தமிழ் நாட்காட்டியின் படி ஆறாவது மாதமான புரட்டாசிக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. இம்மாதம் காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதமாகும். இம்மாதம் முழுக்கவே புரட்டாசி விரதம், நவராத்திரி விரதம் என்று விரதங்கள் பல உள்ளன. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட புரட்டாசி சனிக் கிழமைகளில் விரதம் இருந்தால் முழுப் பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கவுள்ள புரட்டாசி மாதத்தில் என்ன கடவுளின் திருத்தலத்திற்குச் சென்று வர வேண்டும் தெரியுமா ?
புரட்டாசி விரதம்
எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாக;த திகழ்பது புரட்டாசி மாதம் என அக்னி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகி நன்மைகள் அmதிகரிக்கவும் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி விரதத்துக்கும் வழிபாட்டுக்கும் இன்னுமொரு காரணமும் உண்டு. சனி பகவான் புரட்டாசி மாதத்தில்தான் அவதரித்தார். சனி பகவானால் விளையும் தீமைகளை குறைப்பதற்காகக் காக்கும் கடவுளுக்கு சனிக்கிழமை விரதம் இருக்கும் வழக்கம் தொடங்கியது.
பெருமாளுக்கான புரட்டாசி
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த காலமாகும். இக்காலத்திலேயே பெருமாளுக்குறிய சிறப்பு வழிபாடுகள் அதிகளவில் கடைபிடிக்கப்படுகின்றன. குறிப்பாக, இம்மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருவிழாக் கோலம் தான். திருமலையில் இம்மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்சவம் மற்றும் கருடசேவை விழா களைகட்டும்.
நலன் பெருக்கும் பெருமாள்
புரட்சி மாதம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமின்றி அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் என தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் ஆதரவும் இணைந்து கிடைக்கிறது. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து பெருமாளுக்கான தலத்திற்கு சென்று வழிபட்டு வர எதிர்பாராத நன்மைகளும் தேடி வரும்.
பரிகாரத் தலங்கள்
வைனவக் கடவுளான பெருமாளுக்கு தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்திலும் பல பகுதிகளில் திருத்தலங்கள் காணப்பட்டாலும் ஒருசில தலங்கள் மட்டுமே பரிகாரத்திற்கு ஏற்றதாக உள்ளன. அவற்றுள், ரங்கநாத பெருமாள், விஜயராகவப் பெருமாள், நித்திய கல்யாணப் பெருமாள், ஸ்ரீபிரசன்ன பெருமாள், வைகுந்தப் பெருமாள், திட்டக்குடி சுகாசனப் பெருமாள் உள்ளிட்ட கோவில் தலங்கள் பக்தர்கள் அதிகம் விரும்பி பயணிக்கக் கூடியதாகும்.
ரங்கநாத பெருமாள்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இங்கேயே அமைந்துள்ளது புரட்டாசி பரிகாரத் தலமான ரங்கநாத பெருமாள் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில் உள்ள மூலவர் கற்சிலையால் வடிவமைக்கப்பட்டதில்லை. மாறாக சுண்ணாம்பு, மூலிகை உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் 5 தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது பெருமாள் பள்ளி கொண்டு இருப்பதுபோல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரிய பெருமாள்
பெருமாளின் அவதாரங்களிலேயே முதல் அவதாரம் மச்ச அவதாரம், முதல் யுகம் கிருதாயுகம் என்பதால் இவர் இத்தல மூலவர் பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். ஆதியிலே தோன்றியதால் தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வழிபாடுகள்
பிரம்மாவுக்கு 4 வேதங்களையும் பெருமாள் கற்பித்த இடம் ஆதிதிருவரங்கம். இதனால் இக்கோவில் கல்விக்குறிய தலமாகவும் விளங்கி வருகிறது. குழந்தை பாக்கியம், திருமணம் ஆகாதவர்களும், வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களும் இத்தலத்தில் சனிக்கிழமை தோறும் வழிபட்டுச் செல்ல நினைத்தது நடக்கும் என்பது தொன்நம்பிக்கை.
எப்படிச் செல்வது ?
சென்னையில் இருந்து 205 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோவிலூர். பெயருக்கு ஏற்றதைப் போலவே ஊர் முழுவதுமே கோவில்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் பெருமாள் வழிபாட்டுத் தலங்களே அதிகம். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கநாத பெருமாள் ஆலயம் உள்ளது. மணலூர்பேட்டையில் இருந்து ஆதிதிருவரங்கத்துக்கு பேருந்து வசதிகள் அதிகளவில் உள்ளன.
விஜயராகவப் பெருமாள் கோவில்
திருச்சி பொன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் அடுத்து சிறிய ராஜகோபுரமும் உள்ளன. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதி உள்ளன. கருவறையில் ராமபிரான், விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு
ஒரு நூற்றாண்டு பழமையான கோவிலான இங்கே தொடக்கத்தில் அனுமன் திருமேனி மட்டுமே tழிபாட்டிற்காக இருந்துள்ளது. பக்தர் ஒருவர் கனவில் வந்த ராமர் தன்னையும் இங்கு பிரதிஷ்டை செய்யும்படி கூற அதன்படி ராமபிரான் சீதா பிராட்டி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மூலவர் அருகிலேயே உற்சவர் திருமேனிகளும் உள்ளன. இத்தலத்தில் வைகானச ஆகம முறைப்படி ஆராதனைகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாத பிறப்பில் இத்தலத்தில் நடைபெறும் திருவிழா வெகு விமர்சையானது.
எப்படிச் செல்வது ?
திருச்சி மாநகரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்மலை அடிவாரத்தில் உள்ளது இத்திருத்தலம். கும்பகோணம், ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் என எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் இக்கோவிலை அடையும் வகையில் போக்குவரத்து வசதிகள் உள்ளன.
நித்திய கல்யாணப் பெருமாள்
திருவிடந்தை எனும் தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாக அருள்புரிவேன் என பெருமாள் உறுதி கூறி வீற்றுள்ள தலம் நித்தியகல்யாணபுரி. உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது. திருமணமாகாதோர் இத்தலத்தில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை வணங்கி அர்ச்சனை செய்து கோவிலை ஒன்பது முறை வலம் வரவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கூடிய விரைவில் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தலவரலாறு
பல்லவ மன்னர் ஒருவர், திருவிடந்தை தலத்தின் மகிமையை அறிந்து மூலவரே வராக மூர்த்தியாக அமையும் வகையில் ஆலயம் கட்டினார். இந்த ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம். செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளிட்டு தோஷங்களின் காரணமாக திருமணம் முடிக்காமல் இருப்போர் ஒரு முறை இத்தலத்திற்கு வந்து வழிபட்டுப் பாருங்கள். கூடிய விரைவில் டும்டும்டும் தான்.
எப்படிச் செல்வது ?
சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது நித்ய கல்யாண பெருமாள் கோவில். செடனனையில் இருந்து கடற்கரை சாலையிலேயே பயணித்தால் கோவலம், திருவிடந்தை அடுத்து ஒரு சில கிலோ மீட்டர் இக்கோவிலை அடைந்து விடலாம்.
ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்
திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை அங்கேயே சென்று செலுத்த முடியாதவர்கள் அந்த வேண்டுதலை நிறைவேற்ற ஏற்ற தலம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி. திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்தலம். பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷம் உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டுச் செல்ல வேண்டியவை யாவும் நிறைவேறும்.
எப்படிச் செல்வது ?
சென்னையில் இருந்து பேருந்து மூலம் திருச்சியை அடைந்து இங்கிருந்து சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி சென்று பின் அங்கிருந்து அரசு பேருந்து மூலமாகவும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலை அடையலாம்.
நொளம்பூர் வைகுந்தப் பெருமாள்
புராண ரீதியாக பல யுகங்களைக் கடந்தது நொளம்பூர் வைகுந்தப் பெருமாள் திருத்தலம். பூலோக வைகுண்டமாக விளங்கும் இத்திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுந்தப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்மழை பொழிகின்றார். ஆறு அடி உயர மரகதக்கல் திருமேனியில் வரதஹஸ்த நாயகனாகப் பெருமாளும், ஐந்தடி உயரத்தில் தாயார் இருவரும் கருணையே வடிவமாகவும் தரிசனம் தருகின்றனர்.
வழிபாடுகள்
நொளம்பூர் வைகுந்தப் பெருமாள் கோவிலில் கருடாழ்வார், நரசிம்மர், ஹயக்ரீவர் கிருஷ்ணர் ஆகியோருக்கு தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. வெள்ளி, சனிக்கிழமைகளிலும், திருவோண நட்சத்திரத்திலும், பவுர்ணமி தினத்திலும் இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. நோய் தீரவும், எதிரி தொல்லை நீங்கவும், மன அமைதி பெறவும் இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஆண்டுதோறும் புரட்டார மாத பிறப்பு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
எப்படிச் செல்வது ?
சென்னையில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நொளம்பூர். சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து முகப்பேருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் பேருந்து மூலமாக வாவின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்தும் மேற்கு முகப்பேர் பேருந்து நிலையம் வரலாம். இங்கிருந்து கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளன.
திட்டக்குடி சுகாசனப் பெருமாள்
சோழ நாட்டில் வட எல்லையாகப் பாய்வது வெள்ளாறு. இந்த நதி வேதநதி, பருவாறு, உத்தம சோழப் பேராறு என பல பெயர்களுடையது. இதன் வடகரையில் அமைந்த தலமே திட்டக்குடி. சைவ - வைணவ சமயங் களின் பெருமைகளைப் பறைசாற்றும் இங்கே ஸ்ரீமந் நாராயணன் மூன்றுவிதக் கோலமாக திட்டக்குடியில் அமர்ந்த கோலத்திலும், கிழக்கில் வசிஷ்டபுரத்தில் சயன கோலத்திலும், மேற்கில் கூத்தப்பன்குடிக் காட்டில் நின்ற கோலத்திலும் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
தல அமைப்பு
திட்டக்குடி சுகாசனப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் திருவுருவத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையின் உள்ளே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுகாசனப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். தும்பிக்கையாழ்வார், ராமர் பாதம், ராமர் பட்டாபிஷேக கோலம், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனியே சன்னிதிகள் உள்ளன.