ஓவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. அமைதியான மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலுக்கு பெயர் போன இந்த இடம் சம்பாவிலிருந்து முசூரி செல்லும் வழியில் உள்ளது. முசூரிக்கு மிக அருகாமையில், வெறும் 24 கி.மீ. தூரத்தில் இந்த இடம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு வருபவர்கள் இதன் அருகில் இருக்கும் டூன் பள்ளத்தாக்கின் மதிமயங்கும் அழகில் சொக்கி விழுவது நிச்சயம்.
தனௌல்டியில் உள்ள புகழ் பெற்ற முதன்மையான தலமாக விளங்குகிறது எக்கோ பூங்கா. இந்த பூங்கா டியோடர் காடுகளால் சூழ்ந்துள்ளது. முசூரி வனத்துறையால் உருவாக்கப்பட்ட எக்கோ குடில்களையும் இங்கு காணலாம்.
இந்த குடில்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கிக் கொள்ளலாம். இது போக 'ஆலு கெட்' என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் உருளைக்கிழங்கு தோட்டமும் இங்கு மிகவும் பிரபலமான இடம்.
மேலும் தசாவதார் கோவில், புது டெஹ்ரி நகரியம், பரேஹிபனி மற்றும் ஜோரண்டா அருவிகள், டியோகர்ஹ் கோட்டை மற்றும் மடடிலா அணை போன்றவைகள் தனௌல்டிக்கு மிக அருகில் இருக்கும் மற்ற சுற்றுலாத் தலங்கள்.
இங்கு வருபவர்கள் தீர விளையாட்டுக்களான மலை ஏறுதல், ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் தங்தர் முகாமில் நடை பயணம் போன்றவைகளை மேற்கொள்ளலாம். இந்த முகாம் அடிப்படை வசதிகளுடன் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கும் ஏற்பாடும் செய்து கொடுக்கிறது.
பயணிகள் இங்கே விமானம், இரயில் மற்றும் தரை வழி மார்க்கமாக சுலபமாக வந்தடையலாம். ஜாலி கிரான்ட் விமான நிலையம் தான் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் விமான நிலையம்.
டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் ரயில் நிலையங்கள் தான் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையங்கள். மேலும் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் நகரங்களான டேராடூன், முசூரி, ஹரித்வார், ரிஷிகேஷ், ரூர்கி மற்றும் நைனிடாலில் இருந்து இங்கு வருவதற்கு பேருந்து வசதிகளும் உண்டு.
தனௌல்டிக்கு சுற்றுலா வர விரும்புபவர்கள் கோடை மற்றும் குளிர் காலங்களில் இங்கு வருவதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்த காலங்களில் மிதுவான வெப்ப நிலையே இங்கு நிலவும்.