இந்திரா பாயிண்ட் என்பது நிகோபார் தீவின் தென்கோடி முனையாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தென்கோடி முனை என்பதால் இந்த இடம் இந்திய சுற்றுலா பயணிகளால் சுவாரசியமான இடமாகவும் கருதப்படுகிறது.
மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவாக இந்த இடத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. 1972ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கலங்கரை விளக்கங்களில் ஒன்றாக இங்கு அமைந்திருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தை பார்த்து ரசிக்கவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
எல்லா கலங்கரை விளக்கங்களையும் போன்றே சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ள இது பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் உச்சியில் ஒரு ‘ஹெலிபேட்’ (ஹெலிகாப்டர் தளம்) அமைக்கப்பட்டிருப்பது இதன் விசேஷ அம்சமாகும்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது இந்த கலங்கரை விளக்கத்தின் ஒரு பகுதி சேதமடைந்துடன் சரி செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் பின்னாளில் புனரமைப்பு செய்யப்பட்டு எப்போதும் போலவே ‘மலேசியா-மலாக்கா-இந்தியா’ பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு திசைக்காட்டியாக செயல்பட்டுவருகிறது.
16 கடல் மைல் தொலைவுக்கு வெளிச்சம் தெரியக்கூடிய சக்தியை கொண்டுள்ள இது பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் ஒரே ஒரு கலங்கரை விளக்கமாகவும் அறியப்படுகிறது.
இதன் உச்சியிலிருந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அழகை பருகும் அனுபவத்தை எடுத்துச்சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு நீலப்பச்சை நீரால் சூழப்பட்டு வெண்மணற்பரப்புடன் பளீரிடும் தீவுகள் நம்மை பிரமிப்பில் திகைக்கச்செய்து இயற்கையின் படைப்பு குறித்த விழிப்புணர்ச்சியை நம்முள் புதிதாய் ஏற்படுத்துகின்றன.