வரலாற்று சிறப்பு வாய்ந்த தர்மஸ்தாலா கிராமம், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே நேத்ராவதி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும். இங்குள்ள மஞ்சுனாதேஸ்வரர் ஆலயத்தில் காணப்படும் தங்க லிங்கத்தை தரிசிப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான மக்கள் தர்மஸ்தாலாவிற்கு வருகின்றனர்.
தர்மஸ்தாலா கிராமம் இன்றும் மத ஒற்றுமைக்கு சிறந்த உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தர்மஸ்தாலா கோயில் ஜைன மதத்தவரால் நடத்தப்பட்டாலும், ஹிந்து குருமார்களே வழிபாடு நடத்துகின்றனர்.
அதோடு தர்மஸ்தாலாவில் உள்ள 8 ஜைன பசாதிகளும், ஓரே கல்லால் ஆன 11 மீட்டர் உயர பாஹுபலி சிலையும் அந்த கிராமத்தின் குன்றா புகழுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் தர்மஸ்தாலா கிராமம் பல்வேறு தொன்மையான ஓலைச்சுவடிகளுக்கு கருவூலமாக இருந்து வருகிறது. இந்த ஓலைச்சுவடிகளெல்லாம் சேமிக்கப்பட்டு இங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர கார் பிரியர்களை கவரும் வகையில் இங்கு பழைய கார்களை கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் இருக்கிறது.
தர்மஸ்தாலா கிராமம் பெங்களூரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு உடுப்பியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும், மங்களூரிலிருந்து 76 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
இந்த கிராமத்துக்கு கர்நாடகாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. பெங்களூரிலிருந்து சாலை மூலமாக தர்மஸ்தாலா சென்றடைய குறைந்தது 6 மணி நேரம் ஆகும்.