நீண்ட தூர பயணங்கள் நம்மை எப்போதும் சோர்வடையச் செய்துவிடும் என்று நிறையபேர் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. உங்களின் ஈடுபாடுதான் உங்கள் புத்துணர்வை தீர்மானிக்கின்றன. உலகில் வெற்றிக்கனியை பறித்து சுவைத்தவர்களெல்லாம், ஏதோ ஒரு வகையில் தனக்கு ஒவ்வாததைக் கூட மாற்றிக்கொண்டவர்கள்தான். மனதை சோர்வடையாமல் வைத்துக்கொள்வதே நம் உடல் ஆரோக்கியத்துக்கு முதல் வெற்றியாகும். அலுத்துப்போய், மனமுடைந்து காணப்படும் ஒருவரை நீண்ட தூரம் அழைத்துச்சென்று பாருங்கள். பயணம் முடிந்ததும் புத்துணர்வு பெறுவார். மருத்துவர்கள் கூட அறிவுரைப்பார்கள் எந்த ஒரு நோயையும் சுற்றுப்புறத்தை மாற்றி சூழ்நிலைகளை மாற்றினால் குணமாக்கிவிடலாம். நான்கு சுவற்றுக்குள் அழுவதனால் கவலைத் தீர்ந்துவிடப்போவதில்லை. நம்மில் பலர் கூட வீட்டில் சண்டையிட்டாலோ, அலுவலகத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டாலோ பீச், ரெஸ்ட்ரான்ட், பூங்கா என ஏதோ ஒரு இடத்துக்கு சென்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம் அல்லவா...
வாரம் முழுவதும் ஒரே உழைப்பு, வந்த இடத்துக்கே வந்து வந்து மிகவும் போர் அடிக்கிறது என்கிறீர்களா. உங்களைப் போன்றோருக்கு சுற்றுலாத்தான் சிறந்த மருந்து. பழக்கப்பட்ட இடத்தில் இருப்பதனால் மனது மகிழாது.. அதற்கு புதுப்புது களம், புதுப் புது அனுபவங்கள் தேவைப்படுகிறது. நீங்களும் உங்க மனதை மகிழ்விக்கப்போகிறீங்களா.. எங்க கூட இப்பவே கிளம்பி வாங்க... கோயம்புத்தூரிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு டூர் போகலாம்.. தமிழ்நாடு வழியில் இல்ல... புட்டும் கடலயும், மீனுடன் தேங்காய் எண்ணெய்யும், மணக்கும் கேரளத்தின் வழியே... கேரள நாட்டிளம்பகுதிகளை காணலாம் வாங்க...
கோயம்புத்தூர்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரம் தொழில்களுக்கு மட்டுமல்ல சுற்றுலாவுக்கும் சிறந்த இடமாகும். இந்த ஊரில் சுற்றுலா செல்வதென்றால் அப்படி ஒரு ஆனந்தம். கோயம்புத்தூர் மட்டுமல்ல, பொள்ளாச்சியிலிருந்து, குன்னூர்,கோத்தகிரி என நீலகிரி வரை எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அதையெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள இதை சொடுக்குங்கள். நாம் கேரளாவுக்கு படையெடுப்போம்.
கோவை - பாலக்காடு
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நாம் 1.30மணி நேரத்தில் பாலக்காட்டை அடைய முடியும்.
பயணத்தின் தொடக்கத்திலேயே சின்னகுளம், பெரியகுளம் நம்மை வரவேற்கிறது. தமிழ்நாடு எல்லை முடிவடையும் இடத்தில் வாளையாறு ஒன்று உள்ளது. இங்கு மாநில வனத்துறை பயற்சியகம் அமைந்துள்ளது. இதற்கு பின் நாம் கேரள மாநில எல்லையைத் தொடுகிறோம். இங்கு சோதனைச் சாவடி இருக்கும்.
பாலக்காடு
கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் 'கேரளாவின் நெற்களஞ்சியம்' மற்றும் 'தானியக் களஞ்சியம்' என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
தனித்துவம்
அதோடு கேரளாவின் மற்ற மாவட்டங்களை போல் அல்லாமல் பாலக்காடில் அதிக அளவில் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருவதால் தனித்துவமான கலாச்சாரத்தினை இந்த நகரம் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் பாலக்காடில் நீங்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கலவையில் மாறுபட்ட உணவு வகைகளை ருசிக்கலாம்.
சுற்றுலா
நெல்லியம்பதி மலைவாசஸ்தலம், சைலன்ட் வேலி தேசிய பூங்கா, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை இயற்கை ரசிகர்களுக்கும், காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடங்களாக இருப்பதுடன், மறக்க முடியாத விடுமுறை அனுபவமாகவும் இருக்கும். மேலும், காஞ்சிரப்புழா, தோணி அருவி, ஒட்டப்பாலம், கொல்லேன்கோடு அரண்மனை, தென்குருசி போன்ற இடங்களும் நீங்கள் பாலக்காடு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.
pc:velumani
பாலக்காடு கோட்டை
பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு கோட்டை திப்புவின் கோட்டை என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1766-ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி மகாராஜாவால் கட்டப்பட்டது. பாலக்காடு கோட்டையை பெரும்பாலும் மைசூர் ஆட்சியாளர்களால் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இதற்கு அருகில் கோட்ட மைதானம் என்று அழைக்கப்படும் கோட்டை மைதானம் விசாலமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
PC:Me haridas
கோயில்கள்
கேரளாவில் உள்ள தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் கல்பாத்தி கோயில், கல்பாத்தி விஸ்வநாத சுவாமி ஆலயம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த சிவன் கோயிலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது நம்மை 1425-ஆண்டுக்கு அழைத்துச் சென்று விடும்.மேலும் பாலக்காடு நகரத்துக்கு அருகிலுள்ள கல்பாத்தி கிராமத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் தென்னிந்திய கலாச்சார வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பதால் 'தென்னிந்தியாவின் வாரணாசி' என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது.
மேலும் இங்கு ஜெயின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.
PC:Krishnadasnaduvath 16
பாலக்காடு - திருச்சூர்
பாலக்காட்டிலிருந்து திருச்சூருக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒட்டப்பாலம் வழியாக செல்லும் முதல் வழி 1.15மணி நேரத் தொலைவிலும், ஆலத்தூர், வடக்கெஞ்சேரி வழியாக செல்லும் பாதை 1.30மணி நேர பயணத்தொலைவிலும் அமைந்துள்ளது.
ஒட்டப்பாலம் வழியாக செல்லும்போது, ஆட்டுபுரம் கிருஷ்ணன் கோயில், கண்ணோட்டு காவு கோயில், மண்ணு காவு, திருவாஞ்சி கோயில், பிரம்மேஷ்வரா கோயில் என கோயில்களையும், பாரதபுழா ஆற்றின் கரையோரம் நல்ல பயணமும் கண்ணுக்கு விருந்தளிக்கும்.
திருச்சூர்
வரலாறு, பாரம்பரியம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் சங்கமமான திருச்சூர் நகரம் பூரம் விழாவுக்கு பெயர் பெற்றதாகும். இதைத்தாண்டி இந்த நகரத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன.
PC:Manojk
அதிரப்பள்ளி
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்ற பிரசித்தமான நீர்வீழ்ச்சியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை நீர்வீழ்ச்சிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் இந்த அதிரப்பள்ளி கிராமப்பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியின் இயற்கை வளம் கேரளாவில் வேறெங்கும் காணமுடியாத தனித்தன்மையான செழிப்பை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
PC: Arayilpdas
அதிரப்பள்ளிக்கு எப்படி செல்லலாம்
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சாலக்குடி - வால்பாறை சாலையில் அமைந்துள்ளது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, வழச்சல் நீர்வீழ்ச்சி மற்றும் சர்ப்பா நீர்வீழ்ச்சி போன்றவை அதிரப்பள்ளியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன. நீர்வீழ்ச்சிக்கான அனுமதி சுற்றுலா மற்றும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வாழச்சல் நீர்வீழ்ச்சி
அதிரப்பள்ளியிலிருந்து சுமார் 5கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள இந்த பகுதி நீரோடை, குளம் என பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
PC: Sreejithk2000
வாழச்சல் நீர்வீழ்ச்சிக்கு எப்படி செல்வது
திருச்சூரிலிருந்து 65கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. சுற்றிலும் பசுமையான காடுகளைக் கொண்ட இந்த பகுதியில் மிக அருமையான இடங்கள் அருகருகே அமைந்துள்ளது மிகச் சிறப்பாகும்.
திருச்சூரிலிருந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு 1.30மணி நேரத்தில் சென்றடையலாம்.
விளங்கன் குன்று
திருச்சூரை அடுத்த மலைப்பகுதியில் உள்ளது விளங்கன்குன்று எனப்படும் அழகியசுற்றுலாத் தளம். இங்குள்ள பூங்கா மிகவும் சிறப்பானதாகும். இந்த மலைக்குன்றின் மேல் சூரிய மறைவு மற்றும் உதயம் பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சிம்மின் காடுகள்
திருச்சூரை அடுத்து அமைந்துள்ள சிம்மினி வனவிலங்குகள் சரணாலயம் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும்.
நெல்லியகாதி மலைகளின் சரிவுகளில் மலையேற்றம் சிறப்பான சுற்றுலாவாக பார்க்கப்படுகிறது.
PC: Sirajvk
மரோடிச்சல் நீர்வீழ்ச்சி
இங்கிருந்து நான்கு கிமீ தொலைவில் அமைந்துள்ளது மரோடிச்சல் நீர்வீழ்ச்சி. இதுவும் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் ஒரு இடமாகும். சிறிய சிறிய நீர்வீழ்ச்சிகள் இங்கு நிறைய காணப்படுகின்றன. இவை சற்று ஆபத்தான பகுதியாகவும் அறியப்படுகிறது. தகுந்த கவனத்துடன் செல்க.
PC: Sreejith K
கோரட்டிப்பள்ளி
இந்த வழியே செல்லும்போது அருகில் கொரட்டிப்பள்ளி ஒன்று உள்ளது. இது இந்திய அளவில் புகழ்பெற்றதாகும்.
PC:Shijan Kaakkara
திருச்சூர் - கொச்சி
திருச்சூரிலிருந்து கொச்சி 2.15 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 85கிமீ பயணத்தொலைவில் கொச்சியை நாம் அடையலாம்.
கொச்சிக் கோட்டை
கொச்சியின் பிரதான அடையாளமாக திகழும் கொச்சி கோட்டையை அடைவதற்கு கடலைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒரு பெரிய பாலத்தின் வழியாக பயணிகள் இத்தீவுப்பகுதியை வந்தடையலாம். வரலாற்று அம்சங்கள், உள்ளூர் உணவு வகைகள் போன்ற பல சுவாரசியங்களை இப்பகுதி தன்னுள் கொண்டுள்ளது.
pc: Elroy Serrao
கொச்சி - ஆலப்புழா
கொச்சியிலிருந்து 1 மணி நேர பயணத்தில் ஆலப்புழாவை அடையலாம். இது கடற்கரை சாலை வழிப் பயணமாகும். அரபிக்கடலின் அழகை கண்டு வியந்து செல்லுங்கள். இடையில் நேரமிருந்தால் சேர்த்தலா, மறைக்குளம் ஆகியவற்றை காணுங்கள்.
ஆலப்புழா சுற்றுலா
‘ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது.
தவழும் கோயில்களும் இங்கு அதிகம் உள்ளன. அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில், செட்டிகுளங்கரா பகவதி கோயில், மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயில் போன்ற பிரசித்தமான கோயில்கள் தவிர்த்து எடத்துவா சர்ச், செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச், செயிண்ட் செபாஸ்டியன் சர்ச் ஆகிய கிறிஸ்துவ தேவாலயங்களும் இங்கு அமைந்துள்ளன.
இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள
PC: Kerala Tourism official Site
ஆலப்புழா கடற்கரை
137 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்ட கடற்கரைக்கு போகாமல் எப்படி? வேறு எந்த கடற்கரை நகரத்திலும் பார்க்க முடியாத ரம்மியமான கடற்கரை இந்த ‘ஆலெப்பி' பீச் எனப்படும் கடற்கரையாகும். நகர மையத்திலேயே உள்ள இந்த கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. ஒரு புறம் பரந்து விரிந்த அரபிக்கடலும், மறுபுறம் வரிசையாக காட்சியளிக்கும் பனை மரங்களுமாக கண்கொள்ளா அழகுடன் இந்த கடற்கரை நீண்டு கிடக்கிறது.
மேலும் தெரிந்துகொள்ள
கிருஷ்ணாபுரம் மாளிகை
கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாபுரம் அரண்மனை' என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை பல நூற்றாண்டுகளாக பல மாற்றங்களை தன்னுள்ளும், தன் சூழலிலும் கண்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் அன்றைய திருவாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இங்கிருந்த பழைய அரண்மனையை தரை மட்டமாக்கிவிட்டு ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனை மாளிகையை உருவாக்கியுள்ளார்.
pc: Native Planet
விண்ணைத் தான்டி வருவாயா பள்ளி
விண்ணைத்தான்டி வருவாயா படத்தில் காட்டப்படும் ஆலயம் இந்த வழியில்தான் இருக்கிறது.
ஆலப்புழா - கொல்லம்
ஆலப்புழா - கொல்லம் வழித்தடம் எண்ணற்ற சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது 86கிமீ நீளம் கொண்ட சாலையாகும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்தில் கொல்லத்தை அடையலாம். ஆனால் அதற்குமுன் வழியில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.
காயங்குளம் ஏரி
ஆலப்புழா தாண்டி பன்மனா மற்றும் கார்த்திகாபள்ளி இடையில் அரபிக்கடலில் இணைந்து காணப்படும் காயல் இதுவாகும். இங்கு படகு போக்குவரத்து சுற்றுலா மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
கடல்நீரும் ஆற்றுநீரும் கலக்கும் இடம் கட்டாயம் காணவேண்டியதலமாகும்.
pc:Mahesh Mahajan
கொல்லம்
குய்லான் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த கொல்லம் நகரம் அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.
கொல்லம் பீச்
கொல்லம் பீச் அல்லது மஹாத்மா காந்தி பீச் என்று அழைக்கப்படுகிற இந்த கொல்லம் கடற்கரையானது நீண்டு பரந்திருக்கும் மணற்பரப்புடன் கூடிய கண்களை கொள்ளை கொள்ளும் ஒரு கடற்கரையாகும். கொல்லம் பகுதியின் முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக அறியப்படும் இந்த கடற்கரையானது கொல்லம் நகர மையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் கொச்சுபிலாமூடு எனும் இடத்தில் உள்ளது.
அமிர்தபுரி
மாதா அமிருதானந்தா மாயி'யின் அமிருதபுரி ஆசிரமமும் ஒரு முக்கியமான ஆன்மிக யாத்திரை ஸ்தலமாக கொல்லத்தில் புகழ் பெற்றுள்ளது. ஆரியங்காவு, சவரா, கொட்டாரக்கரா, ஓச்சிரா மற்றும் கருநாகப்பள்ளி போன்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.
கொல்லம் - திருவனந்தபுரம்
கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையுள்ள சாலை 65கிமீ தூரம் கொண்டது. இது 2 மணி நேர பயணத்தில் கடக்ககூடியதாகும். வழியில் ஏராளமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன.
ஆக்குளம் கிராமம்
திருவனந்தபுரத்தில் ஆக்குளம் ஏரியும் ஒரு பகுதி, திருவனந்தபுரத்தில் மிகவும் அழகிய இடங்களில் ஒன்றாகும் ஆக்குளம் சுற்றுலா கிராமம் ஆகும். தெற்கு கேரளாவின் மிக அழகிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
PC:Mohan K
பூவார்
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது.
Read more at: https://tamil.nativeplanet.com/poovar/
PC: Nagesh Jayaraman
பூவார் பீச்
பூவார் கிராமத்தின் உப்பங்கழிகளில் அமைந்திருக்கும் ரிசார்ட்டுகள் மற்றும் குடில்களில் இருந்தவாறு சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு இந்த உப்பங்கழிகளில் படகுப் பயணம் செய்து நீங்கள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். பூவார் கிராமத்தில் இந்தியாவின் மிகவும் தொன்மை வாய்ந்த இஸ்லாமிய குடியிருப்புகள் பல இருக்கின்றன. இந்த குடியிருப்புகள் 1400 ஆண்டுகள் பழமையானவைகளாக கருதப்படுகின்றன.
பூவார் - கன்னியாகுமரி
பூவாரிலிருந்து கன்னியாகுமரி 72கிமீ தொலைவில் அமைந்துள்ளது.கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் குமரி முனையை அடைந்துவிடலாம். வழியில் கோவளம் கடற்கரைக்கு சென்று வந்தால் இன்னும் நேரம் எடுக்கலாம். எனினும் கோவளம் கடற்கரை தவிர்க்க இயலாத சுற்றுலாத்தளம் என்பதை நினைவில் கொள்க.
கோயம்புத்தூர் - கன்னியாகுமரி சுற்றுலா என்பது மிக மிக நேரம் எடுக்கும் பயணம்தான். ஆனால் வழியில் எத்தனை இடங்களை பார்த்தோம். மனம் புத்துணர்ச்சியடைந்ததல்லவா. எந்த ஒரு பிரச்சினைக்கும் கோபப்படாமல், பொறுமையாக இருக்க பழகலாம். முடியவில்லைஎன்றால் சுற்றுலா சென்று பழகுவோம். பலதரப்பட்ட மக்களை சந்திப்போம். பல்வேறு கலாச்சாரங்களின் மூழ்கி திளைப்போம். நம்மில் மனிதம் தளைக்கட்டும். மீண்டும் ஒரு இடத்துடன் வருகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்.