நம்ம ஊரு பக்கத்துலயே இருக்குற ஒரு கிராமத்துல வீட்டுக்கு வீடு ஒரு சமையல்காரராவாது இருக்காங்களாம். அந்த கிராமமே சமையல் கிராமம்னு அழைக்கப்படுது. இந்த நூற்றாண்டுல இப்படியும் ஒரு கிராமம் வாங்க பாக்கலாம்.
தமிழ்நாடு - இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு இனங்களுக்கு நடுவில், தனித்து தெரியும் ஒரு இன மக்கள் வாழும் நாடு. இந்தியாவின் மிக முக்கிய இன்றியமையாத தவிர்க்க முடியாத மாநிலங்களின் பட்டியலில் நிச்சயம் முதல் மூன்றில் ஒன்றாக அமையும் மாநிலம் இதுவாகும். மேலும் இதன் இயற்கை அழகும், தொழில் வளமும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களை கட்டாயம் தன்னை நோக்கி பயணிக்க வைக்கிறது. இப்போது நாம் காண விருப்பது கடற்கரைகள், மலைகள், இயற்கை கண்காட்சிகளைக் கொண்ட தமிழகத்தின் பகுதி அல்ல. ஒரு ஊரே மொத்தமாக சமையல்காரர்கள் கொண்டதாக இருக்கும் இடத்தைப் பற்றிதான். கலையூர். கலைகளில் சிறந்த சமையற் கலை தெரிந்த மக்களை கொண்ட ஊர்....
இந்த ஊர பத்தி தெரிஞ்சிக்குற முன்னாடி, நீங்க இன்னும் நம்ம இணைய பக்கத்துக்கு சப்ஸ்கிரைப் பண்லனா மேல இருக்குற பெல் பட்டன கிளிக் பண்ணிக்கோங்க. இதனால இதுமாதிரி சுவாரசியமான, சிறப்பான சுற்றுலா பத்தின தகவல்கள உடனுக்குடன் அப்டேட்கள பெறலாம். வாங்க கலையூருக்கு ஒரு கலைப்பயணம் போகலாம்.
சமையற் கலை ஊர்
கலையூர் எனும் சமையல் கலையில் கைத் தேர்ந்த பல கலைஞர்களை கொண்ட ஊர் உண்மையில் மிகச் சிறப்பான இடம். இதுவும் பார்ப்பதற்கு தமிழகத்தின் மற்ற கிராமங்களைப் போல சமூக முன்னேற்றமும், தொழில் வளமும் நிறைந்த இடம் போலத்தான் காட்சியளிக்கிறது. ஆனால் இங்கு வீட்டுக்கு வீடு ஒரு நபராவது நிச்சயம் சமையல் தெரிந்த வித்தகராக இருப்பதுதான் ஆச்சர்யம்.
இந்த ஊரின் எல்லையைத் தாண்டுவதற்கு முன் குறைந்த பட்சம் நீங்கள் பத்து விதமான சமையல் வாசனைகளை பகுத்தறிய கற்றுக்கொண்டிருப்பீர்கள். வீட்டுக்கு வீடு மணம் மட்டுமல்ல, சுவையும் மாறுபடுகிறது. அதிலும் எது சிறந்த சுவை என்பதை கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு போட்டி போட்டு சமைக்கின்றனர் அவர்கள்.
எங்கே இருக்கிறது
ராமநாதபுரம் மாவட்டத்தின் மிகச்சிறப்பான பல இடங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இந்த கலையூர். ராமநாதபுரம் நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவிலும், பரமக் குடி நகரத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சாப்பாட்டு பிரியரா நீங்கள்
புஃடி என ஆங்கிலத்தில் அழகாக தெரிந்தாலும் சாப்பாட்டு ராமன் என தமிழில் கொச்சையாக அழைக்கும் சிலரால் அல்லது அப்படி தவறாக புரிந்துகொள்ளப்படும் பேச்சுக்கே இங்க இடமில்லை. நீங்கள் சாப்பாட்டு பிரியராக இருந்தால் கொஞ்சம் கூட கூச்சப்படாமல், நினைத்தை செய்து கேட்கலாம். என்ன ஒன்னு இந்த ஊர்ல திருமணம் பண்ணிக்கோங்க..அப்றம் ராஜ உபசரிப்புதான்.
எல்லாம் எதுக்குங்க ஒரு ஜான் வயித்துக்காகத்தானுங்களே!
எப்படி செல்வது
பரமக் குடியிலிருந்து ராமநாத புரம் செல்லும் சாலையில் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கலையூர். பத்து நிமிட பயண தூரம் தான். அருகில் வைகை நதி ஓடுகிறது. ஆனால் பாவம் நீர்தான் இல்லை.
சுற்றுலா வருகை
ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடம்தான் என்றாலும், உலக மக்கள் கவனத்தையும் இந்த ஊர் ஈர்த்திருக்கிறது. உலகின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனங்களுள் ஒன்றான ஹிஸ்டரி டிவி 18 இந்த கிராமத்தை பற்றிய தகவலை ஒளிபரப்பியது. அதிலிருந்து இந்த இடம் தற்போது உலகப் புகழ் பெற்ற விளங்குகிறது. அதுவும் புண்ணிய பூமியான ராமேஸ்வரம் அருகிலேயே அமைந்துள்ளதால் இந்த இடம் இன்னும் ஈர்ப்பை பெறுகிறது.
கலையுலக ஞானி கமல்ஹாசன் பிறந்த ஊரான பரமக் குடிக்கு அருகில் இருப்பதாலும், இது முக்கியத்துவம் பெறுகிறது.
உலகெங்கிலுமிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஊருக்கு வருகை தருகிறார்கள். இந்த ஆண்டு இது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் கலை வல்லுநர்கள்
சமையல் செய்யும் கலைஞர்களை பொதுவாக நம் ஊர் பக்கம் பெரிய அளவில் மதிப்பிடமாட்டார்கள். ஆனால் இப்போது காலம் மாறி வருகிறது. சமையல் கலையில் சிறந்த கலைஞர்களை பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வேலைக்கு எடுக்கிறார்கள். ஆனால் இந்த ஊர் கலைஞர்கள் பெரும்பாலும் அதற்கு செவி சாய்க்காமலே இருப்பதாக தெரிவிக்கின்றனர். கைவசம் தொழில் இருக்கும்போது நாம எதுக்கு வேற ஒருத்தன்கிட்ட கைக்கட்டி வேல செய்யணும்னு அவர்கள் கேட்பது நியாயமாகவே படுகிறது.
தமிழகத்து சமையலுடன் தென்னிந்திய, வட இந்திய உணவுப் பொருட்களையும் செய்யும் கலைகளில் திறமையுடன் இருக்கின்றனர் இவர்கள்.
எப்படி இவர்கள் தேர்ந்த கலைஞராகிறார்கள் தெரியுமா
நீங்கள் சமையல் கலையை கற்க தயாராகி விட்டீர்களென்றால், உங்களுடைய பத்து வருடத்தை இதற்காக அர்ப்பணிக்கவேண்டும். ஆம். இந்த ஊரின் கட்டுப்பாடு அப்படித்தான்.
இந்த ஊரில் பிறந்த நபர் ஒருவருக்கு சமையல் கலையில் வல்லவராக ஆசை என்றால், மூத்த சமையல் கலைஞருடன் பத்து வருடங்கள் பணி புரிய வேண்டும். அவர் இவர்களுக்கு காய்கறி நறுக்குதல் தொடங்கி சமையலின் நுணி முதல் அடி வரை அத்தனையும் சொல்லித் தருவார். அத்தனையும் கற்ற பிறகு அவர்களாகவே புதிய உணவுகள் செய்து அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவர் கலைஞராகத் தேர்வு செய்யப்படுவார். என்ன இந்த இடத்துக்கு இப்பவே போக ஆசை வந்துடிச்சா.... உடனே ராமேஸ்வரம் டிரிப் பிளான் போடுங்க.... ஜமாய்ங்க....