கேரளத்தில் பருவமழை காலம் துவங்கிவிட்டது. கேரளத்தை சுற்றிப்பார்க்க இதைவிட அருமையான நேரம் இருக்க முடியாது. இந்தியாவில் இருக்கும் மிகவும் பசுமையான மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் பருவமழை காலத்தின் போது தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் வரை மழைப்பொழிவு இருக்கும். பசுமை ததும்பும் மலைச்சிகரங்கள், வெள்ளித்துளியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள் என இயற்கையின் பேரழகை ரசிக்க மிகச்சிறந்த நேரமாகும் இது. மழைக்காலத்தில் கேரளாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய ஐந்து இடங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
வயநாடு:
மலைச்சிகரங்களும், தேயிலைத்தோட்டங்களும் நிறைந்திருக்கும் வயநாடு ட்ரெக்கிங் செய்வதில் விருப்பமுடையவர்களின் சொர்க்கம் எனலாம். மழைக்காலத்தில் இங்குள்ள செம்பரா சிகரத்தில் மலையேற்றம் செய்வது அலாதியான அனுபவமாக இருக்கும். எடக்கல் குகை, மீன்முட்டி அருவி, சூச்சிப்பாறை அருவி போன்ற இடங்களும் நிச்சயம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாகும்.
பீர்மேடு:
தமிழக கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அதிகம் தீண்டப்படாத மலைவாசஸ்தலம் தான் பீர்மேடு ஆகும். பீர்மேடு மலையை சுற்றி ஏராளமான அருவிகள் இருக்கின்றன. பீர்மேட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கும் வளஞ்சங்கனம் அருவி இங்கிருக்கும் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும்.
அதுதவிர பாஞ்சாலிமேடு, நல்லதண்ணி அருவி, மேலோரம் போன்றவையும் சுற்றிப்பார்க்க நல்ல இடங்களே. பீர்மேடு மலைப்பிரதேசத்தில் கல்தோட்டி, வாகமன், கரண்டகபாரா, கிராம்பி, பரந்துபரா, மேமலா போன்ற குன்றுகள் புகழ்பெற்ற டிரெக்கிங் குன்றுகளாக அறியப்படுகின்றன.
கோவளம்:
கேரளாவில் இருக்கும் குட்டி கோவா கடற்கரை போன்ற இடம் தான் கோவளம் கடற்கரை ஆகும். கிட்டத்தட்ட 17கி.மீ நீளம் கொண்ட கோவளம் கடற்கரைகள் பிறைநிலா வடிவில் இயற்கையாக அமையப்பெற்றிருக்கின்றன.
லைட் ஹவுஸ் பீச், ஹவாஹ் பீச், சமுத்ரா பீச் ஆகியவை தான் கோவளத்தில் இருக்கும் மூன்று கடற்கரைகள் ஆகும். லைட் ஹவுஸ் கடற்கரையில் கோவா கடற்கரைகளில் இருப்பதை போல நீச்சல் உடையணித்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை காண முடியும்.
அதிரப்பள்ளி:
திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் அதிரப்பள்ளி அருவி தான் கேரளத்திலேயே மிகவும் பிரபலமான அருவியாகும்.திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முகுந்தபுரம் தாலுக்காவில் அமைந்திருக்கிறது பசுமை நிறைந்த அதிரப்பள்ளி என்னும் ஊர். இங்கு கேரளத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை வளம் செழித்திருக்கிறது.
இந்த அதிரப்பள்ளி அருவி 'இந்தியாவின் நயாகரா' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் அளவிற்கு பிரமாண்டமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த அருவியின் மேல் சென்று பார்த்தால் அருவியை சுற்றியிருக்கும் பகுதிகளின் பசுமையை கண் குளிர காணலாம். அருவிகளை புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது.