இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் குஜராத் மாநிலம் அதன் புவியியல் இருப்பிடத்திற்காகவும், வெகு ஆழமான இந்திய பாரம்பரிய மரபு மற்றும் கலாச்சாரத்துக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய துணைக்கண்ட வரலாற்றில் மிக நீண்ட காலமாகவே வாணிகம், கலாச்சாரம் போன்றவற்றின் கேந்திரமாக குஜராத் மாநிலம் இருந்து வந்துள்ளது. தேசப்பிதா மஹாத்மா காந்தி இம்மண்ணில் பிறந்தவர் என்பது இந்த மாநிலத்தின் மற்றொரு தனிப்பெருமையாகும்.
புவியியல் ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட இயல்பம்சங்களை குஜராத் மாநிலம் பெற்றிருக்கிறது. கட்ச் வளைகுடாப்பகுதியின் உப்பு சதுப்புநிலப்பகுதி, அழகிய கடற்கரைகள், சபுத்ரா மற்றும் கிர்னார் மலைகள் மற்றும் அவை சார்ந்த இயற்கை எழிற்பிரதேசங்கள் போன்றவை இந்த மண்ணிற்கு ஒரு தனித்தன்மையான ரம்மியத்தை வழங்கியுள்ளன.
குஜராத் மாநிலம் அதன் வடபகுதியில் உள்ள கட்ச் பகுதி மற்றும் தென் மேற்குப்பகுதியில் உள்ள கத்தியவார் ஆகிய இரண்டு பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.
சௌராஷ்டிரா என்றும் அழைக்கப்பட்ட கத்தியவார் பிரதேசம் ஆங்கிலேயர் காலத்தில் 217 சமஸ்தானங்களை உள்ளடக்கியிருந்தது. எனவே வரலாற்று காலத்தை சேர்ந்த பல உன்னத நினைவுச்சின்னங்கள் மற்றும் மாட மாளிகைகளை இந்த பிரதேசம் கொண்டிருக்கிறது.
குஜராத்திய கலாச்சார மரபின் உன்னத அம்சங்களை இங்கு கொண்டாடப்படும் ராஸ் மற்றும் கர்பா கொண்டாட்டங்களின் போது பார்த்து ரசிக்கலாம்.
குஜராத் மாநிலத்தின் சுற்றுலாச்சிறப்புகள்!
26 மாவட்டங்களை கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் வேறெங்கும் பார்க்க முடியாத பல அற்புதமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.
கன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில அமைப்பை கொண்டு காட்சியளிக்கும் கட்ச் ரான் வளைகுடாப்பகுதி ஆகியவை குஜராத் மாநிலத்தை ஒரு சுவாரசியமான சுற்றுலா பூமியாக அடையாளப்படுத்துகின்றன.
தித்தால் எனும் கருப்பு மணல் கடற்கரை, மாண்டவி பீச், சோர்வாட் பீச், அஹமத்பூர் –மாண்ட்வி பீச், சோம்நாத் பீச், போர்பந்தர் பீச், துவாரகா பீச் என்று ஏராளமான அழகுக்கடற்கரைகள் குஜராத் மாநிலத்தில் நீண்டு கிடக்கின்றன.
இயற்கை அழகு ஒரு புறம் இருக்க இந்தியா முழுமைக்கும் அறியப்படும் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களும் இந்த குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளன. துவாரகா மற்றும் சோம்நாத் ஆகியவை இந்திய புராணிக மரபில் பிரதான இடத்தை பெற்றுள்ள புனித ஸ்தலங்களாக புகழ் பெற்றுள்ளன.
இவை தவிர அம்பாஜி கோயில் மற்றும் கிர்னார் மலைகளில் உள்ள ஹிந்து மற்றும் ஜைனக்கோயில்களும் முக்கியமான வழிபாட்டுத்தலங்களாக பிரசித்தமாக அறியப்படுகின்றன.
மிக முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஸ்தலங்கள் போன்றவற்றையும் குஜராத் மாநிலம் பெற்றிருக்கிறது. ஹரீர் வாவ் எனும் படிக்கிணறு மற்றும் சம்பானேர் வரலாற்று ஸ்தலம் போன்றவை வரலாற்று ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அம்சங்களாகும்.
அஹமதாபாத் நகரத்தின் பழைய கோட்டைச்சுவர் சிதிலங்கள் மற்றும் கோட்டை வாசல்கள் பார்வையாளர்களை வேறொரு காலகட்டத்திற்கு இழுத்துச்செல்லும் மாய சக்தியுடன் காட்சியளிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களில் 40 வகைகளுக்கும் மேற்பட்ட விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
அரிய வகை ஆசிய சிங்கம், காட்டுக்கழுதை, கருப்புமான் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. கிர் தேசிய பூங்கா, வன்ஸ்தா தேசிய பூங்கா, வெராவதார் பிளாக்பக் தேசிய பூங்கா, நாராயன் சரோவர் காட்டுயிர் சரணாலயம், தொல் ஏரி பறவைகள் சரணாலயம், கட்ச் காட்டு மயில் சரணாலயம் போன்றவை இந்த மாநிலத்திலுள்ள முக்கியமான காட்டுயிர் இயற்கைப்பூங்காக்களாகும்.
பொருளாதார ரீதியான செல்வம் மற்றும் கலாச்சார செல்வம் இரண்டையும் ஒருங்கே பெற்றுள்ள இந்திய மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாநிலம் விளங்குகிறது. இம்மாநிலத்தின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படுகின்றன.
குறிப்பாக குஜராத்திய ஆண்களின் உடையலங்காரம் வித்தியாசமான அம்சங்களை கொண்டதாக பயணிகளை வசீகரிக்கிறது. மணிகள் மற்றும் கண்ணாடித்துண்டுகள் கோர்க்கப்பட்ட பூத்தையல் வேலைப்பாடுகளை கொண்ட காக்ரா சோளி உடைகள் பெண்கள் மத்தியில் வெகு பிரபல்யமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பதான் பகுதியில் கிடைக்கும் பதோலா புடவைகள் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பருவநிலை
கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று முக்கிய பருவங்களை குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் மழைக்காலத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது. கோடைக்காலத்தில் கடும் வெப்பமும் நிலவுகிறது. எனவே குளிர்காலத்தின்போது குஜராத் மாநிலத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது சிறந்தது.
மொழிகள்
குஜராத் மாநிலத்தில் பிரதானமாக குஜராத்தி மொழியே பேசப்படுகிறது. இது தவிர பார்சி குஜராத்தி, கம்தி, கத்தியவாடி மற்றும் சிந்தி, கட்சி ஆகிய மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன.
தொழில் மயமாக்கல் பெரும் அளவில் விரிவடைந்துவருவதால் வெளி மாநில மக்கள் அதிக அளவில் இங்கு குடியேறிவருகின்றனர். எனவே ஹிந்தி மற்றும் ஆங்கிலமும் பெருநகர்ப்புறங்களில் புழக்கத்தில் உள்ளது.
குஜராத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவதொரு சுவாரசிய அம்சம் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் காணப்படுகிறது. தற்போது குஜராத் மாநில அரசாங்கம் இம்மாநிலத்தின் சுற்றுலா அம்சங்கள் குறித்த பிரச்சாரம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்திய பாரம்பரியம் மற்றும் வரலாற்றுப்பின்னணி போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள் வாழ்நாளில் ஒருமுறை விஜயம் செய்ய வேண்டிய மாநிலம் குஜராத் என்பதில் ஐயமில்லை.