அரபிக்கடலை ஒட்டி வீற்றிருக்கும் கொச்சி மாநகரத்தின் இரட்டை நகரமே இந்த எர்ணாகுளம். இங்கு வீற்றிருக்கும் எர்ணாகுளத்தப்பன் கோயிலின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் இந்த கோயிலில் ‘எர்ணாகுளத்தப்பன்’ எனும் தெய்வமாக காட்சியளிக்கின்றார். எர்ணாகுளம் என்பதற்கு ‘என்றும் நீடித்திருக்கும் குளம்’ என்று பொருள். கேரள மாநிலத்தின் நெடிய வரலாற்றில் வியாபாரமும் வணிகமும் தழைத்தோங்கிய முக்கிய நகரமாக இந்த எர்ணாகுளம் அறியப்பட்டு வந்திருக்கிறது.
திருவிழாக்களும் விருந்துணவும்
வியாபார கேந்திரமாக மட்டுமல்லாது செழுமையான ஒரு கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த நகரம் வாய்க்கப்பெற்றிருக்கிறது. உள்ளூர் திருவிழாக்களின்போது இந்த அம்சங்கள் வண்ணமயமான சடங்குகள் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றன.
மயங்க வைக்கும் வித்தியாசமான திருவிழாக்கொண்டாட்டங்களை காண்பதற்காகவே இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். எடப்பள்ளி விருந்து திருவிழா மற்றும் யூதத்திருவிழா போன்ற பிரசித்தமான விருந்து திருவிழாக்கள் இந்த பழமையான நகரத்தில் கொண்டாடப்படுகின்றன.
வெகுகாலமாகவே எர்ணாகுளம் நகரம் சுற்றுலா பிரியர்களின் சொர்க்கமாக இருந்து வரும் பெருமையை பெற்றுள்ளது. பொல்கட்டி அரண்மனை, கொச்சி கடற்கரை, இளவரசி தெரு மற்றும் சோட்டாணிக்கரா கோயில் போன்ற பிரபல்யமான சுற்றுலா அம்சங்கள் இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும். இந்தியாவிலேயே புகை மாசு இல்லாத ஒரே சுற்றுலா நகரம் எனும் பெருமையையும் எர்ணாகுளம் கொண்டிருக்கிறது.
வேடிக்கை பார்த்தபடி சுற்றி வருவதற்கு இந்த நகரம் மிகவும் ஏற்றது. சந்தடி நிறைந்த தெருக்கள் என்றாலும் கேரள பாரம்பரியம் மற்றும் அயல் நாட்டு பாரம்பரியம் யாவும் கலந்த இந்த வீதிகளில் சுற்றிவருவது அலுக்கவே அலுக்காத அனுபவமாக இருக்கும்.
பழமையான நகரம் என்றாலும் நவீனத்தின் அடையாளங்களுக்கும் இங்கு குறைவே இல்லை. மால்’கள் , பூங்காக்கள், சர்வதேச பிராண்டுகளின் ஷோரூம்கள் என்று இங்கு எல்லா வசதிகளும் நிறைந்துள்ளன.
வித்தியாசமான நகரங்களை தேடி விஜயம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு முறை எர்ணாகுளத்துக்கு வரலாம். குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொள்ளவும் இது மிகவும் ஏற்றது.
போக்குவரத்து வசதிகள்
கேராளாவின் முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநில நகரங்கள் ஆகியவற்றோடு நல்ல போக்குவரத்து வசதிகளால் எர்ணாகுளம் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நெடும்பசேரி சர்வதேச விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும் குறைவில்லை.