‘கிரிதிஹ்’ நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ் நகரம் அதன் வடக்குத்திசையில் பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்துடனும், கிழக்கே தேவ்கார் மற்றும் ஜம்தாரா மாவட்டங்களுடனும், மேற்கே ஹஸாரிபாக் மற்றும் கோடெர்மா மாவட்டங்களும், தெற்கே தன்பாத் மற்றும் பொகாரா மாவட்டங்களுடனும் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.
மலைகளின் மீது வீற்றுள்ள இந்த பழமையான சிறு நகரம் அண்டை மாநிலங்களிலிருந்து அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. 1972ம் ஆண்டில் இந்த நகரத்தை மையப்படுத்திய கிரிதிஹ் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
அதற்கு முன்னர் இது ஹஸாரிபாக் மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. 4853.56 ச.கி.மீ பரப்பளவில் பரந்திருக்கும் இந்த கிரிதிஹ் பகுதி ரூபி மைக்கா கனிமம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை கொண்டிருக்கிறது.
கிரிதிஹ் என்னும் பெயரில் உள்ள ‘கிரி’ என்பது மலையையும் ‘திஹ்’ என்பது உள்ளூர் மொழியில் உயரமான பூமி எனும் பொருளையும் குறிக்கின்றன. கிரிதிஹ் மாவட்டத்தின் பெரும்பகுதி காடுகள் நிரம்பியதாக காட்சியளிக்கிறது.
சால் மரம் இந்த காடுகளில் அதிகமாக காணப்படுகிறது. அதுதவிர மூங்கில், சேமல்,மஹுவா மற்றும் பலாஷ் மரங்களும் இந்த வனப்பகுதியில் மிகுதியாக வளர்ந்துள்ளன. மைக்கா உள்ளிட்ட ஏராளமான கனிம வளத்தையும் இந்த பூமி பெற்றிருக்கிறது.
பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்கள்
பரஸ்நாத் மலைகள் என்றும் ஸ்ரீ சம்மேத ஷிகார்ஜி என்றும் அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கிரிதிஹ் பகுதியில் முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இது ஜைன மதத்தை சேர்ந்தவர்களுக்கான யாத்திரை ஸ்தலமாகும் 24 தீர்த்தங்கரர்களில் 20 பேர் இந்த மலைப்பகுதியில் முக்தியடைந்துள்ளனர். கிரானைட் பாறைகளால் ஆன, ஜார்க்கண்ட் மாநிலத்திலேயே உயரமான சிகரம் ஒன்றும் இந்த மலையில் அமைந்திருக்கிறது.
பரக்கர் மற்றும் சக்ரி எனப்படும் இரண்டு முக்கியமான ஆறுகள் இந்த மாவட்டத்தின் வழியே பாய்கின்றன. உஸ்ரி எனும் நீர்வீழ்ச்சி ஒன்றும் இந்த பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. நகர்ப்பகுதியிலிருந்து 13 கி.மீ தூரத்திலுள்ள இந்த நீர்வீழ்ச்சி 40 அடி உயரத்திலிருந்து விழுகிறது.
கண்டோலி டேம் எனும் அழகிய அணைநீர்த்தேக்க சிற்றுலாத்தலம் ஒன்றும் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கிறது. பறவை ரசிகர்களுக்கு பிடித்தமான இந்த ஸ்தலத்தில் சாகச அனுபவங்களை விரும்பும் பயணிகளுக்கேற்ற படகுச்சவாரி, பாறையேற்றம், பாராசெய்லிங் (பாராசூட் பறப்பு) மற்றும் மிதவைப்படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பியுள்ளன.
நீர் விளையாட்டுகள் மட்டுமன்றி ஒட்டகச்சவாரி, யானைச்சவாரி போன்ற அம்சங்களும் இங்கு சுற்றுலாப்பயணிகள் விரும்பும் விதத்தில் அமைந்துள்ளன.
இவை தவிர்த்து ஹரிஹர்தாம் எனும் இடம் இங்கு ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று இந்த ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
துக்ய மஹாதேவ் கோயில் மற்றும் ஜார்க்கண்ட் தாம் ஆகிய முக்கியமான வழிபாட்டு தலங்களும் இந்த கிரிதிஹ் சுற்றுலாத்தலத்தில் அமைந்திருக்கின்றன. இங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஜமுவா எனும் இயற்கை அழகுப்பிரதேசம் ஒன்றும் சுற்றுலாப்பிரியர்களால் பெரிதும் ரசிக்கப்படும் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
கிரிதிஹ் பருவநிலை
வறட்சியான பருவநிலையை கொண்டுள்ள கிரிதிஹ் சுற்றுலாத்தலம் குளுமையான இனிமையான குளிர்காலத்தை பெற்றிருக்கிறது.
எப்படி செல்வது கிரிதிஹ் நகரத்திற்கு?
ரயில் மற்றும் சாலைவழி போக்குவரத்து ஆகியவை இந்த நகரத்தை அடைவதற்கான பிரதான பிரயாண வசதிகளை அளிக்கின்றன. மேற்கு வங்காளம் மற்றும் பீஹார் மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து இந்த நகருக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன.