கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் எனும் அழகிய பிரதேசத்தில் அமைந்துள்ளது பத்ரா எனும் இயற்கை எழில் கொஞ்சும் காட்டுயிர் பூங்கா. இந்த காட்டுயிர் பூங்காவுக்காக சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது இந்த பத்ரா கிராமம். இது மிகுந்த எழில் வளம் நிறைந்து காணப்படும் இடம். வாருங்கள் நாமும் சென்று இங்குள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
எங்குள்ளது
சரியாக சிக்மகளூர் நகரத்திலிருந்து 38 கிமீ தூரத்திலும், தலைநகர் பெங்களூரிலிருந்து 282 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு 492 கிமீ அளவுக்கு விரிந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை வனப்பில் இளைப்பாற நினைப்பவர்கள் இந்த பக்கம் ஒதுங்கலாம்.
தாவர இனங்கள்
பத்ரா காட்டுயிர் பூங்கா மிக அழகிய, மருத்துவ குணம் நிறைந்த , உயர்ந்த பல மர வகைகளையும், தாவர இனங்களையும் கொண்டுள்ளது. தேக்கு, கருங்காலி, மூங்கில், பலா உள்பட 120க்கும் அதிகமான தாவர வகைகள் இங்கு காணப்படுகின்றன.
குரைக்கும் மான்
காட்டுயிர் பூங்கா என்றாலே அங்கு பல உயிரினங்களை காணும் ஆவல் ஏற்படும். அதிலும் பத்ரா காட்டுயிர் பூங்காவில் சிறப்பம்சமாக குரைக்கும் மான்கள் காணப்படுகின்றன. இவை இந்தியாவில் குறைவான அளவில் இருக்கின்றன.
விலங்கினங்கள்
புள்ளி மான்கள், சாம்பார் மான்கள், காட்டெருமை, கருங்குரங்கு, மந்திக் குரங்கு, தேவாங்கு, மலபார் அணில் மற்றும் யானைகள் என நிறைய விலங்குகள் இருக்கின்றன.
இவை தவிர சிறுத்தை, புலி, காட்டு நாய்,குள்ள நரி, கரடி, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன.
பறவை ஆர்வலர்களே வாருங்கள்
காட்டுயிர் சரணாலயமான இது பறவை ஆர்வலர்கள் விரும்பும் பகுதியாக புகழ் பெற்றுள்ளது. கிளிகள், புறாக்கள், கௌதாரி, காட்டுக்கோழி, புதர்க்காடை, பச்சைக்கிளி, மரகதப்புறா, மைனா மற்றும் மரங்கொத்திகள் போன்றவை இங்கு காணப்படும் சில குறிப்பிடக்கூடிய பறவைகளாகும்.
மற்ற பூச்சி இனங்கள்
காட்டுயிர் சரணாலயத்தில் கருநாகம், கண்ணாடிவிரியன், நாகம், சாரைப்பாம்பு, குழி விரியன் போன்றவை உள்ளன எனும் தகவல் தேவையாய் இருக்கலாம். இதர விலங்குகளான இந்திய ராட்சத பல்லி, முதலை போன்றவையும் இங்கு காணபடுகின்றன. மேலும் சில அற்புதமான வண்ணத்துப்பூச்சி வகைகளும் இந்த பத்ரா காட்டுயிர் சரணாலயத்தில் காணப்படுகின்றன