ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது.
வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புராதன நகரம் 3000 வருடங்கள் பழமையான தொன்மையை கொண்டுள்ளது.
இந்த புபனேஷ்வர் நகர்ப்பகுதியில் 2000 கோயில்கள் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த புராதன நகரத்துக்கு ‘இந்தியாவின் கோயில் நகரம்’ எனும் சிறப்புப்பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது.
இங்கு காணப்படும் கோயில்கள் யாவற்றிலும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை நுணுக்கங்கள் காட்சியளிப்பது ஒரு அற்புதமான சிறப்பம்சமாகும்.
புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று கோயில் நகரங்களும் ‘ஸ்வர்ண திரிபுஜா’ (தங்க முக்கோணம்) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அருகருகே அமைந்துள்ள இவை முக்கியமான சுற்றுலா கேந்திரங்களாக உலகப்பிரசித்தி பெற்று விளங்குகின்றன.
காலத்தின் கரங்கள் தீண்டாத சிற்பக்கலை சௌந்தர்யம்!
லிங்கராஜ் என்ற சிவபெருமானின் அவதாரம் வீற்றிருக்கும் ஸ்தலமாக இந்த புபனேஷ்வர் நகரம் கருதப்படுகிறது. புராதன கோயிற்கலை மரபுகளும் நுணுக்கங்களும் பாரம்பரியமாக செழித்து விளங்கிய நகரமாக இது ஒரு காலத்தில் இருந்திருக்கிறது.
இந்த பிரதேசத்தின் கோயிற்கலை பாணி மற்றும் கட்டிடக்கலை தொழில் நுட்பங்கள் போன்றவை வேறெங்கும் காண முடியாத தனித்தன்மையான அழகம்சங்கள் மற்றும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் நுணுக்கங்களுடன் காட்சியளிக்கின்றன.
இங்குள்ள கோயில்களை முதல் முறையாக தரிசிக்கும்போது நாம் அனுபவிக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். இப்படியும் கற்களில் கலையம்சங்களை நம் முன்னோர் வடித்தார்களா என்று பெருமிதம் நம் மனதில் நிறைகிறது.
அதுமட்டுமல்லாமல், நம்ப முடியாத அளவுக்கு காட்சியளிக்கும் இந்த கலைப்படைப்புகளின் பிரம்மாண்டமோ நம்மை மேலும் திகைப்புக்குள்ளாக்கி விடுகிறது.
கட்டிடக்கலை பிரியர்களும், வரலாற்று ரசிகர்களும், சுற்றுலா விரும்பிகளும், மானுட நாகரிக ஆராய்ச்சியாளர்களும், ஆன்மிக யாத்ரீகர்களும், கலாரசிகர்களும் வாழ்நாளில் ஒருமுறையாவது விஜயம் செய்ய ஸ்தலங்களில் இந்த புபனேஷ்வர் நகரமும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.
புபனேஷ்வர் நகரம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள்
புபனேஷ்வர் நகர சுற்றுலாவின்போது பயணிகள் பார்த்து ரசிப்பதற்கான ஏராளமான அம்சங்கள் காத்திருக்கின்றன. ஒடிஷா மாநிலத்தின் பெரிய நகரமான புபனேஷ்வரில் ஏரிகள், குகைகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் அணைகள் போன்றவை நிரம்பியுள்ளன.
இவை தவிர பழமையான கோயில்களான லிங்கராஜ் கோயில், முக்தேஷ்வர் கோயில், ராஜாராணி கோயில், இஸ்க்கான் கோயில், ராம் மந்திர், ஷிர்டி சாய் பாபா மந்திர், ஹிராபூர் யோகினி கோயில் போன்றவை ஒடிஷா கோயிற்கலை பாரம்பரியத்தின் சான்றுகளாக வீற்றிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல்லாமல் புபனேஷ்வர் நகரின் எழிலைக்கூட்டும் வகையில் பிந்து சாகர் ஏரி, உதயகிரி மறும் கண்டகிரி குகைகள், தௌலிகிரி, சந்தகா காட்டுயிர் சரணாலயம், அத்ரி வெந்நீர் ஊற்று ஸ்தலம் போன்ற எராளமான இயற்கை அம்சங்கள் நிறைந்துள்ளன.
இளைஞர்கள் மற்றும் முதியோரை கவரும் வகையில் பலவகையான சுற்றுலாக்கவர்ச்சி அம்சங்கள் புபனேஷ்வரில் நிறைந்துள்ளன. வரலாறு மற்றும் புராதன இந்தியா குறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்குள்ள ஒடிசா மாநில அரசு அருங்காட்சியகம், தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ் போன்றவற்றுக்கு விஜயம் செய்யலாம்.
இயற்கைக்காட்சிகளை ரசிக்க விரும்புவர்களுக்கு ஏற்ற வகையில் இங்கு ஏராளமான பூங்காக்களும் உள்ளன. இவற்றில் பிஜு பட்நாயக் பார்க், புத்த ஜயந்தி பார்க், ஐ.ஜி.பார்க், ஃபாரெஸ்ட் பார்க், காந்தி பார்க், ஏகாம்பர கானன், ஐ.எம்.எஃப்.ஏ பார்க், கரவேலா பார்க், எஸ்.பி. முகர்ஜி பார்க், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பார்க் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
விளையாட்டு மற்றும் அறிவியல் அம்சங்களில் ஆர்வம் உள்ளவர்கள் ரீஜனல் சைன்ஸ் சென்டர், பத்தனி சமண்டா பிளானட்டேரியம் மற்றும் கலிங்கா ஸ்டேடியம் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்யலாம். நந்தன்கானன் விலங்கியல் பூங்கா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும்.
மேலும், பீப்லி எனும் அழகு கிராமம், தேராஸ் அணை, பயா பாபா மத், சிசுபால்கர், பி.டி.ஏ நிக்கோ பார்க், ஃபார்ச்சூன் சிட்டி, இன்ஃபோ சிட்டி போன்றவை புபனேஷ்வர் நகரின் இதர கவர்ச்சி அம்சங்களாகும்.
ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏற்ற நகரமாக இது திகழ்வது மட்டுமல்லாமல், சுற்றுலாப்பயணிகள் ஞாபகார்த்தமாக வாங்கிச்செல்வதற்கு ஏராளமான உள்ளூர் கைவினைக்கலை பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. துணிவகைகள், பித்தளை மற்றும் உலோக அலங்கார பொருட்கள், மரப்பொருட்கள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
புபனேஷ்வர் நகரில் உள்ள கோயில்கள்
புபனேஷ்வர் எனும் இந்நகரத்தின் பெயரானது சிவபெருமானை குறிக்கும் திரிபுவனேஷ்வர் எனும் சொல்லிலிருந்து பிறந்துள்ளது. எனவே இங்குள்ள கோயில்கள் யாவுமே சிவபெருமானை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றன.
ஒரு சில கோயில்கள் மட்டுமே இதர தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிவன் கோயில்களில் முக்கியமான கோயில்களாக அஷ்டசாம்பு கோயில்கள், பிரிங்கேஷ்வர சிவா கோயில், பியாமோகேஷ்வரா கோயில், பாஸ்கரேஷ்வர் கோயில், கோகர்ணேஷ்வர சிவா கோயில், கோசகரேஷ்வர் கோயில், சர்வாத்ரேஷ்வரர் கோயில், சிவதீர்த்த மடம், ஸ்வப்னேஷ்வர சிவா கோயில், ஜலேஷ்வர் சிவா கோயில், உத்தரேஷரா சிவா கோயில், யமேஷ்வர் கோயில் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இன்னும் பல தொன்மையான கோயில்களுக்கும் புபனேஷ்வர் நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. ஐசன்யேஷ்வர சிவா கோயில், அஷ்டசாம்பு கோயில், பாரதி மாதா கோயில், பிரம்மேஷ்வர கோயில், பிருகுதேஷ்வர் சிவா கோயில், சம்பகேஷ்வர சந்திரசேகர மஹாதேவா கோயி, சக்ரேஷ்வரி சிவா கோயில், தீஷீஷ்வர சிவா கோயில், சிந்தாமணீஸ்வர சிவா கோயில், கங்கேஸ்வர சிவா கோயில், கபிலேஷ்வர சிவா கோயில், லாபேஷ்வர சிவா கோயில், லக்ஷேஷ்வர சிவா கோயில், மதனேஷ்வர் சிவா கோயில், மங்களேஸ்வர சிவா கோயில், நாகேஸ்வரா கோயில், பூர்வேஸ்வர சிவா கோயில், சர்வாத்ரேஸ்வரா கோயில், சிவதீர்த்த மாதா, கோசகரேஸ்வர் சிவா கோயில், சுபர்னேஸ்வர சிவா கோயில், சுகதேஷ்வர் கோயில் போன்றவை புபனேஷ்வர் நகரத்தில் பயணிகள் தரிசிக்க வேண்டிய இதர முக்கியமான கோயில்களாகும்.
சிவபெருமானுக்கான கோயில்கள் மட்டுமன்றி கிருஷ்ணர் மற்றும் சண்டி போன்ற தெய்வங்களுக்கான கோயில்களும் இந்நகரத்தில் பரவலாக அமைந்துள்ளன.
இவற்றில் ஆனந்த வாசுதேவ கோயில், அக்கடசண்டி கோயில், பிரம்மா கோயில், தேவசபா கோயில் துலாதேவி கோயில், காய்ஞ்சி கோயில், காந்தி கரபாடு விஷ்ணு கோயில், கோபால் தீர்த்த மடம், ஜன்பத் ராம் மந்திர், ராமேஷ்வர் தேவுலா, சுகா கோயில், வைட்டல் தேவுலா, விஷ்ணு கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
சுற்றுலாவுக்கேற்ற பருவம்
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் புபனேஷ்வர் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. இந்த மாதங்களில் நிலவும் குளிர்காலப்பருவம் வெளியில் சுற்றிப்பார்க்க வசதியான சூழலை அளிக்கிறது.
எப்படி செல்லலாம் புபனேஷ்வருக்கு?
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள முக்கியமான பாரம்பரிய சுற்றுலாத்தலம் என்பதால் இந்நகருக்கான் போக்குவரத்து வசதிகளில் எந்த குறையுமில்லை. விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் இந்த நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.