குல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்களால் 1927ல் கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் என்றால், மலர் மைதானம் என்று பொருள். அழிக்கும் தொழிலை செய்யும் இந்து கடவுளான சிவபெருமானின் மனைவியான கௌரியின் நினைவாக, குல்மார்க் முந்தைய காலத்தில்,கௌரிமார்க் என்று அழைக்கப்பட்டது. இவ்விடத்தின், அழகு, சரிவான புல்வெளிகள், அமைதியான சூழல் ஆகியவற்றில் மயங்கிய, காஷ்மீரின் கடைசி மன்னரான ராஜா யூசுஃப் ஷா சக் என்பவரால், தற்போது குல்மார்க்என்று அழைக்கப்படுகிறது.
அபர்வத் சிகரத்தின் பனிக்கட்டிகளில் இருந்து உருகி வழியும் நீரினால் உருவான நிங்கல் நல்லா என்னும் நீரோடையை சுற்றுலாப் பயணிகள் அவசியம் காணவேண்டும். இந்நீரோடையானது, மலைச் சிகரங்களினூடே கீழிறங்கி, சொபோர் என்னும் இடத்துக்கருகில், ஜீலம் நதியில் கலக்கிறது.
இந்நீரோடை முடியும் இடமான கிலன்மார்க் என்னும் இடத்தில் உள்ள சிறு பாலத்தினை கடந்து இதன் எழிலை ரசிக்கலாம். இவ்விடம் ஒரு பிரசித்திபெற்ற சுற்றுலாப் பகுதியாகும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின், அவுட்டர் சர்க்கிள் வாக் ‘Outer Circle Walk’ எனப்படும் வெளிவட்ட நடைப்பயணம் சுற்றுலாப்பயணிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மற்றொரு நிகழ்வாகும்.
இந்நடைப்பயணத்தின்பொழுது, இப்பகுதியின் இயற்கை எழிலையும், 8500 மீட்டர் உயரமுள்ள, உலகின் நான்காவது உயர்ந்த சிகரமான நங்கபர்வதத்தின் கம்பீரமான காட்சியையும் கண்டு இன்புறலாம்.
இதமான காலநிலை, எழில் ததும்பும் நிலக்காட்சிகள், மலர்கள் பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டங்கள், அடர்ந்த பைன் மரக்காடுகள், அழகிய ஏரிகள் என அத்தனை வனப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கும் குல்மார்க் உலகெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகளை தன்னருகில் கவர்ந்திழுப்பதில் வியப்பு ஏதுமில்லை.
கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணப்படும் பசுமை, அமைதியான சூழல் ஆகியவை இவ்விடத்தை ஒரு அற்புதமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன. நிங்கல் நல்லா, வேரிநாக், ஃபெரோஸ்பூர் நல்லா ஆகியவை இப்பகுதியில் ஓடு நீரோடைகளில் சில.
வேரிநாக் நீரோடையின் தெள்ளத் தெளிவான தூய்மையான நீர் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என நம்பப்படுவதால் அதன் காரணமாகவும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்திபெற்ற மற்றொரு இடம், குல்மார்க் உயிரிக்கோள பாதுகாப்பிடம் (Biosphere Reserve of Gulmarg) ஆகும்.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட டிரங்க் என்னும் இடம் ஒருநாள் சிற்றுலாக்களுக்கு ஏற்ற இடமாகும். இங்கு வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகள், இவ்விடத்தின் கண்கவரும் இயற்கை எழிலை கண்டு இன்புறுவதோடு, ஏரிகளில் மீன்பிடித்தும் மகிழலாம்.
குல்மார்க்கிலுள்ள லியன் மார்க் என்னும் இடமும் இயற்கை எழிலுக்கு பேர்போன இடம் ஆகும். அடர்ந்த பைன் மரக் காடுகளும், காட்டு மலர்களும் நிரம்பி இவ்விடத்தை தங்கி மகிழவும் சுற்றிப்பார்த்து இன்புறவும் ஏற்ற ஒரு இடமாக ஆக்கியுள்ளன.
குல்மார்க்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்பாதர் ஏரியும் காணத்தக்க ஒரு இடமாகும். இந்த ஏரியின் சிறப்பம்சம் என்னவெனில், ஆண்டு முழுவதும் ஜூன் மாத மத்தி வரையிலும் இதிலுள்ள நீர் உறைந்திருக்கும்.
கோடைகாலத்தில் நீர் உருக ஆரம்பித்து, பள்ளத்தாக்கினூடே பனிக்கட்டிகளைத்தாங்கிய நீரோடையாக ஓட ஆரம்பிக்கும். பனிபடர்ந்த வெள்ளிப்பனிமலைகள் பின்புலத்தில் அமைந்து இப்பகுதியை எழில்மிக்க சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.
கேபிள் கார் போன்ற இயக்கமுறைகொண்ட கோண்டோலா பயணமும் குல்மார்க்கிலுள்ள மற்றொரு கவர்ச்சியான அம்சமாகும். 5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய இரண்டு தடங்களை சுற்றுலாப்பயணிகள் தேர்ந்தெடுக்கலாம்.
குல்மார்க்கிலிருந்து காங்க்டூர் வரை ஒன்றும் காங்க்டூரிலிருந்து அபர்வத் வரை ஒன்றுமாக இரண்டு தடங்களில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலாவிலிருந்து இமயமலைச் சிகரங்களையும், கோண்டோலா கிராமத்தையும் கண்டு ரசிப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும்.
காங்க்டூரிலுள்ள கோண்டோலா நிலையம் 3099 மீட்டர் உயரத்திலும், அபர்வத் நிலையம் 3979 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளன. இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிமகிழும் ஒரு அனுபவமாக கோண்டோலா பயணம் அமைந்துள்ளது.
குல்மார்க்கிலுள்ள, பாபா ரிஷி கோவில், மீன்பிடி ஏரி, பானிபால் நாக், கௌதார் நாக், சோனாமார்க் ஆகியவையும் கண்டு இன்புறத்தக்க இடங்களாகும். இவை ஒருநாள் சிற்றுலா சென்று தங்கி மகிழவும் சுற்றிப்பார்த்து இன்புறவும் ஏற்ற இடங்கள்.
தங்கப் புல்தரை என்று பொருள்படும் சோனாமார்க் ஆனது இங்குள்ள மற்றொரு புனிதயாத்திரைத்தலமான அமர்நாத் குகைக்கோவிலை பார்க்கவிரும்பி வருகைதரும் பயணிகள் தங்கும் அடிவார முகாம் ஆகும். இவைதவிர, ஸ்ரீநகர், லே சாலை வழியாக, லடாக் மற்றும் ஸோஜில்லா வுக்கு செல்லமுடியும்.
சுற்றுலாப்பயணிகள் குல்மார்க்கிற்கு, எந்தக் காலநிலையிலும் செல்லலாம். ஆயினும், மார்ச் முதல் அக்டோபர் வரையான காலத்தில் இப்பகுதிக்கு வான் வழியாகவும், இரயில் வழியாகவும், சாலை வழியாகவும் எளிதில் சென்றடைய முடியுமாகையால், இக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா செல்வது சிறந்தது.