இயற்கையின் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கும் வனவிலங்கு ஆர்வலர்களின் சொர்க்கம் கார்பெட் தேசிய பூங்கா! முன்பு ராம்கங்கா தேசிய பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த பூங்கா 1957-ம் ஆண்டு கார்பெட் தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரர், இயற்கை ஆர்வலர் மற்றும் புகைப்படக் கலைஞருமான ஜிம் கார்பெட்டின் பெயராலேயே இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.
இந்தியாவின் குமாவோன் பகுதியில் தான் வேட்டையாடிய அனுபவங்களை அவர் புகழ் பெற்ற நூலான 'மேன் ஈட்டர்ஸ் ஆஃப் குமாவோன்' (Man-Eaters of Kumaon)-ல் சுவைபட எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் சுமார் 400 பேர்களின் உயிரை வாங்கிய புலியை வேட்டையாடிய விதத்தைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
பசுமையான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்ற இந்த தேசியப் பூங்கா பிரம்மாண்டமான இமயமலையின் அடிவாரத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட நாடு என்ற பெருமை பெற்ற இந்தியாவின், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன.
ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடத்தின் இயற்கை எழிலை காணும் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் சாகசப் பயணங்களுக்காகவுமே எண்ணற்ற சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர் மற்றும் ரெசுஸ் குரங்குகள் ஆகியவை இந்த பூங்காவில் காணப்படும் விலங்குகளாகும்.
இந்த பூங்காவைத் தாயகமாகக் கொண்டிருக்கும் 600 வகையான பறவைகளில் மயில்கள், பீஸன்ட், மாடப் புறா, ஆந்தை, ஹார்ன்பில், பார்பெட், லார்க், மைனா, மக்பி, மினிவெட், பாட்ரிட்ஜ், த்ரஷ், டிட், நுதாட்ச், வாக்டெயில், சன்பேர்டு, பன்டடீங், ஓரியோல், கிங்பிஷர், ட்ராங்கோ, புறா, மரங்கொத்தி, வாத்து, டீல், கழுகு, நாரை, கார்மோரன்ட், வல்லூறுகள், புல்புல் மற்றும் ஃப்ளை கேட்ச்சர் ஆகியவை அடங்கும்.
இவை மட்டுமல்லாமல், 51 வகையான புதர்களையும், 30 வகையான மூங்கில்களையும் மற்றும் 110 வகையான மரங்களையும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவில் கண்டு ரசித்திட முடியும்.
கார்பெட் தேசிய பூங்காவிற்கு செல்ல விரும்பும் சுற்றலாப் பயணிகள் பாட்டில் துன் பள்ளத்தாக்கின் முனையில் உள்ள திக்காலாவிற்கும் செல்லலாம். கன்டாவின் உச்சியை பின்னணியாகக் கொண்டு, இந்த பள்ளத்தாக்கின அழகிய சுற்றுவட்டக் காட்சியை காண உதவும் இடமாக திக்காலா விளங்குகிறது.
திக்காலா சௌர்-ன் பல்வேறு வழிகளை உங்கள் வாகனம் கடந்து செல்லும்போது காட்டு யானைகள், சிடால், ஹாக் மான்கள் மற்றும் எண்ணற்ற பறவைகளை காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திடும்.
அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளின் உதவியுடன் இங்கு செய்யப்படும் மலையேற்றம் மிகவும் புகழ் பெற்ற சாகச விளையாட்டாகும். இந்த பூங்காவிற்கு தென்மேற்கில் அமைந்திருக்கும் கலஹார் அணைக்கட்டு மற்றுமொரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.
இந்த இடம் பறவைகளை கவனித்து வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இடம் பெயரும் பறவைகளான வாட்டர்பௌலின் வருகையை குளிர்காலங்களில் சாதாரணமாக இங்கு காண முடியும்.
சுமார் 60 அடி உயரத்திலிருந்து விழும் கார்பெட் நீர்வீழ்ச்சியும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான சுற்றுலா தலமாகும். முகாமிடுவதற்கும், இன்பசுற்றுலாவிற்கும் மிகவும் ஏற்ற இடமாக இந்த நீர்வீழ்ச்சி உள்ளது.
இந்த தேசிய பூங்காவின் பிஜ்ரானி மற்றும் திக்காலா பகுதிகளில் யானை சவாரி செய்யும் வாய்ப்புகளும் உண்டு. கார்பெட் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கே ஓடிக் கொண்டிருக்கும் கோசி நதியில் ராஃப்டிங் செய்யும் வாய்ப்புகளும் உள்ளன.
இந்த பூங்காவில் உள்ள பல்வேறு விடுதிகளும் ராஃப்டிங் மற்றும் இதர வசதிகளை முறையாக செய்து தரும் இடங்களாக உள்ளன. அடர்ந்த காட்டுப் பாதைகளில் ஜீப்களில் சென்று பார்க்கும் வசதிகளுடன் இங்கு ஏற்பாடு செய்யப்படும் வனாந்திர சுற்றுப் பயணங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையற்ற மகிழ்ச்சியைத் தரவல்லது.
கோசி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் மகாஷியர் மீன்களை பிடிக்கவும் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். மீன்பிடி பொழுது போக்கினை ஊக்குவிக்கும் வகையில் இங்குள்ள விடுதிகள் ஏற்பாடு செய்து தருகின்றன.
காலாதுங்கியில் உள்ள கார்பெட் அருங்காட்சியகம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பார்வையிடமாக உள்ளது. பிரிட்டிஷ் வேட்டையாளரான ஜிம் கார்பெட் வசித்து வந்த பாரம்பரிய மாளிகையான இந்த இடத்தில் அவர் எடுத்த சில அரிய புகைப்படங்கள் மற்றும் உபயோகப்படுத்திய பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
குமாவோன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கியாரி முகாமிலும் சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்க முடியும். சோனாநாடி வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் ஆசிய யானைகள் மற்றும் புலிகளை அவைகள் காடுகளில் இருக்கும் ஆக்ரோஷத்துடனேயே காண முடியும்.
இந்த தேசிய பூங்காவின் சுற்றுப்புறச் சூழலை நிர்ணயிப்பதில் ராம்கங்கா ஆறு, மண்டல் ஆறு மற்றும் சோனாநாடி ஆறு ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும் சுற்றுலாப் பயணிகள் 'சாட்ஸ்' (Sots) என்றழைக்கப்படும் பருவகால ஓடைகளையும் காணும் வாய்ப்பு கிடைக்கும்.
சீதாபனி கோவில் மற்றும் ராம்நகர் ஆகியவை இந்த பூங்காவின் இதர முக்கியமான பார்வையிடங்களாகும். இவையனைத்து விஷயங்களுடன் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளால் நன்றாக இணைக்கப்பட்ட இடமாக ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம்.