இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக இந்த இட்டாநகர் அமைந்திருக்கிறது. பபும்பரே மாவட்ட நிர்வாக எல்லைக்குள் இந்த நகரம் உள்ளது. 1970ம் ஆண்டு ஏப்ரல் 20ம் நாள் முதல் இது அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரமாக இருந்து வருகிறது. வடகிழக்கிந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாக இது விளங்குகிறது.
இந்தியாவில் பலபகுதிகளைச்சேர்ந்த மக்கள் இங்கு வசிப்பதால் இந்த நகரம் ‘மினி இந்தியா’ என்றே அழைக்கப்படுகிறது. ஜிதாரி வம்சத்தை சேர்ந்த ராமச்சந்திரா எனும் மன்னர் தலைநகரமாக கொண்டு ஆண்ட மாயாபூர் என்ற புராதன நகரமாக இந்த இட்டாநகர் ஒரு காலத்தில் அறியப்பட்டிருக்கிறது. 14ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை அம்மன்னர் இப்பகுதியை ஆண்டுள்ளார்.
இட்டாநகரில் பார்க்க வேண்டிய இடங்கள்
இட்டாநகர் தொல்லியல் ஸ்தலங்கள் அதிகம் காணப்படும் பிரதேசமாக பிரசித்தி பெற்றுள்ளது. இவை இந்நகரத்தின் வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார செழிப்பு போன்ற சிறப்பம்சங்களுக்கு மேலும் வலிமையூட்டுவதாக அமைந்துள்ளன.
இங்குள்ள இட்டா கோட்டை இந்த நகரத்தின் அடையாளமாக அமைந்திருப்பதோடு ஈடாநகருக்கான பெயர்க்காரணமாகவும் அறியப்படுகிறது.
பொம்டிலா, பரஷுராம் குண்ட், மலினித்தான் மற்றும் பீஷ்மாக் நகர் போன்றவை இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக இட்டாநகரில் அமைந்துள்ளன. அதிகாரபூர்வ கவர்னர் மாளிகையான ராஜ்பவன் வளாகமும் சுற்றுலாப்பயணிகளை கவரும் மற்றொரு அம்சமாகும்.
கங்கா ஏரி, ஜவஹர்லால் மியூசியம் மற்றும் கிராஃப்ட் சென்டர் அன்ட் எம்போரியம் போன்றவையும் இட்டாநகரில் தவறவிடக்கூடாத இடங்களாகும். இந்த மியூசியத்தில் அருணாசலப்பிரதேச பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய பல அரும்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
பிரசித்தமான கங்கா ஏரியை சுற்றிலும் பசுமையான இயற்கைச்சூழல் காணப்படுவதோடு பாறை அமைப்புகளும் பிரம்மாண்டமான எழிற்தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.
கிராஃப்ட் சென்டர் காட்சிக்கூடத்தில் சுவர் ஓவியங்கள், மூங்கில் மற்றும் பிரம்பு கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உடைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஜுவாலஜிகல் பார்க், இந்திரா காந்தி பார்க் மற்றும் போலோ பார்க் ஆகியவை பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பொழுதுபோக்குவதற்கு வசதியாக அமைந்துள்ளன. புத்த விஹார் என்பது புதிதாக கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோயிலாகும்.
இது தலாய் லாமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மஞ்சள் நிறக்கூரையை கொண்ட இந்த திபெத்திய பாணி கோயில் இட்டாநகரின் அழகை கூட்டும் வகையில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாத்தலமாகவும் ஈடாநகர் புகழ் பெற்றுள்ளது.
அருணாசல பிரதேசத்தின் இதர சுற்றுலாத்தலங்கள் மற்றும் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கு தேவையான தகவல்களையும் வசதிகளையும் இந்நகரத்தில் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களும் கலாச்சாரமும்!
இந்நகரத்தின் பெரும்பாலான மக்கள் பல்வேறு இனப்பிரிவுகளை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களில் நியிஷி இனத்தார் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
அனைவருமே புத்த மதத்தை பின்பற்றுபவர்களாகவே உள்ளனர். பெரும்பாலும் இட்டாநகர் மக்கள் உற்சாக மனோபாவம் கொண்டவர்களாகவும் வருடம்முழுக்க விழாக்கொண்டாட்டங்களில் ஆர்வம் மிக்கவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் நியோகும் திருவிழா பிரசித்தமானதாக அறியப்படுகிறது. இது நியிஷி இனத்தாரால் கொண்டாடப்படுகிறது. மொன்பா இனத்தார் லோசார் எனும் திருவிழாவைக்கொண்டாடுகின்றனர்.
இது புதுவருடப்பிறப்பு பண்டிகையாகும். அந்நாளின் போது விசேஷப்பிரார்த்தனைகள் மற்றும் கொடியேற்றுவது வேத நூல் படிப்பது போன்ற சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.
இந்த கொண்டாட்டங்கள் யாவும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கின்றன. ரெஹ் எனும் மற்றொரு முக்கியமான திருவிழா இடு மிஷிமி இனத்தாரால் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது பூசாரிகளின் நடன நிகழ்ச்சி முக்கிய நிகழ்வாக இடம்பெறுகிறது.
இவை தவிர திகாரு மிஷிமி இனத்தார் டம்லாடு எனும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். கான், சங்கென் மற்றும் மொபின் போன்ற இதர திருவிழாக்களும் இட்டாநகரில் கொண்டாடப்படுகின்றன. புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களும் இட்டாநகரில் அமைந்துள்ளன.
விஜயம் செய்ய ஏற்ற பருவம்
வருடத்தின் எந்த நாளிலும் இட்டாநகருக்கு விஜயம் செய்யலாம். ரசித்து மகிழ்வதற்கேற்ற மிதமான இனிமையான சீதோஷ்ணநிலை மற்றும் சூழலுடன் இந்நகரம் காட்சியளிக்கிறது.
எப்படி செல்வது இட்டாநகருக்கு?
மாநில தலைநகராக விளங்குவதால் ஈடாநகருக்கு போக்குவரத்து வசதிகள் குறையின்றி கிடைக்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஹர்முடி ரயில் நிலையம் ஈடாநகரிற்கு அருகில் அமைந்துள்ளது. குவஹாட்டி நகரத்திலிருந்து பேருந்துகள் மூலமாகவும் இந்நகரத்திற்கு வரலாம்.