கேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலை ஐயப்பன் கோயில் இந்தியாவிலே வைத்து மிகப்பிரபலமான கோயில் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். அவ்வளவு பிரபலமான ஐயப்ப சுவாமிக்கு சபரிமலையை தாண்டி நாடு முழுக்க வெகு சில கோயில்களே உள்ளன. அவற்றில் ஒன்று தான் மும்பையில் இருக்கும் குட்டி சபரிமலை ஆகும்.
அழகிய நீரூற்று
மும்பையின் மேற்கு பகுதியில் கஞ்சூர்மார்க் என்னும் இடத்தில் குன்றுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் மத்தியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கிறது இந்த 'மினி சபரிமலை'. இக்கோயிலுக்கு அருகிலேயே இயற்கை நீரூற்று ஒன்றும் அமைந்திக்கிறது. சபரிக்கு எப்படி பாம்பையோ அப்படி இந்த கோயிலுக்கு இந்த நீரூற்று ஆகும்.
வரலாறு - அழிக்கப்பட்ட கோவில்
மினி சபரிமலை ஸ்ரீ ஐயப்பா கோயில் அமைந்திருக்கும் தற்போதுள்ள இடத்தில் முன்பு மிகப்பெரிய தேவி கோயில் ஒன்றும், சிறிய ஐயப்பன் கோயில் ஒன்றும் இருந்ததாக கேரளாவின் புகழ்பெற்ற ஜோதிடர் திரு கருவாட்ட கொச்சுகோவிந்தன் கூறுகிறார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அந்த இரண்டு கோயில்களும் சூறையாடப்பட்டு, இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றன.
சுற்றியுள்ள கோவில்கள்
இதன் பின்னர் மறுபடியும் இக்கோயில்களை புதுப்பிக்கும் பொருட்டு 1960 அறக்கட்டளை ஒன்று துவங்கப்பட்டு கோயிலை மறுகட்டமைப்பு செய்யும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. பின்னர் 1980ஆம் வருடம் கோயில் நிறைவுற்று குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் மத்தியில் இருக்க அதைச்சுற்றி இடது புறத்தில் தேவி புவனேஸ்வரி கோயிலும், வலது புறத்தில் விநாயகர் கோயிலும் எழுப்பப்பட்டது.
திருவிழாக்கள்
மினி சபரிமலை ஸ்ரீ ஐயப்பா கோயிலில் ஐயப்பனின் பிறந்த நாளான பங்குனி உத்திரம், கேரள புத்தாண்டான விஷு பண்டிகை, ஓணம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகைகள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
பூசை நேரங்கள்
இந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு பொதுவாக எல்லா செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் விநாயகருக்கு பூஜைகள் நடைபெறும்.
காலை 4.30 மணி - பள்ளியுணர்தல்
4.45 - நிர்மல்யா தரிசனம்
5 மணி - அபிஷேகம்
6 மணி - உஷா பூசை
10.30 மணி - உச்ச பூசை
11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பின் மீண்டும் 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
மாலை 7 மணி - தீபாராதனை
8.30 மணி - அத்தாழ பூசை
பூசை முடிந்து 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
கன்னிப் பெண்கள் திருமணம் கைக்கூட
தேவிக்காக பொங்காலா என்ற விழா நடத்தப்படும் வேளையில் ஏராளமான கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடக்கவேண்டி மங்கள ஷூக்த புஷ்பாஞ்சலி செய்து தேவியின் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
அய்யப்பனின் அருள்தான் இளம் பெண்களுக்கு எளிதில் திருமணம் நடக்க துணை புரிகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு சிலர் திருமணமும் செய்து கொள்கின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பும் சபரி மலை
மினி சபரிமலையில் கோயிலில் மேற்குறிப்பிட்ட திருவிழாக்களை தவிர நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் மண்டல மகர விளக்கு என்ற திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அச்சமயங்களில் சபரிமலைக்கு யாத்ரீகம் செல்லும் பக்தர்களுக்கு முத்ராதானம் வழங்கப்படும். இந்த தருணங்களில் சபரிமலை கோயிலை போலவே இங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
அப்போது இசை நிகழ்ச்சிகள், வெடிக்கட்டு எனப்படும் வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள் என்று மினி சபரிமலை கோயிலே அமர்க்களப்படும்.
எப்படி அடைவது?
மினி சபரிமலை கோயிலுக்கு மும்பையின் பல பகுதிகளிலிருந்து எண்ணற்ற மாநகராட்சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மினி சபரிமலை கோயிலை வாடகை வண்டிகள் மூலமாகவும் அடையலாம்.