Search
  • Follow NativePlanet
Share

சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்!

20

தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது.  நாற்திசையிலும் நான்கு பிரம்மாண்ட கோபுர வாசல்களுடனும் வெகு விரிவான கட்டிடக்கலை அம்சங்களுடனும் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான கோயில் வளாகம் நடுநாயகமாக வீற்றிருக்க - அதைச்சுற்றி இந்த சிறுநகரம் உருவாகியிருக்கிறது. இக்கோயிலில் நடராஜர் என்ற பெயருடன் சிவபெருமான் குடிகொண்டுள்ளார். 

தமிழ்நாட்டில் திராவிடபாணி கோயிற்கலை அம்சங்கள் நிரம்பிய கோயிலும் அதைச்சுற்றியுள்ள நகரமும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இந்த சிதம்பரம் நகரத்தை குறிப்பிடலாம்.

பரபரப்பு மற்றும் சந்தடி ஏதுமின்றி  அமைதியான சூழலைக்கொண்டிருக்கும் இந்த கோயில் நகரம் ஆன்மீக யாத்ரீகர்களுக்கும், கோயிற்கலை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான யாத்ரீக சுற்றுலாஸ்தலமாக திகழ்கிறது.  

பெயர்க்காரணம்

“செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்றசெல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயசெல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே…”

என்று திருஞானசம்பந்தர் தில்லை என்றழைக்கப்பட்ட சிதம்பரம் நகரின் புகழ் பாடியுள்ளார்.

தில்லை மரங்கள் அடர்ந்த நந்தவனப்பகுதியாக இருந்த காரணத்தால் ஆதியில் ‘தில்லை’ என்ற பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த தில்லையில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட பிரம்மாண்டமான ‘நடராஜப்பெருமான் கோயில்’ வீற்றிருந்த காரணத்தால், நாளடைவில் ‘திருசிற்றம்பலம்’ என்ற கோயிலின் பெயரே ஊரின் பெயராகவும் மாறியது.

காலப்போக்கில் இது ‘சிற்றம்பலம்’ என்று மருவியும் ‘சிதம்பரம்’ என்று திரிந்தும் வழக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. இப்பெயருக்கு வேறு சில விளக்கங்களும் தரப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்லையம்பலம் என்ற பெயரிலும் புலவர்கள் இந்நகரத்தை தங்கள் பாடல்களில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

ஞானகாசம், பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், திருச்சித்திரகூடம் போன்ற பெயர்களாலும் இது ஆன்மீகரீதியாக அறியப்படுகிறது. பெறும்பொற்றப்புலியூர் எனும் ஆதிப்பெயரும் இந்த ஊருக்கு வழங்கிவந்திருக்கிறது.

வரலாற்றுப்பின்னணி

சோழபூமியின் மிக முக்கியமான குலக்கோயில் நகரமாகவும் சோழ ராஜ வம்சத்தினரின் அடையாளத்தலமாகவும் இந்த நகரம்  திகழ்ந்திருக்கிறது.  இந்த தில்லை எனப்படும் திருச்சிற்றம்பலம் சோழ சாம்ராஜ்ஜியம் ஆண்ட பூமியில், கடற்கரையை ஒட்டி கொள்ளிடம் என்ற பெயரில் அழைக்கப்படும் அகண்ட காவிரியானது வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்திற்கு அருகில் வீற்றுள்ளது.

சிதம்பரம் நகரத்திலிருந்து தஞ்சை ஊடாக உறையூர் வரை காவிரியையும், கொள்ளிடம் ஆற்றையும் ஒட்டி அவற்றின் படுகைப்பகுதிகளில் சோழ ராஜ்ஜியத்தின் பாரம்பரிய தடயங்கள்  ஒரு பாதை போன்று படிந்து கிடப்பதை இப்பிரதேசங்களிலுள்ள ஊர்ப்பெயர்கள், அவற்றின் அமைப்பு மற்றும் புராதன ஆலயங்கள் போன்றவற்றிலிருந்து எளிதாக புரிந்து கொள்ளலாம். 

சிதம்பரத்திலிருந்து கல்லணை வரையில் கொள்ளிட ஆற்றின் வடகரையானது அக்காலத்தில் ஒரு ராஜபாட்டையாக பயன்பட்டிருக்கக்கூடும் என்பதையும் ஊகிக்க முடிகிறது.

2ம் நூற்றாண்டு தொடங்கி 13ம் நூற்றாண்டு வரை இந்த தில்லை மாநகர் சோழர்களின் முக்கிய நகரமாகவும் பிற்காலச்சோழர் காலத்தில் மண்டலத்தலைநகராகவும் திகழ்ந்திருக்கிறது.

சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயில் 5 முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக புராணிக ரீதியாக அறியப்படுகிறது. அதாவது பஞ்சபூத ஸ்தலங்களில் இதுவும்  ஒன்று என்பது ஐதீகம்.

நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என்பவையே அந்த பஞ்சபூதங்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவற்றில் நீருக்கான ஸ்தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலும், நிலத்துக்கான ஸ்தலமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலும், காற்றுக்கான ஸ்தலமாக காளஹஸ்தி சிவன் கோயிலும், நெருப்புக்கான கோயிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலும், ஆகாயத்துக்கான கோயிலாக இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலும் ஐதீக மரபில் இடம் பெற்றுள்ளன.

சிவபெருமான் நடன திருக்கோலத்தில் நடராஜ ரூபமாக சிதம்பரம் கோயிலில் குடி கொண்டுள்ளார். ஏனைய சிவத்தலங்களில் சிவலிங்கமாக மட்டுமே சிவன் வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலில் சிவனும் மஹாவிஷ்ணுவும் சேர்ந்தே வீற்றிருப்பது மற்றொரு சிறப்பாக சொல்லப்படுகிறது. எனவே சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரண்டு ஆன்மீகப்பிரிவுகளை சார்ந்தோரும் இந்த கோயிலுக்கு விரும்பி விஜயம் செய்கின்றனர். மஹாவிஷ்ணு இக்கோயிலில் கோவிந்தராஜப்பெருமாளாக வீற்றுள்ளார்.

நடராஜர் கோயில் மட்டுமல்லாமல் இளமையாக்கினார் கோயில், தில்லைக்காளியம்மன் கோயில் போன்றவையும் சிதம்பரத்தில் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆன்மீக அம்சங்களாக அமைந்துள்ளன.

சிதம்பரம் நகரின் மற்றொரு சிறப்பம்சம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகும். பிரசித்தமான இந்த தனியார் கல்வி நிறுவனம் சிதம்பரம் நகரின் மற்றொரு அடையாளமாகவே மாறியுள்ளது. 

சிதம்பரம் நகருக்கு அருகில் ராமலிங்க அடிகள் என்று அறியப்படும் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமம் மற்றும் அவர் நிறுவிய சமர சன்மார்க்க சத்திய ஞானசபை அமைந்துள்ள வடலூர் நகரம் போன்றவை அமைந்துள்ளன. வடலூருக்கு அருகிலேயே இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச்சுரங்கம் அமைந்துள்ள நெய்வேலி நகரமும் அமைந்திருக்கிறது.

சிதம்பரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்நகரத்திற்கு அருகிலுள்ள சிவபுரி, திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஜயங்கொண்டசோழபுரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவேட்களம், திருப்புன்கூர் போன்ற ஊர்களுக்கும் சிதம்பரத்தில் இருந்தபடி விஜயம் செய்யலாம். இந்த ஊர்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு அம்சத்தை விரும்புகின்றவர்கள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் எனும் உப்பங்கழி வனப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கால்வாய்களில் படகுச்சவாரியில் ஈடுபடலாம்.

இந்தியாவிலுள்ள உப்பங்கழி வனப்பகுதிகளில் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக்காடு முக்கியமான இயற்கை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வீராணம் ஏரி எனும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மேற்கே உள்ளது.

காட்டுமன்னார்கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் பயணிகள் இந்த ஏரியை பார்த்து ரசிக்கலாம். இவை தவிர,  சிதம்பரம் நகரில் ஷாப்பிங் அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. தங்கப்பூச்சு நகைத்தயாரிப்பில் இந்நகரம் பாரம்பரியமாக புகழ் பெற்று அறியப்படுகிறது.

சந்தடியற்ற நகரம் என்பதால் கோடைக்காலத்திலும் கூட சிதம்பரத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலப்பருவம் கோயிற்பகுதியை நன்றாக பார்த்து ரசிக்க உகந்ததாக இருக்கும்.

சென்னையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே உள்ளதால் போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை. ரயில் போக்குவரத்து வசதிகளும் சிதம்பரத்திற்கு நல்ல முறையில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் சிதம்பரத்திற்கு சுலபமாக பேருந்துகள் மூலம் வரலாம்.

தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் விசேஷ அம்சங்களை கொண்டவை என்றாலும் நடனக்கோலத்தில் நடராஜராக சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த சிதம்பரம் நகரம் தமிழ்நாட்டில் உள்ளோர் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலய நகரமாகும்.

ஆன்மீக அம்சங்களை கடந்து சிதம்பரம் கோயிலில் திராவிட வரலாற்று உன்னதங்களும், கலைப்பாரம்பரியமும் ஒளிர்வதை இங்கு ஒரு முறை விஜயம் செய்தால் உணர்ந்து ரசிக்க முடியும்.

சிரமத்தை பார்க்காமல் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள எல்லா கோயில் ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்வது மன அமைதியை தருவதோடு மட்டுமல்லாது மண்ணின் வரலாற்றுத்தடங்களை தரிசித்த ஒப்பற்ற நிறைவையும் அளிக்கும்.

சிதம்பரம் சிறப்பு

சிதம்பரம் வானிலை

சிறந்த காலநிலை சிதம்பரம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சிதம்பரம்

  • சாலை வழியாக
    சாலை மார்க்கமாகவும் சிதம்பரம் நகரம் மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிதம்பரத்தை அடையலாம். இப்படி பயணிக்கும்போது பாண்டிச்சேரி நகரத்தையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது மற்றொரு விசேஷம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் சிதம்பரம் நகருக்கு மாநில அரசுப்போக்குவரத்துக்கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர சென்னையிலிருந்து சொகுசுப்பேருந்து சேவைகளும் கிடைக்கின்றன. திருச்சி, மதுரை, சேலம், கோயமுத்தூர், தஞ்சாவூர் போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து மிகஎளிதாக பேருந்துகள் மூலம் சிதம்பரம் நகருக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிதம்பரம் நகருக்கு ரயில் மார்க்கமாக மிக எளிதாக பயணம் மேற்கொள்ளலாம். தற்போது புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதை இந்நகரத்தின் வழியே செல்கிறது. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இவ்வழியே செல்வதால் ரயில்பயணம் மிக சௌகரியமாக இருக்கும். சென்னை எக்மோரிலிருந்தும், தாம்பரத்திலிருந்தும் சிதம்பரத்திற்கான ரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிதம்பரத்திற்கு அருகில் சென்னை விமான நிலைய வளாகம் 250 கி.மீ தூரத்தில் மிக முக்கியமான விமானப்போக்குவரத்து கேந்திரமாக அமைந்துள்ளது. இதில் அண்ணா சர்வதேச விமானச்சேவை வளாகம் மற்றும் காமராஜ் உள்நாட்டு விமானச்சேவை வளாகம் என்று இரண்டு பிரத்யேக பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு வெளிநாட்டு நகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் உள்நாட்டு சேவைகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் முற்றிலும் புதிய வடிவமைப்புடன் சர்வதேசத்தரத்துடன் சென்னை விமான நிலையம் வளாகம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri