கண்ணிலிருந்து வரும் ஆனந்தம் மழை நீரினூடே கலந்து கரைந்து குளிரும் அளவுக்கு பைக்கில் சென்றிருக்கிறீர்களா? உடன் உங்கள் மனதுக்கு பிடித்த ஒருவர். மனம்விட்டு பேசிக்கொண்டே, மழைச்சாரலில் நனைந்துகொண்டே செல்லும் பைக் ரைடிங்க் எல்லாம் வரம் சாரே.... இதுவரை அப்படி ஒரு பைக் ரைடு போனதில்லையா? அப்ப இதுதான் சரியான சாய்ஸ்.
உடல் மட்டுமின்றி மனமும் புத்துணர்ச்சியை அடைந்திட, மிதமான வேகத்தில் எல்லா இடங்களையும் கண்டு களித்து நண்பர்களுடனோ, நம்பிக்கையானவர் ஒருவருடனோ இணைந்து செல்லும் பைக் ரைடிங்க் வழித்தடங்கள் இங்கு 5 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த இடங்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து, கேரளா செல்லும் வழித்தடங்களாகும். சரி.. போலாமா?
வால்பாறை - வாழச்சல் சாலைப்பயணம்
வால்பாறை - சோலையாறு - இடமலையாறு வழியாக வாழச்சலை அடையும் சாலையில் பயணித்திருக்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு அட்டகாசமான பயணம் வேறெந்த வழிகளிலும் பார்க்கமுடியாததாகும்.
காடு மலைகளினூடே பயணம்
பொள்ளாச்சியிலிருந்து சாலக்குடி தேசிய சாலைப்பயணம் ஒரு சிறப்பான அம்சமாகும். முக்கியமாக இந்த வழித்தடத்தில் வால்ப்பாறையிலிருந்து வாழச்சல் வரை பைக்கில் பயணித்துப்பாருங்கள் அதன் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.
பொள்ளாச்சியிலிருந்து தொடங்கும் பயணம் ஆழியாறு - வால்பாறை - சோலையாறு - மலக்காபாறை - புலியில்லாபாறை - அதிரப்பள்ளி வரை செல்லும் இந்த சாலையில் இஷ்டத்துக்கு பயணிக்கலாம். மலைப்பாதையில் உங்கள் கவனம் சிதறாமல், இயற்கையையும் அனுபவிக்கலாம்.
PC:Dilli2040
மழைப்பயணம்
இந்த வழித்தடம் எப்போதும் மழைப் பெய்ததைப் போலவே ஈரப்பதமாக காட்சியளிக்கும். கோடைக்காலத்தைத் தவிர்த்து மற்ற நாட்களில் சில்லென்று வீசும் காற்றில் குளிரில் பயணிக்க பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
PC:Thangaraj Kumaravel
சிறந்த காலம்
பயணத்துக்கு ஏற்ற காலம் என்று ஒன்று தனியாக இல்லை. எப்போது சென்றாலும் சிறப்பானதாகவே இருக்கும். எனினும்,மழையைப் பொருட்படுத்தாது நீண்டதூரம் பயணிப்பவர்களுக்கு மழைக்காலத்தில் இந்த சாலை நல்ல வரப்பிரசாதமாக அமையும்.
இந்த பயணம் மொத்தம் 71கிமீ தூரம் உடையதாகும். இந்த வழித்தடத்தில் பயணித்தால் வால்பாறையிலிருந்து வாழச்சலை அடைய 2 மணி நேரத்துக்கும் சற்று அதிகமான நேரம் பிடிக்கலாம்.
கொடைக்கானல் - மூணாறு
தமிழகத்துக்கு எப்படி கொடைக்கானலோ, அப்படி கேரளாவில் மூணாறு கொண்டாடப்படுகிறது. அப்படியானால் கொடைக்கானலிலிருந்து மூணாறு சாலைப்பயணம் எப்படி இருக்கும். முற்றிலும் மலைச்சாலையில் இதமான காற்றில் பைக்கில் பறந்தால் நன்றாக இருக்குமல்லவா?
திராட்சைத் தோட்டம்
தேனி அருகே திராட்சைத் தோட்டத்தையும், சன்னாசியப்பன் கோயில், கருப்பசாமி கோயில், வெற்றி விநாயகர் கோயில், கோட்டகுடி ஆறு, தீர்த்த தொட்டி முருகன், சம்பகுளமுனி கோயில், ஏலக்காய் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் என எண்ணற்ற இடங்களைப் பார்க்கலாம்.
PC:Ramkumar
எப்போது செல்லலாம்?
இந்த வழித்தடத்தில் பயணிப்பதே ஒரு சுற்றுலா மாதிரிதான். உண்மையில் உங்கள் மனம்விரும்பியவருடன் சண்டை இருந்தால், நீங்கள் இந்த வழியாக அவரை அழைத்துச் செல்லுங்கள். சென்று சேரும் முன்னரே உங்கள் சண்டை முடிந்து மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு இயற்கை சுற்றுலா உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.
PC: Kreativeart
வழி
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கேரளத்தின் இடுக்கி மாவட்டம் வரை இந்த சாலை நீள்கிறது. இது கிட்டத்தட்ட 81கிமீ நீளம் கொண்டது. இது ஆங்கிலேயர் காலத்திலேயே போடப்பட்ட வழித்தடம் என்பது சிறப்பாகும். தேனி, தேவிக்குளம் என அருகில் காணவேண்டிய இடங்கள் பல இருக்கின்றன.
குமுளியிலிருந்து வாகமன்
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள குமுளி எப்படி இருக்கும் என்பது பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அதுமாதிரி வாகமன் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டு மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவார நகரங்களாகும். இங்கேயும் ஒரு பைக் ரைடிங்க் போகலாம் வாங்க...
PC:SREEHARIPS
சாகச விரும்பிகளே
இந்த பயணம் சற்று ஆபத்தான அம்சங்கள் நிறைந்ததாகும். பைக் ரைடிங்க் கவனத்துடன் இல்லாவிட்டால் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புண்டு. கவனத்துடன் செல்லவேண்டும். மேலும் நிறைய மலைக்கிராமங்கள் வழி செல்கிறது இந்த பாதை.
PC: sakh wiki
எப்போது பயணிக்கலாம்
மற்ற மலைப்பயணங்களைப் போலவே இந்த பயணத்துக்கும் குறிப்பிட்ட நேரம் என்று இல்லை. ஆனால் மழை நேரங்களில் இந்த பாதை மிக ஆபத்தாக இருக்கும் எனவே பாதுகாப்பாக செல்லவேண்டும். வருடம் முழுவதும் செல்லத்தகுந்த பாதையாகும்.
PC:wiki
வழித்தடம்
இது வெறும் 45கிமீ பயணம் என்றாலும் கூட மலைப்பாதையென்பதால் 2மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் எடுக்கவாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த பயணத்தின் கிளைப் பயணமாக, புல்லுமேட்டிலிருந்து அய்யப்பன் கோயில், உப்புத் தாரா, கோட்டாமாலா வழியாக இன்னொரு பாதை செல்கிறது. மேலும், தமிழக - கேரள எல்லையில் செலிமடா எனுமிடத்திலிருந்து முற்றிலும் வேறு பாதையில் வாகமனை அடையமுடியும்.
தென்மலை - குற்றாலம்
இந்த பயணத்தில் நாம் பார்த்துவரும் இடங்கள் எல்லாமே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவார நகரங்கள் மற்றும் கிராமங்கள் தான். கிட்டத்தட்ட ஊட்டி, கொடைக்கானலுக்கு போன அனுபவத்தை, இந்த பயணம் உங்களுக்கு தரும் என நம்புகிறோம்.. அப்படி ஒரு பாதைதான் குற்றாலம் - தென்மலை வழித்தடம்.
PC: Kerala Tourism
பன்லேன்ட் அம்யூஸ்மன்ட் பார்க்
இந்த சாலையில் செல்லும்போதே பன்லேண்ட் அம்யூஸ்மன்ட் பார்க் ஒன்று உள்ளது. பின் அதைத் தொடர்ந்து பெயர் தெரியாத பல இடங்கள், அருவிகள், நீர்நிலைகள் உள்ளன. தவசி தம்புரான் கோயில், பிள்ளையார் கோயில், முப்பிடாதி அம்மன் கோயில், மலங்கரா கத்தோலிக்க ஆலயம் என நிறைய இடங்கள் உள்ளன,.
PC:Sktm14
பாலருவி
பின் சற்று தொலைவிலேயே பாலருவி அமைந்துள்ளது. இங்கு தான் எக்கோ டூரிஸம் எனப்படும் இயற்கை சுற்றுலா அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. பின் தென்மலை அணை, தென்மலை ஏரி என தென்மலையை அடைகிறோம்.
PC: Rakesh S
வழித்தடம்
இந்த வழித்தடம் குற்றாலத்திலிருந்து தென்மலைக்கு மொத்தம் 38கிமீ தான். தமிழ்நாடு - கேரளா பயணம் இனிதாக அமைய இந்த வழித்தடமும் ஒன்றாகும். அருகிலுள்ள கிராமங்கள் கொடுத்து வாங்கிதான் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இடங்களில் மலையாளமும், தமிழும் சரளமாக பேசப்படுகிறது.
திற்பரப்பு - நெடுமங்காடு
நாகர்கோயில் அருகே அமைந்துள்ள திற்பரப்பிலிருந்து, திருவனந்தபுரத்தின் நெடுமங்காடு வரை செல்லும் இந்த பயணம் மிகவும் அழகானதாக இருக்கும். வாருங்கள் சென்று பார்ப்போம்.
PC: Flickr
நாகர்கோயில் - நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலை
திற்பரப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் குற்றாலம் என்று போற்றப்படுகிறது. குற்றாலத்தின் அருமை உலகப்புகழ் பெற்றது. இது சின்னக்குற்றாலம். இங்கிருந்து நெடுமங்காடு செல்லும் வழியிலும் எண்ணற்ற பசுமை சுற்றுலாப் பிரதேசங்கள் அமைந்துள்ளன.
கோதையாறு மிகமுக்கிய நீர் ஆதாரமாகும்.
PC:Infocaster
எப்போது செல்லலாம்
இந்த வழித்தடம் பசுமையாக காணப்பட்டாலும் கோடைக்காலத்தில் வெய்யில் இருக்கும். மேலும் அருவிகளும் வறண்டு காணப்படும். எனவே கோடைக்காலம் தவிர்த்து வருடத்தின் அனைத்து நாள்களும் பயணிக்கலாம்.
PC:Rrjanbiah
வழித்தடம்
மொத்தம் 46 கிமீ தூரம் கொண்ட இந்த பாதை வல்லாரடா எனும் தமிழக- கேரள எல்லையைக் கடந்து, குடப்பனமூடு, குட்டிச்சல் வழியாக நெடுமங்காட்டை அடைகிறது. இடையில் நெய்யார் அணை, நெய்யார் காட்டுயிர் சரணாலயம் ஆகியன அமைந்துள்ளன.