தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின் கரையில் அமைந்திருக்கிறது ஈரோடு நகரம்.
இந்த நகரம் விசைத்தறி மற்றும் கைத்தறி துணிகளின் உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். எனவே இந்நகரம் 'இந்திய ஜவுளிகளின் பள்ளத்தாக்கு' என்றும், 'இந்தியாவின் தறிகளின் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
படுக்கை விரிப்புகள், லுங்கிகள், துண்டுகள், பருத்திப் புடவைகள், வேட்டிகள், தரைவிரிப்புகள் மற்றும் அச்சடிக்கப்பட்ட துணி வகைகள் ஆகியவை இந்நகரத்தில் மொத்த விலைகளில் விற்கப்படுவதால், விழாக்காலங்களில் இதன் உற்பத்தியாளர்கள் கணிசமாக அதிக லாபத்தை அடைகிறார்கள்.
இந்த துணி வகைகள் உலகின் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் மஞ்சள் பயிர் உற்பத்திக்காகவும் இந்த நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.
ஈரோட்டைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய வகையில், ஈரோட்டில் அமைந்துள்ள கோவில்களாக—திண்டல் முருகன் கோவில், அருத்ரா கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், நடத்ரீஸ்வரர் கோவில் மற்றும் பரியூர் கொண்டாத்து காளியம்மன் கோவில் ஆகியவை உள்ளன.
பார்வையாளர்கள் ஈரோட்டிலிருக்கும் புகழ் பெற்ற சர்ச்சுகளான செயின்ட் மேரிஸ் சர்ச் மற்றும் ப்ரோ சர்ச்சையும் பார்வையிடலாம். சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிகமாக ஈர்க்கும் புகழ் பெற்ற அணைக்கட்டுகளாக பவானி சாகர் அணைக்கட்டு மற்றும் கொடிவேரி அணைக்கட்டு ஆகியவை அறியப்படுகின்றன.
பிற சுற்றுலாத் தலங்களாக பெரியார் நினைவு இல்லம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், அரசு அருங்காட்சியகம், கரடியூர் வியூ பாயிண்ட், பவானி மற்றும் பண்ணாரி ஆகியவை உள்ளன.
ஈரோடு நகரத்தின் வரலாறு
கி.பி.850-ல் ஈரோடு நகரம் சேர மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. கி.பி.1000-க்கும் கி.பி.1275-க்கும் இடைப்பட்ட காலங்களில் சோழர்களின் ஆட்சிக்குட்டிருந்த ஈரோடு, கி.பி.1276-ஆம் ஆண்டுகளின் வாக்கில் பாண்டியர்களின் கைக்கு வந்தது.
வீரபாண்டிய மகாராஜாவின் ஆட்சிக்காலத்தில் கலிங்கராயன் கால்வாய் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. பிறகு முஸ்லீம்களின் ஆட்சியும், அதன் பிறகு மதுரை அரசர்களின் ஆட்சியும் இங்கு நடைபெற்றது.
இவர்களுக்குப் பின்னர் திப்பு சுல்தானும், ஹைதர் அலியும் ஈரோட்டை ஆண்டு முடித்த பின்னர், ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி 1799-ம் ஆண்டு ஈரோட்டை தனது அரசின் கீழ் கொண்டு வந்தது.
'ஈரோடு' என்ற பெயர் 'ஈரமான மண்டையோடு' என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உட்பொருளைக் கொண்டுள்ள 'ஈர ஓடு' என்ற வார்த்தைகளிலிருந்து வந்ததாகும்.
இந்த பெயருக்குப் பின்னால் ஒரு கதையும் உள்ளது. தக்ஷபிராஜாபதியின் புதல்வியான தாட்சாயணியை மணந்திருப்பவர் சிவ பெருமான். ஒருமுறை தக்ஷபிரஜபதி அரசர் ஒரு யாகத்தை நடத்திய போது, சிவபெருமானைத் தவிர பிற அனைவரையும் அதற்கு அழைத்திருந்தார்.
எனினும், தாட்சயணி தன்னுடைய கணவர் சிவபெருமானின் அனுமதியின்றி இந்த யாகத்தில் கலந்து கொள்ள சென்றார். அவ்வாறு தேவியானவர் அங்கு சென்ற போது அவருடைய பெற்றோர் உட்பட யாருமே உரிய வணக்கத்தை, மரியாதையை அளிக்கவில்லை.
இந்த அவமானத்தால் தாட்சாயணி தன்னையே யாக குண்டத்திற்குள் விழச் செய்து சாம்பலாக்கிக் கொண்டார். இதைக் கேட்ட சிவபெருமான், கடுங்கோபம் கொண்டு யாகம் நடந்த இடத்திற்கு சென்று, அங்கிருந்த பிரம்ம தேவர் உட்பட அனைவரையும் தூக்கி வீசினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, இறந்தவர்களுடைய எலும்புகள் மற்றும் மண்டையோடுகள் காவிரி ஆற்றில் வீசப்பட்டு எப்பொழுதும் அவை ஈரமாகவே இருக்கும் நிலை ஏற்றபட்டதாகவும், அதன் காரணமாகவே ஈரமான மண்டையோடு என்று பொருள் தரும் ஈர ஓடு என்ற பெயர் இந்நகரத்திற்கு ஏற்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது.
ஈரோட்டின் பருவநிலை
சாதாரணமாகவே ஈரோடு மாவட்டத்தில் பருவநிலை வறட்சியானதாகவும், மழை போதுமான அளவிற்கு இல்லாமலும் இருக்கும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்நகரத்தின் பருவநிலை காவிரி நதியுடன் சேர்ந்து மிகவும் ஈரப்பதமுடையதாக இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை உயர்ந்து அதிகபட்ச அளவை அடையும். ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பாலக்காட்டுக் கணவாயின் இடைவெளியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும், ஆனால் அந்த காற்று ஈரோட்டை அடையும் போது அதன் குளிர்ச்சி குறைந்து போய், வெப்பமுடனும், தூசிகளுடன் வீசத் தொடங்கிவிடும்.
ஈரோட்டை அடைவது எப்படி?
ஈரோட்டிற்கு அருகிலேயே கோயம்புத்தூர் விமான நிலையம் உள்ளது. ஈரோடு நகரம் முக்கியமான நகரங்களுடன் தொடர்புடைய நெடுஞ்சாலைகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டிலேயே பெரியதாக இரயில் நிலையமும் உள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்வதற்கு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நகரத்திற்குள் சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முக்கியமான நகரங்களான பெங்களூரு, கோவை, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்து ஈரோட்டை சாலை வழியில் எளிதில் அடைய முடியும். தனியார் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளும் ஈரோட்டில் எளிதாக கிடைக்கின்றன. சுற்றுலா முகவர்கள் இயக்கிவரும் டாக்ஸிகளில் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வர முடியும்.