மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் 11-ஆம் நூற்றாண்டு நகரம் போஜ்பூர். மணற்கற்களால் ஆன முகடுகள் கொண்ட மத்திய இந்தியாவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். நகரின் குறுக்கே ஓடும் பெட்வா ஆறு, போஜ்பூரின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. போஜ்பூர், மத்தியபிரதேசத் தலைநகர் போபாலில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இரண்டு பெரிய அணைகள் இங்கு உள்ளன. பெரிய பாறைகளால் கட்டப்பட்ட மிகவும் தொன்மையான அணைகள் இவை. பெட்வா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் இந்த அணைகளால் ஏற்பட்டது தான் அங்கிருக்கும் ஏரி.
பரமர சாம்ராஜ்ய அரசரான போஜர், இந்தப் பகுதியை ஆண்டமையால், இந்த நகரத்திற்கு போஜ்பூர் என்ற பெயர் உண்டாயிற்று. போஜ அரசரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைகள் சுண்ணாம்பு மற்றும் மணற்கற்களைக் கொண்ட கட்டமைப்பைக் கொண்டது.
இந்த அணைகள், மணற்கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி வைத்தது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைந்திருப்பதை சைக்லோபியன் கட்டமைப்பு என்பர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் கட்டமைப்பு வல்லுனர்கள் பார்க்க வேண்டிய முக்கியமான அணைகளாக இவை விளங்குகின்றன.
போஜ்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
கிழக்கு சோம்னாத் என்றழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த போஜேஸ்வரர் திருக்கோவில் போஜ்பூரில் அமைந்துள்ளது. கோவில் கட்டமைப்பில் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இத்திருக்கோவில், நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு தலமாகும்.
சிறப்புமிக்க சைக்லோபியன் அணைகள், கட்டி முடிக்கப்படாத நிலையில் இருப்பதை இங்கு காண முடியும். இந்த நகரத்தின் அழகே, கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் அழகிய கட்டமைப்புக்கள் தான்.
அங்குள்ள கற்சுரங்கங்களில், கைகளால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்களை காண முடியும். சிற்ப வேலைகள் முடிவடைந்திருந்தால், இவைகள் அரண்மனைக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துசெல்லப்பட்டிருக்கும். அவை முடியாத நிலையில் இருப்பதால் அங்கேயே இருப்பதை காண முடிகிறது.
ஒரு நகரம் அந்த காலத்தில் செழிப்பாக இருந்திருக்கும். இப்போது அது இடிபாடுகளுடன் இருக்கும். இதனைத் தான் நாம் போதுவாக சுற்றுலாத் தலங்களில் பார்ப்போம். ஆனால் இங்கு கட்டியே முடிக்கப்படாத நகரமாக போஜ்பூர் இருப்பதைப் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரும்.
இவ்வாறு நிறைவடையாத வகையில் இருக்கும் கட்டமைப்புக்களில் ஒரு ஜைன கோவிலும் அடக்கம். போஜ்பூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் இருக்கும் ஊர் பிம்பேட்கா. அங்குப் பாறைகளில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் காண்பவரின் எண்ணத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
பிம்பேட்காவை உலகப் புராதனச் சின்னமாக அடையாளப்படுத்தியிருக்கிறது யுனஸ்கோ. இதுமட்டுமன்றி, நர்மதா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சேதானி கட்டமைப்பும், ஹோஷங்காபாத் கோட்டையும் மிகவும் சிறப்புவாய்ந்தவை.
பிம்பேட்காவில் இருந்து சுமார் 51 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அழகிய கட்டமைப்புக்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருபவையாக திகழ்கிறது.
போஜ்பூரில் என்ன வாங்கலாம் ? என்ன சாப்பிடலாம்?
கபாப், புத்தே கி கீஸ், மாவா-பட்டி, கோப்ரபாக் மற்றும் மல்புவா போன்றவை போஜ்பூரின் சிறப்புமிக்க உணவுகள். போஜ்பூரின் கைவினைப் பொருட்கள் மிகவும் புகழ்வாய்ந்தவை.
சுற்றுலா செல்பவர்கள் போஜ்பூரின் நினைவாக அவற்றை வாங்கி செல்கின்றனர். மேலும், கைவினைத் தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்தி மேம்படுத்த மத்தியபிரதேச ஹஸ்ட்ஷில்ப் இவாம் ஹத்கிரஹா விகாஸ் நிகாம் என்ற நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
போஜ்பூரை அடைய...
விமானம், ரயில், சாலை வழியாக போஜ்பூரை எளிதில் அடைய முடியும். போபாலில் விமானநிலையும் மற்றும் ரயில் நிலையம் உள்ளன. அதுமட்டுமல்லாமல், சுற்றுலாப் பேருந்து மற்றும் அரசுப் பேருந்துகளின் துணைகொண்டு போஜ்பூரை சிரமமின்றி அடையலாம்.