சவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார். சம்பக் மலரின் நிறத்தை ஒத்த தோற்றத்துடன் இந்தப்பகுதியின் பாறைகள் காணப்படுவதால் இந்தப்பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
பவகாத் எனும் கோட்டை ஒன்று இந்த சம்பானேர் நகரத்திற்கு மேலே கிச்சி சௌஹான் ராஜபுதன வம்சத்தினரால் கட்டப்பட்டிருந்தது. இந்த கோட்டையை கைப்பற்றிய மஹ்மூத் பெக்டா மன்னர் அத்துடன் இந்த சம்பானேர் நகரத்தின் பெயரையும் மஹ்மூதாபாத் என்று மாற்றி தனது தலைநகரமாக்கிக்கொண்டு தனது வாழ்நாளின் அடுத்த 23 ஆண்டுகளை இந்த நகரத்தின் அலங்கார புதுப்பிப்புகளுக்காக செலவிட்டுள்ளார்.
பின்னாளில் இந்த ராஜ்ஜியம் முகலாயர் வசம் வந்தபோது தலைநகரம் திரும்பவும் அஹமதாபாத் நகரத்திற்கு மாற்றப்பட்டது. அத்துடன் இந்த சம்பானேர் நகரத்தின் பொலிவும் முக்கியத்துவமும் குறைந்து மறைந்து போனது.
அங்கு வீற்றிருந்த அற்புதமான கட்டிடச்சின்னங்கள் வனப்பகுதிக்குள் மூழ்கி மறைந்து கிடந்தன. பின்னர் ஆங்கிலேயரது கணக்கெடுப்புகளின்போது இந்த நகரத்தின் இருப்பு வெளிக்கொணரப்பட்டது.
அற்புதமான நகர வடிவமைப்புகள் மற்றும் கட்டிடச்சின்னங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் இந்த வரலாற்று நகரத்தை நேரில் தரிசிக்கும் போது நாம் அனுபவிக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
அப்படி ஒரு கலையம்சமும் அதீத கட்டிடக்கலை நுணுக்கமும் இந்த ஸ்தலத்தில் வீற்றிருக்கும் சின்னங்களில் ஒளிர்கின்றன. எங்கே அவர்கள்? எங்கே அந்த கட்டிடக்கலை பாரம்பரியம்? ஏன் இந்த நகரம் அழிந்தது? ஏன் இப்படி வெட்டவெளியில் கிடக்கின்றன இந்த சின்னங்கள்? என்று கேள்விகளுடன் நம் இதயம் படபடக்க தொடங்கி விடுவது நமக்கே புரியாத விந்தை.
ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சில அற்புதமான கட்டமைப்புகளின் நுணுக்கங்களை ஒத்த கட்டிடக்கலை அமைப்புகளை இந்த அற்புத ஸ்தலத்தில் நீங்கள் தரிசிக்கலாம்.
ஏன் இவை பிரபல்யமடையவில்லை என்றும் உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. எங்கோ இருக்கும் தூண்களையும், பாலங்களையும் பற்றி படிக்க வைக்கப்பட்டிருக்கும் நமக்கு இந்திய மண்ணில் குஜராத்தில் வீற்றிருக்கும் அற்புத வரலாற்று சின்னங்கள் குறித்த அறிமுகம் வாய்க்காதது ஏன்? இந்த கேள்வி உங்கள் மனதை ஆக்கிரமிக்கக்கூடும்.
முக்கிய கவர்ச்சி அம்சங்கள்
மனம் மயங்க வைக்கும் இந்த சம்பானேர் வரலாற்று ஸ்தலத்தில் மசூதிகள், சிக்கந்தர் ஷா கல்லறை, ஹலோல், சகர் கான் தர்க்கா, மகாய் கொத்தார் அல்லது நவ்லக்கா கொத்தார், சிட்டாடல், ஹெலிகல் ஸ்டெப்வெல் எனும் படிக்கிணறு, செங்கல் கல்லறை, பவகாத் கோட்டை, கோட்டை வாயில் அமைப்புகள், கோயில்கள், ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயம், கெவ்தி ஈகோ கேம்ப்சைட், தன்பாரி ஈகோ கேம்ப்சைட் போன்ற ஏராளமான அம்சங்கள் இங்கு வரலாற்று ஆர்வமும், கலா ரசனையும் கொண்ட பார்வையாளர்களை வரவேற்கின்றன. இவை தவிர பவகாத் கோட்டையின் சிதிலமடைந்த கோட்டைச்சுவர்களின் மிச்சங்களையும் இங்கு காணலாம்.
வடோதரா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த சம்பானேர் வரலாற்று ஸ்தலம் அமைந்திருக்கிறது. பேருந்து வசதிகள் மற்றும் இதர வாடகை சுற்றுலா வாகனங்கள் இந்த மூலமாக இந்த இடத்திற்கு வரலாம்.
யுனெஸ்கோ அமைப்பு 2004ம் ஆண்டில் இந்த வரலாற்று ஸ்தலத்தை உலகப்பாரம்பரிய வரலாற்று ஸ்தலமாக அங்கீகரித்துள்ளது மற்றொரு பெருமைக்குரிய விஷயமாகும்.