அமராவதி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிக்கல்தரா நகரம் இங்குள்ள காட்டுயிர் சரணாலயத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த சிக்கல்தரா பிரதேசம் கடல்மட்டத்திலிருந்து 1120 உயரத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான காப்பி விளையும் பகுதியாகவும் புகழ் பெற்றுள்ளது.
சிக்கல்தரா 1823ம் ஆண்டு ஹைதராபாத் படைப்பிரிவை சேர்ந்த கேப்டன் ராபின்சன் என்பவரால் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதேசத்தைப்போலவே காட்சியளித்த இந்த சிக்கல்தரா பிரதேசம் அவரை மிகவும் கவர்ந்துள்ளது.
மேலும் ஒரு அறியப்படாத தகவல் என்னவெனில் இந்த சிக்கல்தராவை இந்தியத்தலைநகராக ஆக்கலாம் என்று அப்போதைய ஆங்கிலேய ஆட்சியின் போது ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டது என்பதாகும். ஆனால் அந்த ஆலோசனை செயல்படுத்தப் படவில்லை.
ஒரு பீடபூமிப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சிக்கல்தரா நகரம் தன் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதையை கொண்டுள்ளது. ஹிந்து புராண மரபுப்படி இந்த சிக்கல்தரா பிரதேசம் கீசகா என்ற மன்னனால் ஆளப்பட்டு வந்ததாகவும் பாண்டவ சகோதரனான பீமனால் இந்த கீசகா வதம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி கொல்லப்பட்ட கீசகனை இங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் பாண்டவர்கள் வீசி எறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே சிக்கல்தரா எனும் இந்த பெயரில் சிக்கல் எனும் சொல் கீசகனைக் குறிப்பதாகவும், தரா என்பது ஆழமான பள்ளத்தாக்கை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த ஸ்தலம் கிருஷ்ணபஹவான் ருக்மணியை அழைத்து வந்த இடமாகவும் சொல்லப்படுகிறது.
சிக்கல்தரா – காட்டுயிர்களின் சொர்க்கம்
இந்த சிக்கல்தரா பகுதி காட்டுயிர்களின் சொர்க்கம் என்று சொல்லும்படி காட்டுயிர் அம்சங்களால் நிரம்பியுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் காட்டுயிர் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பலவிதமான விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் இந்த பிரதேசத்தில் வசிக்கின்றன.
சிக்கல்தரா காட்டுயிர் சரணாலயத்தில் பறக்கும் அணில், எலிமான், முள்ளம்பன்றி, கருங்குரங்கு, கலைமான், நீல எருது, இந்திய காட்டெருமை, காட்டு நாய், சிறுத்தை, எறும்புத்திண்ணி, ரீசஸ் குரங்கு, காட்டுப்பன்றி, தேன்கரடி, புள்ளிமான், குரைக்கும் மான், சாம்பார் மான், கரடி மற்றும் புலி போன்ற ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.
தாவர வகைகளில் இலுப்பை, தேக்கு, ரப்பர், அயின், குசும், மூங்கில் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இந்த சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மேல்காட் புலிகள் பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் 82 புலிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
சிக்கல்தரா ஸ்தலத்தின் இயற்கை வனப்பை இங்குள்ள தேவி பாயிண்ட், ப்ராஸ்பெக்ட் பாயிண்ட் மற்றும் ஹரிக்கேன் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்களிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.
நீங்கள் ஒரு வரலாறு மற்றும் கலை ஆர்வலராக இருக்கும் பட்சத்தில் இங்குள்ள நர்னலா கோட்டை மற்றும் கவில்கர் கோட்டை இரண்டையும் பார்ப்பதற்கு மறந்துவிடாதீர்கள்.
இந்த இரண்டு கோட்டைகளும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. புராதன இந்தியாவின் உன்னதமான கலைப் பாரம்பரியத்தைக்காட்டும் சான்றுகளாக இவை காணப்படுகின்றன.
இன்னும் சில தகவல்கள்
சிக்கல்தராவின் பருவநிலை கடற்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது. வெப்பநிலை அதிகமாக உயர்வதுமில்லை அதிகமாக குறைவதுமில்லை. கோடைக்காலத்தில் அதிக உஷ்ணமில்லாத மிதமான சீதோஷ்ணநிலையே நிலவுகிறது.
மழைக்காலத்தில் இப்பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதாவது மழையானது ஒரு மாயசக்தி போன்று சிக்கல்தரா பகுதியை பசுமையாக மாற்றிவிடுகிறது. குளிர்காலமானது இப்பகுதியின் இயற்கை நடைப்பாதைகளில் பயணம் மற்றும் சிற்றுலாக்களை மேற்ககொள்ள ஏற்றவாறு மிக குளுமையாகவும் இதமாகவும் உள்ளது.
சிக்கல்தாரா பகுதி விமானம், ரயில் மற்றும் சாலை போன்ற போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாக எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது. அகோலா விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும்.
ரயில் மூலமாக செல்ல வேண்டியிருப்பின் அருகிலேயே பட்னேரா ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து வேன்கள் மூலம் சிக்கல்தராவை அடையலாம். சாலை மார்க்கமாக எனில் காரில் செல்வதும் எளிது.
அரசுப்போக்குவரத்து மற்றும் தனியார் சுற்றுலாப்பேருந்துகளும் கிடைக்கின்றன என்றாலும் இதர போக்குவரத்து வசதிகள் சௌகரியமான பயணத்தை அளிக்கலாம்.
இயற்கை அன்னையின் உன்னத படைப்புகளை ரசிக்கும் மனோபாவம் கொண்டோர்க்கு இந்த சிக்கல்தரா ஸ்தலம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இது பலவகையான விலங்குகள் மற்றும் பறவைகள் உறையும் இடமாக உள்ளது.
மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களுக்கு வெகு அருகே உள்ள இந்த சுற்றுலாத்தலம் எப்போது தென்றல் வீசும் சூழலைக்கொண்டுள்ளது. இயற்கை எழிலும் காட்டுயிர் அம்சங்களும் உங்களுக்கு பிடித்தமானவை என்றால் கிளம்புங்கள் உடனே இந்த எளிமையான சிக்கல்தரா எனும் சுற்றுலாத்தலத்துக்கு.