ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இந்த பரோக் கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் சோலன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒரு சிறிய கிராமமான இது 20ம் நூற்றாண்டில் இங்கு எழும்பிய குடியிருப்புப்பகுதிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் கல்கா-சிம்லா மீட்டர் கேஜ் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
பரோக் எனும் ஆங்கிலேய பொறியாளரின் பெயரால் இந்த ஸ்தலம் அழைக்கப்படுகிறது. இவர் ரயில் பாதைக்காக மலையை குடைந்து ஒரு சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு பொறுப்பேற்றிருந்தார்.
மலையின் இரு பக்கமிருந்தும் குடைந்து அந்த பாதையை அமைப்பது அவரது திட்டம். இருப்பினும் அளவீடுகளில் நிகழ்ந்த சில பிழைகளின் காரணமாகவோ என்னவோ இருபுறமிருந்தும் குடையப்பட்ட சுரங்கப்பாதைகள் ஒன்றை ஒன்று சந்திக்கவேயில்லை.
இந்த கட்டுமானப்பிழைக்காக 1ரூபாய் அபராதத்தை ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு விதித்தது. இப்படி ஒரு தோல்வியையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இந்த சுரங்கப்பாதைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பின் ஹெச். எஸ். ஹாரிங்க்டன் என்ற ரயில்வே சீஃப் இஞ்சினீயர் அந்த சுரங்கப்பாதை பணியை முடித்து வைத்தார். இந்த சுரங்கப்பாதை கல்கா-சிம்லா மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாக உள்ளது.
இதன் நீளம் 1143.61 மீட்டர் என்பது பிரமிக்கவைக்கும் உண்மையாகும். உலகிலேயே ஒரே நேர்ப்பாதையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை என்ற புகழையும் இது பெற்றுள்ளது.
கடமையில் தவறிவிட்டதை சுய கௌரவக்குறைவாக கருதி தற்கொலை செய்து கொண்ட அந்த மதிப்பிற்குரிய பரோக் என்ற ஆங்கிலேய பொறியாளரின் பெயரில்தான் இந்த ஸ்தலம் இன்றும் அழைக்கப்படுகிறது.
சிம்லாவுக்கு விஜயம் செய்யும் பெரும்பாலான பயணிகள் சண்டிகரிலிருந்து 60கி.மீ தூரத்தில் கல்கா-சிம்லா மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள இந்த பரோக் நகரத்தில் தங்கி விட்டே செல்கின்றனர்.
சூர் சந்த்னி எனும் சிகரம் இப்பகுதியின் பிரசித்தமான சுற்றுலா அம்சமாக உள்ளது. தக்ஷாய், விஷால் சிவா கோயில், டோலன் ஜி போன் மோனாஸ்ட்ரி மற்றும் ரேணுகா ஏரி போன்றவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
இவை தவிர, ஷோலோனி தேவி கோயில், சில்ரன்ஸ் பார்க் மற்றும் ஜவஹர் பார்க் போன்றவையும் இங்கு பயணிகளால் ரசிக்கப்படும் அம்சங்களாக உள்ளன.
சண்டிகர் மற்றும் சிம்லா விமான நிலையங்கள் பரோக் நகரத்திற்கு அருகில் உள்ளன. சிம்லா விமான நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் குல்லுவுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன.
சண்டிகர் விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருக்கு விமான சேவைகள் உள்ளன. ரயில் மூலமாக பயணம் செய்ய விரும்புபவர்கள் பரோக் ரயில் நிலையம் வரை பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
டெல்லி, சண்டிகர், சைல், கசௌலி, சோலன் மற்றும் சிம்லா போன்ற நகரங்களிலிருந்து பேருந்துச்சேவைகளும் பரோக் நகரத்திற்கு இயக்கப்படுகின்றன. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இடைப்பட்ட காலம் இந்த சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.