ஹலேபீடு எனும் பெயருக்கு ‘தொன்மையான நகரம்’ என்பது பொருளாகும். இது முற்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் இந்த நகரம் ‘துவாரசமுத்ரா’ எனும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. சமுத்திர வாயில் என்பது அந்த பெயரின் பொருளாகும்.
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் மாநிலத்தலைநகரான பெங்களூரிலிருந்து 184 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் கர்நாடகாவின் பாரம்பரிய தலைநகரமான மைசூரிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. 12ம் நூற்றாண்டு வரை ராஜகீர்த்தியுடன் விளங்கிய இந்த நகரம் இரண்டு முறை பாமனி சுல்தானால் சூறையாடப்பட்ட பின்னர் ஹலேபீடு (சிதில நகரம்) என்ற பெயரை பெற்றுவிட்டது.
காலத்தில் கரைந்து போன நகரத்தின் காட்சிகளும் ஒலிகளும்
இந்த ஸ்தலத்தில் அரசன் விஷ்ணுவர்த்தனன் மற்றும் அவரது ராணி ஷாந்தலா தேவியாரின் ஆணைப்படி கேதுமல்லாவால் கட்டப்பட்ட ஹொய்சளேஷ்வரா மற்றும் ஷாந்தலேஷ்வரா கோயில்கள் அமைந்துள்ளன.
வழவழப்பான சோப்புக்கற்கள் எனப்படும் பாறைகளை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ஹொய்சளேஷ்வரா கோயிலின் முன்புறத்தில் ஒரு ஒற்றைக்கல் நந்தி காணப்படுகிறது.
12ம் நூற்றாண்டைச்சேர்ந்த அப்போதைய மன்னர்கள் ஜைனத்தை பின்பற்றி வந்த போதிலும் பல சிவன் கோயில்கள் அவர்களால் கட்டுவிக்கப்பட்டுள்ளன. அக்கால சிற்பக்கலையின் மேன்மையையும் மஹோன்னதத்தையும் இந்த கோயில்களின் உள்ளும் புறமும் காணப்படும் நுட்பமான சிற்ப வடிப்புகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
தற்சயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் பயணிகள் இந்த நகரின் வரலாற்றுச்சின்னங்களை தரிசிக்க அதிக அளவில் வருகை தருகின்றனர். ஹலேபீடு ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்கள் மிக உகந்ததாக கருதப்படுகிறது. 2001 சென்சஸ் கணக்கெடுப்புப்படி தற்சமயம் இந்த நகரத்தின் மக்கள் தொகை 8962 என்பதாக உள்ளது.
உன்னதமான கலை அம்சங்களும் அற்புத கட்டிடக்கலை அம்சங்களும் நிரம்பி வழியும் இந்த நகரம் மற்றொரு வரலாற்று கலைச்சின்னமான சென்னகேசவா கோயில் அமைந்துள்ள பேலூரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றுச்சின்ன ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஹலேபீடு ஸ்தலம் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமாகும்.