ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான். விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கி, ஹொய்சள கட்டிடக்கலை பாணியின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஹம்பி அல்லது விஜயநகர் என்று அழைக்கப்படும் சுற்றுலா ஸ்தலத்தை கற்களில் எழுதப்பட்டுள்ள கவிதை எனலாம்.
ஹம்பி – சில குறிப்புகள்
ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப் பட்டிருக்கும் நகரமாக இருந்த போதிலும் 13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர அரசர்களின் தலைநகரமாக சிறந்து விளங்கியது.
கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பெங்களூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஹம்பியை சில மணி நேர பயணத்தில் அடைந்திடலாம். யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்தலம் வருடம் தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கின்றது.
ஹம்பி இடுபாடுகளின் உன்னதத்தை முழுக்க ரசிக்க விரும்பினால் ஒரு வாடகை சைக்கிளில் ஓய்வாக ஹம்பியை சுற்றி வந்து பார்த்து ரசிக்கலாம். அதற்கு வசதியாக சைக்கிள்களும் மொபெட்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் அனுபவத்தினை விரும்புகின்றனர்.
போதும் போதும் எனும் அளவுக்கு நம் கண்களுக்கு திகட்டாத ஒரு விருந்தை ஹம்பியின் வரலாற்று இடிபாடுகள் அளிக்கின்றன.
ஏன் சுற்றுலா பயணிகள் ஹம்பியில் குவிகின்றனர்?
ஹம்பியிலுள்ள வரலாற்று இடிபாடுகளின் கட்டிடக்கலை அம்சங்களுக்காக மட்டுமின்றி அதன் ஆன்மீக வரலாற்று பின்னணிக்காகவும் ஹம்பி புகழ் பெற்று விளங்குகிறது.
இங்கு பல பிரசித்தி பெற்ற கோயில்களும் உள்ளன. விருபாக்ஷா ஆலயம் விட்டலா ஆலயம் மற்றும் ஆஞ்சனேயத்ரி போன்ற கோயில்கள் இங்கு உள்ளன.
கர்நாடகாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான துங்கபத்திரா இந்த நகரின் வழியே ஓடுகிறது. இடிபாடுகளும் அதன் பின்னணியில் துங்கபத்திரை ஆற்றின் அழகும் சேர்ந்து இந்த பிரதேசத்தின் இயற்கை எழில் நம்மை பிரமிக்க வைக்கிறது.
இந்த பிரதேசத்தை சுற்றிலும் காணப்படும் மலைகளிலிருந்தே விஜயநகர மன்னர்கள் தாங்கள் எழுப்பியுள்ள கோயில்களின் சிற்ப வேலைப்பாடு கொண்ட கல் தூண்களுக்கான பாறைகளை பெற்றுள்ளனர் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது.
இங்குள்ள நந்தி சிலையின் பின்னால் காணப்படும் பிரம்மாண்ட பாறைகளுக்கும் பாறையினால் ஆன அந்த சிலைக்கும் உள்ள தொடர்பை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
இயற்கை அழகு மற்றும் கோயில்கள் மட்டும் அல்லாமல் ஹம்பியில் அழகாக கட்டப்பட்டுள்ள பல தடாகங்களும் சமுதாய கட்டிடங்களும் அன்றைய விஜயநகர அரசின் ஆட்சி மேன்மைக்கும் நகர மேலாண்மை அறிவுக்கும் சான்றாய் விளங்குகின்றன.
இங்கு காணப்படும் நிலத்தடி தண்ணீர் பாதைகளும் மற்றும் கால்வாய்களும் 13ம் மற்றும் 15ம் நூற்றாண்டு காலத்திலேயே எந்த அளவுக்கு நம் மக்கள் நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கான சாட்சியமாய் விளங்குகின்றன.
ஹம்பியில் 500 க்கு மேற்பட்ட இடங்கள் நாம் பார்த்து ரசிப்பதற்கு உள்ளன. இவற்றில் 100 இடங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடம் தோறும் ஈர்க்கும் அளவுக்கு மிகுந்த பிரசித்தி பெற்றவை ஆகும்.
விட்டலா ஆலயத்தில் உள்ள கல் தேர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பாறைச்சிற்ப வேலைப்பாட்டிற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கல் தேர் சிற்பமே கர்நாடக மாநில அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை சின்னமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் ஹம்பி ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல விதமான சரித்திர கலைப்பொருட்கள் தொடர்ந்து கிடைத்தவாறே உள்ளன என்பது ஒரு வியப்பான விஷயம். இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகமும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.
ஒரு புறத்தில் துங்கபத்திரை நதியாலும் மற்ற மூன்று பகுதிகளிலும் மலைகளாலும் சூழப்பட்டு இயற்கையான அரணுடன் விளங்கிய இந்த ஹம்பி அல்லது விஜயநகரத்தினை அப்போதைய மன்னர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே விவேகத்துடன் தங்கள் தலைநகராக கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது. எப்படியும் எதிரிகளுக்கு விஜயநகரை தாக்குவது என்பது சற்று சிரமமான ஒன்றாகத்தான் இருந்திருக்க முடியும்.
அப்படிப்பட்ட அந்த விஜய நகரம் இன்று சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை வனப்பையும் தொல்லியல் வளத்தையும் கண்களுக்கு விருந்தாக அளிக்கின்றது. ஹொய்சள வம்ச கட்டிடக்கலையின் சிகரமாக விளங்கும் இந்த ஸ்தலம் தென்னிந்தியாவுக்கு வருகை தரும் எந்த ஒரு சுற்றுலா பயணியும் தவற விடக்கூடாத ஒன்று என்றால் அது மிகையில்லை.