ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.
புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய தேஷ் என்றழைக்கப்பட்ட இந்த இடத்தில் மஹாபாரத பாண்டவர்கள் 13 ஆண்டு அஞ்ஞாதவாசத்தை கழித்ததாக நம்பப்படுகிறது.
வரலாற்றுரீதியாக இந்த இடம் மேவார் என்று அறியப்படுகிறது. அழகிய ஏரிகள், கம்பீரமான அரண்மனைகள், உன்னதமான கோயில்கள், கலையம்சம் கொண்ட ராஜநினைவு மாடங்கள் மற்றும் உயர்ந்தோங்கி நிற்கும் கோட்டைகள் ஆகியவற்றுக்கு இந்த அல்வர் நகரம் புகழ் பெற்றுள்ளது.
கோட்டை, அரண்மனை, ஏரி, மியூசியம் மற்றும் பல…
அல்வர் நகரத்தில் பயணிகள் பலா குய்லா என்று அழைக்கப்படும் அல்வர் கோட்டைக்கு விஜயம் செய்யலாம். இது ஹசன் கான் மேவாடி என்பவரால் 1550ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
இதன் கட்டுமான வேலைப்பாடும் கம்பீரமான அழகியல் அம்சங்களும் பயணிகளை வெகுவாக கவர்கின்றன. ஜெய்போல், லக்ஷ்மண் போல், சூரத் போல், சந்த் போல், அந்தேரி கேட் மற்றும் கிருஷ்ணா கேட் போன்ற ஆறு நுழைவாயில்கள் இந்த கோட்டையில் உள்ளன.
சிட்டி பேலஸ் அல்லது விஜய் மந்திர் என்று அழைக்கப்படும் அரண்மனை அல்வர் நகரத்தின் மற்றொரு கட்டிடக்கலை அற்புதமாக அறியப்படுகிறது. இது ஒரு அருங்காட்சியகமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. விஜய் மந்திர் அரண்மனையில் 105 அழகான அறைகள், ரம்மியமான நந்தவனம் மற்றும் ஒரு ஏரி ஆகியன காணப்படுகின்றன.
ஜெய்சமந்த் ஏரி, சிலிசெர்ஹ் ஏரி மற்றும் சாஹர் ஏரி ஆகியன இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். மூஸி மஹாராணி கீ சாத்ரி, திரிபோலியா, மோட்டி தூங்க்ரி, பன்கர் இடிபாடுகள், கம்பெனி பாக், கிளாக் டவர், கவர்ன்மெண்ட் மியூசியம், ஃபதேஹ் ஜங், கலாகந்த் மார்க்கெட் மற்றும் நால்டேஷ்வர் ஸ்தலம் ஆகியவை இங்கு பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.
பயண வசதிகள்
அல்வர் நகரத்தை ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். அருகிலுள்ள விமானத்தளமாக ஜெய்ப்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் அமைந்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இணைப்பு சேவைகள் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இங்கு வரலாம். அல்வர் ரயில் நிலையம் டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களுடன் சிறந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள நகரங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளும் அல்வர் நகரத்திற்கு கிடைக்கின்றன.
அல்வர் பிரதேசத்தில் வறண்ட பருவநிலையே வருடமுழுவதும் நிலவுகிறது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவமே இங்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.