டெல்லியில் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்துள்ள குதுப் வளாகம் என்றழைக்கப்படும் இந்த புராதன வளாகத்தில்தான் உலகப்புகழ்பெற்ற குதுப் மினார் கோபுரம் வீற்றிருக்கிறது.
வேறு சில முக்கியமான வரலாற்றுச்சின்னங்களும் ஒருங்கே காணப்படும் இந்த ஸ்தலம் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
குத்புதீன் ஐபெக் என்பவரால் வட இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்டு அடிமை வம்சம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் குலாம் வம்ச டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் இந்த வரலாற்றுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நன்கு பராமரித்து பாதுகாக்கப்படும் இந்த குதுப் புராதன வளாகம் டெல்லியில் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
குதுப் வளாகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுச்சின்னங்கள்:
குதுப் மினார்: குதுப் வளாகத்தில் இருப்பதிலேயே பிரதானமான மிகப்பிரசித்தமான அம்சம் இந்த குதுப் மினார் கோபுரமாகும். முக்கியமான கலைச்சின்னமாக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்த அற்புதமான கோபுர அமைப்பு இந்தியாவிலேயே மிக உயரமான மினாரெட் கோபுரமாகும்.
தலை சுற்றவைக்கும் 72.5 மீ (ஏறக்குறைய 239 அடி!) உயரத்தில் வெகு சிக்கலான கட்டிடக்கலை அமைப்புடன், நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ள இதன் தனித்தன்மையை விவரித்துக்கொண்டே செல்லலாம் என்றாலும் நேரில் பார்த்தால்தான இதன் பிரம்மாண்டம் புரியும்.
1193-1268ம் ஆண்டுகளில் குத்புதீன் ஐபெக் மன்னரால் தனது வெற்றிச்சின்னமாக இந்த கோபுர அமைப்பு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு அற்புத கோபுரத்தை எழுப்ப வேண்டுமென்ற மன்னனின் உன்னதமான கற்பனை ஒரு புறமிருக்க அதை சாதித்துக்காட்டிய அக்கால கலைஞர்களின் திறமை இந்த கோபுரத்தில் மிளிர்கிறது.
மனிதனால் இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்ற சவால் அம்சம் அக்காலத்திலேயே அதுவும் இந்திய மண்ணில் எழும்பியிருக்கும் இந்த கோபுரத்தில் பொதிக்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடியும். மொத்தத்தில் இந்த கோபுரத்தை பார்ப்பதற்காகவே நீங்கள் டெல்லிக்கு புறப்பட்டு வரலாம் என்பதுதான் உண்மை.
இரும்புத்தூண் (அயர்ன் பில்லர்): இந்தியாவின் துருப்பிடிக்காத தூண் என்று நீங்கள் நிச்சயம் பள்ளி வரலாற்றுபாடங்களில் படித்திருப்பீர்கள். அந்தத்தூண் குதுப் வளாகத்தில்தான் அமைந்திருக்கிறது.
7 மீ (23 அடி) உயரமுள்ள இந்த இரும்புத்தூண் இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்ய மன்னரின் வெற்றிச்சின்னமாக கி.பி 400 ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த தூண் எப்படி இந்த டெல்லி குதுப் வளாக ஸ்தலத்தில் மறு நிர்மாணம் செய்யப்பட்டது என்பது பற்றிய வரலாற்றுத்தகவல்கள் இல்லை. தற்கால உலோகவியல் நிபுணர்கள் இந்த துணின் விசேடமான துருப்பிடிக்கா எஃகு கலவை குறித்து இன்றும் ஆச்சரியப்படுகின்றனர்.
டெல்லி பிரதேசத்தின் கடுமையான சீதோஷ்ண நிலையை தாக்குப்பிடித்து பல நூற்றாண்டுகளை (1600 வருடங்கள்) கடந்து காலத்தின் சாட்சியாக இந்த வரலாற்றுத்தூண் நிற்கிறது. பிராம்மி எழுத்துக்களில் அச்சடித்தாற்போன்று இந்த தூணில் காணப்படும் குறிப்புகளின் துல்லியம் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
அலா இ மினார்: குதுப் மினாரை விட உயரமாக கட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் அலாவுதீன் கில்ஜி மன்னரால் இந்த மினாரெட் கோபுர அமைப்பு துவங்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் 25.4 மீ உயரத்திற்கு எழுப்பப்பட்ட நிலையில் மன்னர் இறந்துபோனதால் இந்த கோபுர அமைப்பின் கட்டுமானம் அப்படியே நின்றுள்ளது. அலா இ மினார் எனப்படும் இந்த முடிவடையா கோபுரமும் குதுப் வளாகத்தில்தான் காணப்படுகிறது.
அலா இ தர்வாஸா: அளவில் சிறியதாக, குமிழ் மாடக்கூரையுடன் கூடிய சதுர வடிவ மண்டபமாக காட்சியளிக்கும் இந்த அமைப்பானது குதுப் வளாகத்திலேயே அமைந்துள்ள குவாத்துல் இஸ்லாம் எனும் மசூதிக்கு செல்லும் வாயில் பகுதியாக அமைந்துள்ளது. குதுப் மினார் கோபுரத்திற்கு பின்னால் அமைந்துள்ள இந்த அமைப்பு கலையம்சம் நிரம்பிய ஜாலி ஜன்னல் வேலைப்பாடுகளையும் சலவைக்கல்லால் ஆன அலங்கார நுணுக்கங்களையும் கொண்டுள்ளது.
குவாத்துல் இஸ்லாம் மசூதி: குதுப் வளாகத்தில் அமைந்துள்ள இந்த புராதா மசூதி டெல்லி நகரத்திலேயே மிகப்பழமையான மசூதியாக அறியப்படுகிறது. தற்போது இடிபாடுகளுடன் காணப்பட்டாலும் இதிலுள்ள நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளை பார்த்து ரசிக்கலாம்.
இமாம் ஜமின் டூம் (கல்லறை): குதுப் வளாகத்திலிருந்த மசூதியில் வசித்த ஒரு துருக்கிய இமாம் குருவிற்காக இந்த கல்லறை எழுப்பப்பட்டிருக்கிறது. அலா இ தர்வாஸா அமைப்பிற்கு அடுத்து காணப்படும் இந்த கல்லறைச்சின்னமானது சிக்கந்தர் லோதியின் ஆட்சிக்காலத்தை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
அலாவுதீன் கில்ஜி கல்லறை மற்றும் மதராஸா: கில்ஜி வம்ச மன்னரான அலாவுதீன் கில்ஜி மன்னரின் கல்லறை மற்றும் அவரால் கட்டப்பட்ட மதராஸா (ஆன்மீகப்பள்ளி) ஆகியவையும் குதுப் வளாகத்தின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது டெல்லி சுல்தான் வம்ச மன்னரான இவர் 1296 முதல் 1316 வரை ஆட்சி செய்துள்ளார்.
இல்டுமிஷ் கல்லறை: சுல்தான் வம்சத்தை சேர்ந்த இல்டுமிஷ் எனும் மன்னரின் கல்லறை நினைவுச்சின்னமான இந்த அமைப்பின் மையப்பகுதியில் ஒரு பீட அமைப்பின்மீது வெண் சலவைக்கற்களால் ஆன சமாதி அமைக்கப்பட்டிருக்கிறது. கலையம்சம் நிரம்பிய நுணுக்கமான அலங்காரக்குடைவு வேலைப்பாடுகள் இந்த கல்லறை அமைப்பில் அதிகம் காணப்படுகின்றன.
சுல்தான் காரி நினைவுச்சின்னம்: இல்டுமிஷ் மன்னரின் மூத்த மகனான நஸிருதீன் முகமது என்பவருக்காக இந்த கல்லறைச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1231ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த அமைப்பு மற்ற கல்லறைச்சின்னங்களிலிருந்து வேறுபட்டதாக, முற்றத்துடன் கூடிய ஒரு கோட்டை போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஹிந்து மற்றும் முஸ்லிம் பொது மக்கள் இந்த கல்லறையை ஒரு தர்க்கா போன்று வழிபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்திய தொல்லியல் துறையினரை விடவும் பக்தர்களால் இந்த வரலாற்றுச்சின்னம் நன்றாக பராமரிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.