கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது.
இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.
தக்ஷிண கன்னடா, ஹாசன் மற்றும் மைசூர் போன்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும் கேரளாவை சேர்ந்த வயநாடு மற்றும் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்களும் வார இறுதியில் சிற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கும் ஸ்தலமாக இது திகழ்கிறது.
கூர்க் பிரதேசம் ஒரு புராதனமான அழகை இங்குள்ள ஆரவாரமில்லாத அமைதியான நகரங்களில் பெற்றுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எந்த விதமான சந்தடியுமற்ற மிதமான வேகத்தில் நகரும் ஒரு வாழ்க்கை சூழலை - மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு மற்றும் கிழக்கு பக்க சரிவுகளின் வியக்கத் தக்க இயற்கை காட்சிகளுடன் இங்கு பார்த்து ரசித்து அனுபவிக்கலாம்.
கொடகு எனும் பெயர்க் காரணமும் கொஞ்சம் வரலாறும்
கொடகு எனும் பெயர் வந்ததற்கு காரணமாக பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. ஒரு சிலர் இது கொடவா ஆதிவாசிகளின் இருப்பிடமாக இருந்ததால் அவர்கள் மொழியில் குரோத தேசா எனும் சொல்லில் இருந்து பிறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மற்றொரு பிரிவினர் கொடவா என்ற சொல்லே இரண்டு சொற்களிலிருந்து பிறந்திருக்கலாம் என்ற கருத்தை கொண்டிருக்கின்றனர். அதாவது கொட் (கொடு) என்ற சொல்லும் அவ்வா (அம்மா) என்ற இரண்டாவது சொல்லும் சேர்ந்து கொடவா என்று காவிரி அன்னையை குறிப்பிடுவதற்காக இந்த பெயர் உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர். கொடகு என்பது கூர்க் என்று ஆங்கிலேயர் காலத்தில் அவர்களால் அழைக்கப்பட்டது.
கொடகுப்பகுதியை பற்றிய வரலாற்று குறிப்புகள் கொடகுப்பிரதேசம் கங்கா வம்சத்தினரின் ஆட்சியில் இருந்த 8ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது.
அவர்களுக்கு பின் பாண்டியர்கள், சோழர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள் மற்றும் சங்களவர்கள் என்று பல ராஜ வம்சங்களால் இது ஆளப்பட்டுள்ளது. 1174 ம் ஆண்டு ஹொய்சள வம்சத்தினர் இந்த பகுதியை கைப்பற்றினாலும் பின்னர் 14 ம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகர ராயர்களிடம் கொடகை இழந்தனர்.
விஜயநகர அரசர்களுக்குப்பின் கொடகு உள்ளூர் ஜமீன்களான நாயக்கர்கள் வசம் வந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு துவக்கம் வரை இது ஹலேரி வம்சத்தை சேர்ந்த லிங்காயத் ராஜாக்களால் ஆளப்பட்டது.
அவர்களுக்குப் பின் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் கூர்க் பிரதேசம் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சியில் இருந்து வந்தது. சுதந்திரத்துக்கு பின் தனி மாநிலமாகவும் மாறிய கொடகு பிரதேசம் 1950 ம் ஆண்டு நிகழ்ந்த மறு சீரமைப்பில் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
இன்று கூர்க் பகுதி கர்நாடக மாநிலத்தின் மிக சிறிய மாவட்டமாக மடிகேரி, சோமவாரபேட்டே மற்றும் வீர ராஜ பேட்டே என்ற மூன்று தாலுக்காக்களை கொண்டு விளங்குகிறது.
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்
கூர்க் பகுதியில் பலவிதமான வரலாற்று சின்னங்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், புராதன கோயில்களும், பூங்காக்களும், நீர்வீழ்ச்சிகளும் சரணாலயங்களும் போன்ற எண்ணற்ற எழில் வாய்ந்த இடங்களும் ஸ்தலங்களும் காணப்படுவதால் இது சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பயணிகளால் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது.
குறிப்பிடும் படியாக இங்கு அப்பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர்வீழ்ச்சி, மல்லள்ளி நீர் வீழ்ச்சி, மடிகேரி கோட்டை, ராஜா சீட், நலநாடு அரண்மனை மற்றும் கடிகே (ராஜா சமாதி) போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன.
மற்றும் இந்த பிரதேசத்தில் ஆன்மீக சார்ந்த முக்கிய ஸ்தலங்களாக பாகமண்டலா, திபெத்திய தங்க கோயில், ஓம்காரேஸ்வரா கோயில் மற்றும் தலைக்காவிரி போன்ற இடங்கள் காணப்படுகின்றன.
இயற்கை எழிலை ரசிப்பதற்கு தோதான இடங்களாக செலவரா நீர்வீழ்ச்சி, ஹரங்கி அணை, காவேரி நிசர்கதாமா, துபரே யானை காப்பகம், ஹொன்னம்மன ஏரி மற்றும் மண்டல பட்டி போன்ற இடங்களும் காட்டுயிர் ஆர்வலர்கள் விரும்பும் இடங்களாக நாகர்கோல் தேசிய பூங்கா மற்றும் அருகிலுள்ள பண்டிபூர் தேசிய பூங்கா ஆகியவையும் இயற்கை எழில் சார்ந்த அம்சங்களுடன் காணப்படுகின்றன.
சாகச பொழுது போக்குகள் மற்றும் விளையாட்டு பொழுது போக்குகளுக்கும் கொடகு பிரதேசம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மலை ஏற்றம், கோல்ப், தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற பல வெளிப்புற பொழுது போக்கு அம்சங்களுக்கு இங்கு வசதிகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையின் பிரம்மகிரி மலைப்பகுதியில் மலை ஏற விரும்புகிறவர்களுக்கான ஒற்றையடிப்பாதைகள் உள்ளன. இது தவிர புஷ்பகிரி மலைகள், கொட்டேபெட்டா, இக்குதப்பா, நிஷானி மோட்டே மற்றும் தடியான்டமோல் என்ற இடங்களிலும் மலை ஏற்றப் பாதைகள் உள்ளன.
கொடகு பகுதியின் தெற்கு பகுதியில் பிரம்மகிரி மலையிலுள்ள ‘மேல் பரபோலே’ ஆற்று பகுதி பலவிதமான நீர் விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றது. காவிரியின் உப்பங்கழி பிரதேசமான வளனூர் எனும் இடம் தூண்டிலில் மீன் பிடித்து மகிழ விரும்புவர்களுக்கு பொருத்தமான இடமாகும்.
உள்ளூர் கலாசாரமும் இதர விஷயங்களும்
எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலமான கூர்க் பகுதி பிரத்யேகமான பண்பாடு மற்றும் கலாசார அம்சகளை பெற்றுள்ளது. ஹட்டாரி, மெர்காரா தசரா, கெயில் பொடு (கெயில் முகூர்த்தம் அல்லது ஆயுத திருவிழா) , காவேரி சங்க்ராமனெ அல்லது துலா சங்கராமனெ போன்ற திருவிழாக்கள் இங்கு கொண்டாடப் படுகின்றன.
இந்த பிரதேசத்தின் உணவு தயாரிப்பு முறைகள் குறிப்பாக அசைவ உணவுகள் மற்ற தென்னிந்திய உணவு மரபுகளுடன் சேர்ந்து சிறப்பான தனித் தன்மையை கொண்டுள்ளன.
பொதுவாக கொடகு பிரதேசத்தின் மக்கள் கொடவா, துளு, குடியா மற்றும் புண்டா இனத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இருப்பினும் கொடாவா எனப்படும் இனத்தை சேர்ந்த பூர்வ குடியினரே இங்கு அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிட த்தக்கது. இவர்கள் தங்கள் உபசரிப்புக்கும் வீரத்துக்கும் சிறந்து விளங்குகின்றனர்.
சர்வதேச அளவில் கொடகு பிரதேசம் சிறந்த காபி பயிர் செய்யும் பகுதியாக புகழ் பெற்று விளங்குகிறது. காபி பயிர் செய்வதற்கேற்ற பருவநிலை இங்கு காணப்படுவதே இதற்கு காரணம். ஆங்கிலேயர்களே இங்கு முதலில் காபி பயிரை அறிமுகப்படுத்தினர். அராபிக் மற்றும் ரோபஸ்டா எனும் காபி வகைகள் இங்கு பெருமளவில் பயிரிடப்படுகின்றன.
காபியை தவிர தேன், ஏலக்காய், மிளகு மற்றும் ஆரஞ்சு போன்றவையும் கொடகுப்பகுதியின் விளை பொருட்களாக உள்ளன.
நவம்பரிலிருந்து ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலம் கொடகு பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாய் உள்ளது. இங்கு சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும். மங்களூர், ஹாசன், மைசூர், பெங்களூர், கண்ணூர் மற்றும் வயநாடு பகுதியிலிருந்து சாலை வழியாக இங்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன.
கொடகு பகுதிக்கு அருகில் ரயில் நிலையம் மைசூர் ஆகும். இது கொடகிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள மங்களூரில் சர்வதேச விமான நிலையமும் உள்ளது. இங்கிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கும் வெளி நாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.