பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஒரு குறுநில மன்னராக இருந்த கெம்பே கவுடாவால் 1537- ஆண்டு, தற்சமயம் பெங்களூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணி
பெங்களூர் பகுதி முதலில் மேற்கத்திய கங்க வம்சத்தினராலும் அதன் பின்னர் ஹொய்சளர்களாலும் ஆளப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பிறகு ஹைதர் அலி அவர் காலத்திற்குப் பின் அவர் மகன் திப்பு சுல்தான் போன்றவர்களால ஆளப்பட்டது. ‘பெண்டகலூரு’ என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்த நகரத்தின் பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களால் பெங்களூர் என்று மாற்றப்பட்டு தற்சமயம் பெங்களூரு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் தோட்ட நகரம்(கார்டன் சிட்டி) என்று முன்னர் அழைக்கப்பட்ட பெங்களூர் தற்போது ஐடி (தகவல் தொழில் நுட்பம்) நிறுவனங்களின் கேந்திரமாக விளங்குவதால் இந்தியாவின் சிலிகான் வேலி என்று அந்தஸ்தை பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள பெங்களூர் நகரம் புவியியல் ரீதியாக தக்காண பீடபூமியின் ஒரு பகுதியான மைசூர் பீடபூமியில் மீது அமைந்துள்ளது. 741 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த மாநகரம் 58 லட்சம் மக்கள் தொகையை கொண்டு இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கமுள்ள நகரங்களில் மூன்றாவதாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3113 அடியில் (949 மீட்டர்) உள்ளதால் இது மிக இதமான இனிமையான பருவநிலையை பெற்றுள்ளது.
வறண்ட பிரதேச பருவநிலையை கொண்டுள்ள இந்த மாநகரம் வெப்பமான கோடையையும், அதிகமாக குளிரும் குளிர் காலத்தையும், அடிக்கடி மழையையும் பெறும் பருவ நிலை அம்சங்களையும் பெற்றுள்ளது. ஓய்வு பெற்றவர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் இந்த மாநகரம் ஓய்வு பெற்றபின் தம் வாழ் நாளை அமைதியாக இனிமையாக கழிக்க விரும்பும் பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த மக்களை ஈர்க்கிறது. இங்கு பொதுவாக வெப்பநிலை கோடைக்காலத்தில் 20⁰C இருந்து 36⁰C ஆகவும், குளிர் காலத்தில் 17⁰C இருந்து 27⁰C ஆகவும் காணப்படுகிறது.
போக்குவரத்தும் பிரயாண வசதிகளும்
பெங்களூருக்கு உள்ளேயும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பயணம் செய்வது மிக சுலபமாக உள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு அரசு பேருந்துகளையும், ஆட்டோ ரிக்ஷாக்களையும் மற்றும் வேன் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். தற்சமயம் மெட்ரோ ரயில் வசதியும் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாயு வஜ்ரா பேருந்து சேவைகள் பெங்களூர் விமான நிலையத்தையும் நகரத்தையும் இணைக்கின்றன. பெங்களூர் எல்லா முக்கிய பெருநகரஙளுடனும் சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கத்தால் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய தென்மேற்கு ரயில்வே பிரிவின் முக்கியமான கேந்திரங்களில் ஒன்றான பெங்களூரில் சிட்டி சென்ட்ரல், யஷ்வந்த்பூர், கண்டோன்மெண்ட் மற்றும் கே.ஆர் புரம் போன்ற ரயில் நிலையங்கள் உள்ளன. நகரத்திலிருந்து 40 கி.மீ விலகி தேவனஹள்ளி என்ற பகுதியில் அமைந்துள்ள பெங்களூர் விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளைக் கொண்டுள்ளது.
உள்ளூர் கலாச்சாரமும் பாரம்பரியமும்
பெங்களூர் மாநகரம் நவநாகரிக பன்முக கலாச்சாரத்தை கொண்டுள்ள போதிலும் பெரும்பான்மையான மக்கள் இந்து கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். பன்னாட்டு கலாச்சார இயல்பு இங்கு காணப்படுவதால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் இங்கு குடியேறி வாழ்கின்றனர். அதிகாரபூர்வ மொழியாக கன்னடம் பேசப்பட்டாலும் பெரும்பாலான பெங்களூர் வாசிகள் ஆங்கிலம் புரிந்து கொள்ளக்கூடியவர்களாகவும் நல்ல ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
பெங்களூரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற இதர திராவிட மொழிகளுடன் இந்தியும் பேசப்படுகிறது. எழுத்தறிவு விகிதாசாரத்தில் மும்பைக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை பெங்களூர் பெற்றுள்ளது (87%).
உன்னதமான பண்பாட்டுக் கலைப் பாரம்பரிய பின்னணியைப் பெற்றுள்ள இந்த நகரம் ரங்க சங்கரா, சௌடையா மெமோரியல் ஹால் மற்றும் ரவீந்திர காலஷேத்ரா போன்ற பாரம்பரிய கலை மற்றும் நவீன நாடகக்கலை தொடர்பான அமைப்புகளை ஆதரித்து அவை நிலைத்து நிற்பதற்கு உதவியுள்ளது.
வருடம் ஒரு முறை பெங்களூரில் நடத்தப்படும் ‘பெங்களூரு ஹப்பா’ எனும் நிகழ்ச்சி பல புதிய கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவும் நிகழ்ச்சியாக விளங்குகிறது. தீபாவளி மற்றும் கணேஷ் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் பெங்களூரின் சிறப்பான மதக்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றன.
முக்கிய மாநகரமாக பெங்களூரின் உயர்ச்சி
பெங்களூரில் பல முக்கிய தொழிற்சாலைகளும், தொழில் நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனங்களும் அமைந்துள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL), பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(BEML), ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்(HMT) போன்ற பிரபல நிறுவனங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. மற்றும் இந்திய அரசின் அதிகாரகாரபூர்வ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் (ISRO) அமைப்பின் தலைமை அலுவலகமும் இங்கு உள்ளது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகங்களையும் செயல் தளங்களையும் பிரம்மாண்ட அளவில் பெங்களூரில் நிறுவி இருப்பதால் நகரத்தின் பொருளாதாரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. இது தவிர சர்வதேச நிறுவன்ங்களான சாம்சங், எல்ஜி, ஐபிஎம் போன்றவையும் இங்கு தங்கள் அலுவலகங்களை உருவாக்கியுள்ளன. இங்குள்ள வேலை வாய்ப்புச் சூழல் காரணமாக உலகில் எல்லா பகுதிகளிலிருந்தும் பலர் இங்கு குடியேறியுள்ளதால் பெங்களூர் பல இனங்களும் பல சர்வதேச கலாசாரங்களும் கலந்து காட்சியளிக்கும் சமூகமாக மாறியுள்ளது.
இந்தியாவின் அறிவியல் கழகமான பெருமைமிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் (IISC) இங்கு அமைந்துள்ளது. அது தவிர மேலாண்மை பல்கலைகழகமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனஜ்மேண்ட்(IIM) மற்றும் எண்ணற்ற தொழில்நுட்ப, மருத்துவ, மேலாண்மை கல்லூரிகள் போன்றவை பெங்களூரில் உள்ளன.
ஏன் சுற்றுலாப்பயணிகள் பெங்களூரை முற்றுகையிடுகின்றனர்?
சிறந்த முறையில் மற்ற நகரங்களுடன் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கும் பெங்களூரில் ஜவஹர்லால் நேரு பிளானட்டேரியம், லால் பாக் மற்றும் கப்பன் பாக் என்றழைக்கப்படும் மிகப்பெரிய தோட்டப் பூங்காக்கள், அக்வாரியம் எனப்படும் மீன் காட்சியகம், வெங்கடப்பா ஆர்ட் காலரி, விதான சௌதா, பானர்கட்டா தேசிய பூங்கா போன்ற பல சுற்றுலா அம்சங்களும் ஸ்தலங்களும் நிரம்பியுள்ளன.
மேலும் பெங்களூரிலிருந்து முத்தியால மடுவு (முத்து பள்ளத்தாக்கு), மைசூர், சிரவணபெலகோலா, நாகர்கோல், பண்டிபூர், பேலூர் மற்றும் ஹலேபேட் போன்ற சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு செல்வது எளிதாக உள்ளது.
பெங்களூரில் எல்லா தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் ஏராளமான தங்குமிட வசதிகள் நிறைந்துள்ளன. லீலா பேலஸ், கோல்டன் லேண்ட்மார்க், லே மெரிடியன், தி தாஜ் மற்றும் லலித் அசோகா போன்ற உயர் ரக ஹோட்டல்களும் இதர எண்ணற்ற மத்திய தர ஹோட்டல்களும் இங்கு காணப்படுகின்றன.
பன்முக கலாச்சார சமூகத்தை கொண்டுள்ளதால் இங்கு சர்வதேச உணவு வகைகள் கிடைக்கின்றன. சாலையோரக் கடைகளிலில் துவங்கி சர்வதேச துரித உணவு விடுதிகள் வரை இங்கு எல்லாமே உள்ளன. மக் டொனால்ட், கே எஃப் சி, பீட்ஸா ஹட் போன்ற உணவகங்களின் கிளைகள் நகரெங்கும் அமைந்துள்ளன. தரமான உள்ளூர் உணவு வகைகளுக்கு எம்டிஆர் போன்ற உணவுகங்களும் உள்ளன. வடக்கிந்திய மற்றும் கிழக்கிந்திய உணவு வகைகளும் தாராளமாக கிடைக்கும்படி உணவு விடுதிகள் ஏராளம் உள்ளன.
ஃபோரம், கருடா மால், செண்ட்ரல் மற்றும் மந்த்ரி மால் போன்ற ‘மால்’கள் (பல அடுக்கு வணிக மையங்கள்) இங்கு பல்விதமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. எம்ஜி ரோடில் அமைந்துள்ள காவேரி எம்போரியத்தில் பாரம்பரிய சந்தன மர கைவினைப்பொருட்கள் மற்றும் சென்னப்பட்டணா மரப்பொம்மைகளை வாங்கலாம். இளம் தலைமுறையினர் அதிகம் நிறைந்துள்ள மாநகரம் என்பதால் இங்குள்ள இரவுக் கொண்டாட்டங்களும் கேளிக்கை வசதிகளும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.
இப்படி சுற்றுலாப்பயணிகளை கவரும் எண்ணற்ற அம்சங்களைக் கொண்டுள்ளதால் பெங்களூருக்கு சுற்றுலா செல்வது ஒரு ஒப்பற்ற ரசிக்கக் கூடிய அனுபவமாகவே கருதப்படுகிறது.