இயற்கை அழகை குத்தகைக்கு எடுத்துள்ளது போல் திகழும் திப்ருகார், ஒரு புறம் அலைகடலென பொங்கிப் பிரவகிக்கும் பிரம்மபுத்ரா நதியையும், அதன் எல்லைப் பகுதியில் பேரமைதியின் தூதுவர் போன்று பரந்து விரிந்திருக்கும் இமயமலையையும் பெற்றுள்ளது. அஸ்ஸாமின் சிறப்பு வாய்ந்த நகரங்களுள் ஒன்றான திப்ருகார், அமைதி, அழகு, வரலாற்று நுணுக்கம், ஏராளமான பசுமை போன்றவற்றைத் தேடி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் விரும்புவனவற்றை அள்ளித் தருகிறது.
திப்ருகார் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:
திப்ருகாரின் தேயிலைத் தோட்டங்களுக்கு ஒரு பயணம்
உலகளாவிய புகழ் பெற்றது அஸ்ஸாம் தேயிலை. அஸ்ஸாம் தேயிலை என்றால் திப்ருகார், டிங்க்சுகியா மற்றும் சிப்சாகர் போன்ற நகரங்களை நினைக்காமல் இருக்க முடியாது.
உண்மையில், மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் சுமார் 50 சதவீதம், இந்த மூன்று இடங்களிலிருந்து மட்டுமே கிடைக்கிறது. திப்ருகார் “இந்தியாவின் தேயிலை நகரம்” என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான தேயிலைத் தோட்டங்கள், இந்த நகரம் எங்கிலும் காணக் கிடைக்கின்றன. இந்த தேயிலைத் தோட்டங்களைப் பார்க்காமல் திப்ருகார் சுற்றுலாப் பயணம் நிறைவடையாது.
பிரம்மபுத்ரா நதியினால் திப்ருகார் பெறும் வரம் மற்றும் சாபம்
பிரம்மபுத்ரா நதி இந்தியாவின் ஆக்ரோஷமான நதிகளுள் ஒன்றாக அறியப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இமயமலையிலிருந்து பொங்கிப் பாய்ந்து வரும் இது, நகரங்களையும், காட்டுப்பகுதிகளையும் ஒரு சேர வெள்ளத்தில் மூழ்கச் செய்கிறது.
திப்ருகாரும் இந்நதியின் ஆக்ரோஷச் சீற்றத்தின் விளைவுகளினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவே செய்கிறது. ஆயினும், இந்த நதி அதன் அமைதியான நீரோட்டத்துடன் இருக்கும்போது நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதுடன் அதனை நிச்சலனமாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது.
இந்த ஆரவாரமான நதியின் கோரப் பிடியில் இருந்து தப்ப இயலாத திப்ருகார், அதன் பெரும்பாலான பகுதிகளை நிர்மூலமாக்கக்கூடிய வெள்ளப் பெருக்கினை அடிக்கடி எதிர்கொண்டு பெரும் அவதிக்குள்ளாகிறது.
திப்ருகார் சத்ராக்களுக்கு ஒரு ஆன்மீக யாத்திரை
திப்ருகார் சத்ராக்கள், திப்ருகார் சுற்றுலாவின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. சத்ராக்கள், அஹோம் மன்னர்கள் விட்டுச் சென்ற கலாச்சாரப் பண்பாடுகளின் சின்னங்களாகத் திகழும், சமூகப் பாரம்பரியமிக்க ஆன்மீக ஸ்தாபனங்கள் ஆகும்.
தின்ஜோய் சாத்ரா, கோலி ஆய் தான் மற்றும் தேஹிங் சாத்ரா ஆகியவற்றுக்குச் செல்லாமல், திப்ருகார் பயணம் நிறைவடைவதில்லை. கோலி ஆய் தான், அஸ்ஸாமின் பழம்பெரும் ‘தான்’ ஆகக் கருதப்படுகின்றது.
தின்ஜோய் சத்ரா மற்றும் தேஹிங் சத்ரா ஆகியவை வரலாற்றுப் பெருமை மற்றும் மரபுடைமையின் எச்சமாகத் திகழ்கின்றன. தற்போது, இந்த சத்ராக்கள் அஸ்ஸாமின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் திருவுருவமாகத் திகழ்கின்றன.
திப்ருகாரை எவ்வாறு அடையலாம்?
திப்ருகார், நாட்டின் இதரப் பகுதிகளோடு இரயில்கள், விமானங்கள் அல்லது சாலை வழி போக்குவரத்துகளின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, நாட்டின் கிழக்குக்கோடியில் அமைந்த, இரயில் நிலையத்தைக் கொண்டுள்ள நகரமாக திப்ருகார் நகரம் விளங்குகிறது. இங்கு உள்ள விமான நிலையமும் பூரணமாக இயங்கி வருகிறது.
திப்ருகார் வானிலை
திப்ருகார், வருடந்தோறும் ரம்மியமான வானிலையைக் கொண்டிருக்கும்படி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வானிலை, வருடத்தின் எப்பகுதியிலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சாதகமான ஒன்றாக விளங்குகிறது.