உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜௌன்பூரின் வரலாறு 1369ம் ஆண்டிலிருந்தே துவங்குகிறது. ஃபெரோஸ் ஷா துக்ளக் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரம் அக்காலத்தில் ஷீராஸ் ஈ ஹிந்த் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இன்று ஜௌன்பூர் நகரம் பொருளாதார ரீதியாக முன்னேறிய மற்ற இந்திய நகரங்கள் போன்று எவ்வளவோ வளர வேண்டியிருக்கிறது என்றபோதிலும், வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் இங்கு ஏராளம் இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.
ஜௌன்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
ஜௌன்பூர் நகரம் பல முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆன்மீகத்தலங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த ஜௌன்பூர் நகரத்துக்கு ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர்.
முகல் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் ஷாஹி பிரிட்ஜ் இவற்றில் குறிப்பிடத்தக்கது. அக்பரி பிரிட்ஜ் அல்லது முனீம் கான் பிரிட்ஜ் என்றும் அழைக்கப்படும் இது ஜௌன்பூர் நகரத்தில் முகலாயர் கால கட்டிடக்கலைக்கு சான்றாக வீற்றிருக்கிறது.
ஷாஹி குய்லா என்று அழைக்கப்படும் ராஜ கோட்டையானது கோமதி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள ஷாஹி பிரிட்ஜ்’க்கு அருகிலேயே உள்ளது. முகாலயப்படைகளால் சூறையாடப்பட்ட கோயில்களில் கிடைத்த பொருட்களை கொண்டு இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.
அடாலா எனும் கோயில் அழிக்கப்பட்டு அதே இடத்தில் அடாலா மசூதி என்றொரு மசூதியும் இந்நகரத்தில் காணப்படுகிறது. இங்குள்ள ஜமா மஸ்ஜித் 15ம் நூற்றாண்டில் ஃபிரோஸ் ஷா துக்ளக் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. லால் தர்வாசா மஸ்ஜித் எனும் மற்றொரு மசுதியும் இங்கு அமைந்துள்ளது.
அழிக்கப்பட்ட ஹிந்துக்கோயில்கள் மற்றும் அரண்மனைகள் போன்றவற்றில் கிடைத்த பொருட்களிலிருந்து இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
போக்குவரத்து வசதிகள்
விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழி போக்குவரத்து அம்சங்கள் மூலமும் எளிதாக இந்த ஜௌன்பூர் நகரத்தை அடையலாம். டெல்லியிலிருந்து இந்நகருக்கு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
விஜயம் செய்ய ஏற்ற காலம்
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான பருவம் இங்கு விஜயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.