மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம். இந்த நகரம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் இருப்பதால் பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக சிப்லுன் அருகேதான் வாகனங்களை நிறுத்தி விட்டு சற்றுநேரம் இளைப்பாறுவார்கள். இதன் காரணமாக இந்த நகரம் மெல்ல மெல்ல ஒரு சுற்றுலா மையமாக மாறிவிட்டது. மேலும், வஷிஷ்டி நதியின் கரையோரத்தில் அமைந்திருப்பதால், படகு சவாரி போன்றவை இங்கு பிரபலம். அதனால் சிப்லுன் நகரம், பயணிகள் மத்தியில் இன்று ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
பெருநகரங்களில் வாழும் மக்கள் தங்களின் அலுத்துப் போன இயந்திர வாழ்க்கைக்கு மிகச் சிறந்த நிவாரமானாக சிப்லுன் நகரை கருதுகிறார்கள். இந்நகரத்தின் உணவு வகைகளும், கர்நேஷ்வர் ஆலயம் போன்ற ஸ்தலங்களும் அவர்களுக்கு அருமருந்தாகவே இருந்து வருகிறது.
இந்த நகரத்தின் எழுத்தறிவு விகிதம் 80 சதவீதம் அளவு இருப்பதோடு, சிப்லுன் நகர மக்கள் பழகுவதற்கும் இனிமையானவர்கள். அதோடு சிப்லுன் நகரவாசிகள், சுற்றுலா வரும் பயணிகளின் மனமறிந்து, கனிவான முறையில் உங்களுக்கு உதவிகளும் செய்வார்கள்.
மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர், சிப்லுன் நகரத்தில்தான் வசித்ததாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே இந்நகரம் 'பரசுராமரின் இல்லம்' எனும் பொருளில் சிப்லுன் என்று மராட்டிய மொழியில் அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் சிறப்புமிக்க கோயில்கள் சிலவற்றுக்கு உறைவிடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் சிப்லுனில் 1670-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவால்கோட் கோட்டை பயணிகளிடையே மிகப் பிரபலம்.
அதோடு சிப்லுனுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு சில பெருநகரங்களில் வாழும் மக்கள் தங்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க சிப்லுன் நகரையே தேடி வருகிறார்கள்.