அஸ்ஸாமில் வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரமான கௌகாத்தியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள தலைநகரம் தான் திஸ்பூர். திஸ்பூருக்கு முன்னர் ஷில்லாங் நகரம் அஸ்ஸாமின் தலைநகரமாக இருந்தது. 1973-ம் ஆண்டு மேகாலயா மாநிலம் அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டு உருவான போது, ஷில்லாங் அந்த புதிய மாநிலத்தின் தலைநகரமாக மாறியது. இதன் பின்னர் திஸ்பூர் அஸ்ஸாமின் தலைநகரமாக உள்ளது.
திஸ்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
திஸ்பூர் நகரத்தில் அஸ்ஸாமின் செயலகம் மற்றும் அஸ்ஸாம் சட்டசபை போன்ற அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. சில்பாகிராம் மற்றும் வசிஷ்ட ஆசிரமம் போன்ற சில சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இங்கே அமைந்துள்ளன.
தேயிலை ஏலம் விடும் சந்தைகள் திஸ்பூரின் புகழ் மிக்க இடங்களாகும். தலைநகரமாக இருந்தாலும் அருகிலுள்ள கௌகாத்தியின் நிழலில் வளரும் நகரமாகவே திஸ்பூர் உள்ளது.
திஸ்பூரில் ஆரிய, திபெத்திய மற்றும் பர்மிய இன பூர்விக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மிகவும் உறுதியாக நம்புபவர்களாவர்.
பிஹு போன்ற பண்டிகைகள் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அஸ்ஸாமிய மொழி அலுவல் மொழியாக இருந்தாலும், ஆங்கிலமும் இந்தியும் இங்கே பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
திஸ்பூரின் பருவநிலை
திஸ்பூரின் பருவநிலை கௌகாத்தியின் பருவநிலையைப் போலவே இருக்கும். எனினும், மழைக்காலம் முடிந்து குளிர்காலம் வலுப்பெறத் துவங்கும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான நாட்கள் தான் திஸ்பூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற நாட்களாகும்.
திஸ்பூரை அடையும் வழிகள்
திஸ்பூர் நகரம் முக்கிய நகரங்களுடன் சாலை, விமானம் மற்றும் இரயில் போக்குவரத்துகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.