தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஹூப்ளி நகரமானது ‘தார்வாட் இரட்டை நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது கர்நாடகா மாநிலத்திலுள்ள தார்வாட் மாவட்டத்தின் தலைநகரமுமாகும். வட கர்நாடகாவின் வணிக மையமாக விளங்கும் இந்த நகரம் தொழிற்துறை, வாகன உற்பத்தி மற்றும் கல்வித்துறை போன்ற துறைகளில் பெங்களூருக்கு அடுத்தபடியான ஒரு கேந்திரமாக கர்நாடகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஹுப்ளி என்ற பெயரானது மலர்களைச்சொரியும் கொடி என்ற பொருளைத் தரும் ‘ஹுப்பள்ளி’ எனும் கன்னடச் சொல்லிலிருந்து பிறந்துள்ளது. வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இந்த ஹுப்ளி நகரத்தின் வரலாறு சாளுக்கியர் காலத்திலிருந்து தொடங்குகின்றது.
மேலும் இது முற்காலத்தில் ‘ராயர ஹள்ளி’ மற்றும் ‘புர்பள்ளி’ என்ற பெயர்களாலும் அறியப்பட்டுள்ளது. விஜயநகர ராயர் வம்சத்தினால் ஆளப்பட்டபோது இந்த ராயரஹள்ளி நகரமானது பருத்தி, சால்ட்பீட்டர்(ஒரு வகை கனிம வேதிப்பொருள்), இரும்பு போன்ற முக்கிய பொருட்களுக்கான ஒரு முக்கிய வணிகஸ்தலமாக திகழ்ந்திருக்கிறது.
ஹூப்ளியின் வரலாற்றை நோக்கும்போது
ஹூப்ளி நகரம் வரலாற்றுக்காலத்தில் மராத்தாக்கள், முகலாயர்கள் மற்றும் கடைசியாக ஆங்கிலேயர்களுக்கும் முக்கிய இலக்காக இருந்துள்ளது. 1675ம் ஆண்டு இங்கு ஆங்கிலேயர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை சிவாஜி மன்னரால் சூறையாடப்பட்டது.
பின்னர் இது சிறிது காலம் முகலாயருக்குக் கட்டுப்பட்ட சவானூர் நவாப் ஆளுகைக்குக்கீழ் இருந்துள்ளது. அக்காலத்தில் பாசப்ப செட்டி எனும் வணிகரால் ‘துர்க்காதபேல்’ எனும் இடத்தில் ஒரு புதிய நகரமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
1755-56ம் ஆண்டுகளில் மராத்தியர்களால் கைப்பற்றப்பட்ட இது இடையில் ஹைதர் அலியின் ஆளுகைக்குள் வந்து மீண்டும் 1790ல் ஆண்டில் மராத்தியர்கள் வசம் சென்றது.
பழைய ஹூப்ளி நகரம் 1817ம் ஆண்டில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதையடுத்து புதிய ஹுப்ளி நகரம் 1820 ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 1880ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஒரு ரயில் தொழிற்கூடத்தை நிறுவியபின் இந்நகரம் ஒரு பிரசித்தமான தொழில்நகரமாக உருமாறியது.
இன்று ஹூப்ளி நகரம் பருத்திப்பஞ்சாலை தொழில் மற்றும் இதர நெசவு உற்பத்திகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
பருத்தி நெசவுப்பொருட்கள் மற்றும் வேர்கடலை வியாபாரத்தில் ஹூப்ளி ஒரு முக்கிய கேந்திரமாக விளங்குகிறது. அதன் சுற்றுப்பிரதேசத்தில் இவ்விரண்டும் முக்கிய விளைபொருட்களாக இருப்பதே இதற்கு காரணம்.
இந்திய ரயில்வே துறையின் தென்மேற்கு மண்டலத்துக்கும், ஹுப்ளி பிரிவிற்கும் தலைமையகமாக ஹுப்ளி நகரம் இயங்குவதும் குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஹூப்ளியில் என்னென்ன உள்ளன
சமீப வருடங்களாக கர்நாடக மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா மையமாக ஹுப்ளி நகரம் மாறி வருகின்றது. ஹூப்ளியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பவானிஷங்கர் கோயில், அஸார், சித்தரூத மடம், உன்கால் ஏரி, நிருபதுங்க பெட்டா மற்றும் கண்ணாடி மாளிகை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மேலும் ஹுப்ளியின் அருகிலுள்ள அதன் இரட்டை நகரமான தார்வாட், நவில்தீர்த், சத்தோடா, சொகல்லா மற்றும் மத்தோடா நீர்வீழ்ச்சிகள், இஸ்க்கான் கோயில், ஸ்கைக்ஸ் பாயிண்ட் மற்றும் உலாவியா போன்ற முக்கிய இடங்களும் குறிப்பிடத்தக்கவை.
இவை தவிர ஹூப்ளியிலிருந்து பயணம் மேற்கொள்ள வசதியாக பீஜாப்பூர், பீடார், படாமி, ஏஹோல், படாட்கல் மற்றும் ஹம்பி போன்ற இதர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாஸ்தலங்களும் அருகில் உள்ளன.
மலநாட் பிரதேசத்துக்கும் தக்காண பீடபூமிக்கும் இடையில் அமைந்துள்ள ஹூப்ளி நகரம் வறண்ட, ஈரப்பதமுள்ள, உலர்ந்த பருவநிலையை கொண்டிருக்கின்றது. அக்டோபரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலம் இங்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்.
கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரங்களுடனும் அண்டை மாநிலங்களுடனும் நல்ல சாலை வசதிகளாலும், ரயில் சேவைகளாலும் இணைக்கப்பட்டுள்ளதால் இங்கு பயணம் மேற்கொள்வது மிகவும் எளிதாகும்.
ஹுப்ளியில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையம் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் மும்பை போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளைக் கொண்டுள்ளது.