தேஹ்ராதூன் அல்லது டேராடூன் என்று அழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற மலைவாசஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. பொதுவாக டூன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் வட இந்தியாவில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் கேந்திரமாகவும் அறியப்படுகிறது. கங்கை ஆறு இந்த டேராடூன் பகுதியின் கிழக்குப்பகுதியிலும் யமுனை ஆறு மேற்குப்பகுதியிலும் ஓடுகின்றன. ‘தேஹ்ரா’ எனும் சொல்லுக்கு முகாம் என்றும், ‘தூன்’ எனும் சொல்லுக்கும் மலையடிவாரப்பகுதி என்றும் பொருளாகும்.
வரலாற்றுக்குறிப்புகளின்படி முகலாய பேரரசர் ஔரங்கசீப் ராம் ராய் எனும் சீக்கியக்குருவை இந்த டூன் வனப்பகுதிக்கு நாடு கடத்தியுள்ளார். அந்த சீக்கிய குரு இங்கு தனக்கான ஒரு இருப்பிடத்தையும் ஒரு கோயிலையும் ஏற்படுத்திக்கொண்டார்.
ராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற மஹாகாவியங்களிலும் இந்த டூன் பிரதேசம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராவணனை அழித்தபின்னர் ராமன் தனது சகோதரன் லட்சுமணனுடன் இந்த பகுதிக்கு விஜயம் செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.
மற்றொரு கதையின்படி, குரு துரோணச்சாரியா இந்த பகுதியில் சிறிது காலம் வசித்ததாகவும் சொல்லப்படுகிறது. இங்கு காணப்படும் சில புராதன கோயில்கள் மற்றும் சிதிலங்கள் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தவையாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த டேராடூன் பிரதேசம் கவர்ந்து இழுக்கிறது. இனிமையான பருவநிலை மற்றும் இயற்கை எழில் நிரம்பிய சுற்றுச்சூழல் ஆகியவை இங்கு பயணிகளை வெகுவாக கவர்கின்றன.
அதுமட்டுமல்லாமல் உத்தரகண்ட் பகுதியிலுள்ள முசூரி, நைனித்தால், ஹரித்வார், ஔலி மற்றும் ரிஷிகேஷ் போன்ற முக்கியமான யாத்ரீக ஸ்தலங்களுக்கான நுழைவாயிலாகவும் இந்த டேராடூன் விளங்கிவருகிறது.
இந்நகரத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாக இங்கு பல புகழ் பெற்ற கல்வி நிலையங்கள் அமைந்திருக்கின்றன. இந்தியன் மிலிட்டரி அகாடமி, வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி, ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மற்றும் கீர்த்தி பெற்ற டூன் பப்ளிக் ஸ்கூல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்தியன் மிலிட்டரி அகாடமி எனப்படும் ராணுவப்பயிற்சிக்கல்லூரி டேராடூன்-சக்ரதா சாலையில் அமைந்திருக்கிறது. இது 1932ம் ஆண்டு அக்டோபர் 1ம் நாள் பிரிகேடியர் எல்.பி.காலின்ஸ் என்பவரது தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த கல்வி நிலையத்தில் ஒரு மியூசியம், போர் நினைவுச்சின்னம், துப்பாக்கி சுடுதலுக்கான காட்சி விளக்க அறை மற்றும் FRIMS கோல்ஃப் மைதானம் ஆகியவை அமைந்துள்ளன.
டேராடூனில் உள்ள மற்றொரு கல்வி மையமான ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் கௌலாகர் சாலையில் அமைந்திருக்கிறது. இது 1906ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த மையம் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.
ஒரு அரண்மனை போன்ற கலையம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கல்வி மையக்கட்டிடம் கிரிக்கோ-ரோமன் மற்றும் காலனிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
டேராடூன் நகரத்தின் இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாக ஸகஸ்த்ரதாரா, ராஜாஜி நேஷனல் பார்க், மல்ஸி டீர் பார்க் ஆகியவற்றை குறிப்பிடலாம். இவற்றில் ஸகஸ்த்ரதாரா என்றழைக்கப்படும் அழகிய நீர்ச்சுனை டேராடூன் நகரத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த இடத்துக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் ஏராளமாக பிக்னிக் பயணம் மேற்கொள்கின்றனர். 9 மீ ஆழம் கொண்ட இந்த நீரூற்றிலிருந்து வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் இருப்பதாகவும், தோல் வியாதிகளை தீர்க்கும் சக்தி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
பல அழகிய புராதனமான ஆன்மிகத்தலங்களும் டேராடூன் பகுதியில் அமைந்திருக்கின்றன. லக்ஷ்மண் சித் கோயில், தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில், சந்தளா தேவி கோயில் மற்றும் தபோவண் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில் என்பது சிவபெருமானுக்கான ஒரு புகழ்பெற்ற குகைக்கோயிலாகும். தபக் எனும் ஹிந்திச்சொல் ஒழுகுதலை குறிப்பிடுகிறது. அதாவது இங்குள்ள சிவலிங்கத்தின் மீது குகையின் கூரையிலிருந்து நீர் ஒழுகிக்கொண்டே இருப்பதால் இந்த குகைக்கோயிலுக்கு தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகள் டேராடூன் நகரை வாகனம் மூலமாக கால்நடையாக சுற்றிப்பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள கடைகளில் உள்ளூர் கைவினைப்பொருட்கள், உல்லன் ஆடைகள், நகைகள் மற்றும் புத்தகங்கள் விற்கப்படுகின்றன.
ராஜ்பூர் ரோடு, பல்தான் பஜார் மற்றும் ஆஷ்லி ஹால் ஆகியவை இங்குள்ள முக்கியமான ஷாப்பிங் பகுதிகளாக அமைந்துள்ளன. மேலும், டேராடூன் நகரின் உணவகங்களில் திபெத்திய மோமோ உணவுப்பண்டங்களையும் ருசித்து மகிழலாம்.
ரம்மியமான இயற்கைக்காட்சிகள், புகழ் பெற்ற கல்வி நிலையங்கள் மற்றும் புராதன கோயில்கள் ஆகியவற்றோடு விசேஷ பாஸ்மதி அரிசி வகைக்கும் இந்த டேராடூன் பகுதி பிரசித்தமாக அறியப்படுகிறது.
இயற்கைக்காட்சிகள் மற்றும் ஷாப்பிங் அம்சங்கள் மட்டுமல்லாமல் சாகச விரும்பிகளுக்கேற்ற பல பொழுது போக்கு அம்சங்களையும் டேராடூன் கொண்டுள்ளது.
பாராகிளைடைங் மற்றும் பனிச்சறுக்கு போன்ற சாகசப்பொழுதுபோக்குகளில் இங்கு பயணிகள் ஈடுபடலாம். மேலும், டேராடூனிலிருந்து 30 கி.மீ தூரம் கொண்ட டேராடூன் – முசூரி மலையேற்றப்பாதையில் டிரெக்கிங் பயணத்திலும் ஈடுபடலாம்.
டேராடூன் நகரம் விமானம், ரயில் மற்றும் சாலை ஆகிய மார்க்கங்களில் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. இங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் ஜோலி கிராண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது.
இது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டிருக்கிறது. இது தவிர, டேராடூன் ரயில் நிலையம் இந்நகரத்தை டெல்லி, வாரணாசி மற்றும் கல்கத்தா போன்ற இதர முக்கிய மாநகரங்களுடன் இணைக்கிறது.
டெல்லியிலிருந்து இயக்கப்படும் அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் மற்றும் தனியார் சுற்றுலா சொகுசு பேருந்துகள் மூலமாகவும் டேராடூன் நகருக்கு வரலாம்.
டேராடூன் பகுதி வருடமுழுவதும் இதமான பருவநிலையுடன் காட்சியளிக்கின்றது. உயரத்தை பொறுத்து இப்பிரதேசத்திலுள்ள வெவ்வேறு இடங்களின் சீதோஷ்ணநிலை வேறுபட்டு காணப்படலாம்.
பொதுவாக இப்பகுதி கோடைக்காலத்தில் வெகு உஷ்ணமாகவும் குளிர்காலத்தில் குளுமையானதாகவும் இருக்கும். மேலும் இப்பகுதி அவ்வப்போது பனிப்பொழிவையும் குளிர்காலத்தில் பெறுகிறது.
ஜனவரி மாதத்தில் இங்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் அம்மாதத்தை மட்டும் தவிர்த்து மற்ற எல்லா மாதங்களிலும் இப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.