங்கள் தானாக நடக்கும்.
இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் மதிப்புடன் பார்க்கப்படும் பிரபலமான தர்ஹாக்கள் அல்லது சூஃபி துறவிகளின் கல்லறைகளும் அலிகாரில் உள்ளன.
பெருமளவிலான பார்வையாளர்கள் மரியாதை செலுத்திச் செல்லும் இடமாகவும் மற்றும் அருள் பெற்றுச் செல்லும் இடமாகவும் பாபா பார்ச்சி பஹதூர் தர்ஹா விளங்கி வருகிறது.
ஆசியவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் விளங்கும் மௌலான ஆஸாத் நூலகமும் அலிகாரில் உள்ளது.
ஆரவாரம் மிக்க நகர வாழ்க்கையிலிருந்து விலகியிருக்க நினைப்பவர்களுக்கு அவர்கள் மிகவும் தேடும் அமைதி தரும் இடமாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பறவைகளை காட்டும் இடமாகவும் ஷேக்கா ஏரி உள்ளது.
அலிகாரில் நீங்கள் இருக்கும் போது, அரிய விலங்கினங்களில் ஒன்றான கருப்பு மான்கள் உட்பட பல விலங்கினங்களைப் பாதுகாத்து வரும் நாக்லியா கிராமத்திற்கு சென்று வருவதும் சிறந்த அனுபவமாக இருக்கும்.
அலிகாரில் ஷாப்பிங் செய்வதில் சிறந்த அனுபவம் தரும் இடங்களாக பூட்டு முதல் பித்தளை பொருட்கள் செய்யும் இடங்கள் மற்றும் உள்ளூர் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் சந்தைகளை குறிப்பிடலாம்.
அலிகாருக்கு வர மிகவும் ஏற்ற பருவம்
அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான நாட்கள் தான் அலிகாருக்கு வருகை புரிய மிகவும் ஏற்றவை.
அலிகாரை அடையும் வழிகள்
அலிகார் நகரம் சாலை, இரயில் மற்றும் விமான வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.