ஹரியானா மாநிலத்தின் 21 மாவட்டங்களுள் ஜஜ்ஜாரும் ஒன்றாகும். தன் தலைமையகத்தை ஜஜ்ஜார் நகரத்தில் கொண்டுள்ள இம்மாவட்டம், 1997 ஆம் வருடம் ஜுலை 15 ஆம் தேதியன்று, ரோடக் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்நகரம் சாஜூ என்பவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுவதினால், இது முதலில் சாஜூநகர் என்று பெயரிடப்பட்டது.
பிற்காலத்தில் இதன் பெயர் ஜஜ்ஜார் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் ஜார்நகர் என்ற இயற்கை நீரூற்றின் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று இரண்டாவது கதை ஒன்றும் உலவுகிறது.
இப்பகுதியின் மேற்பரப்பு வடிமானம் நகரெங்கிலும் பல மைல் தூரம் ஓடி ஒரு நீர்த்தொட்டியில் சென்று வடிவது போல் இருப்பதால், தண்ணீர் பாத்திரம் என்ற அர்த்தம் தரும் வகையில் ஜஜ்ஜார் என்று பெயரிடப்பட்டது என்று மூன்றாவதாக ஒரு கதையும் கூறப்படுகிறது.
ஜஜ்ஜார் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
இயற்கை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய பல சங்கதிகளை உள்ளடக்கியுள்ளது ஜஜ்ஜார். தில்லியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிந்தாவாஸ் பறவைகள் சரணாலயம், இம்மாவட்டத்தின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.
சுமார் 1074 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இது, 35,000 க்கும் மேற்பட்ட புலம் பெயர் பறவையினங்களை ஈர்க்கக்கூடியதாக விளங்குகிறது. இவற்றுள் சுமார் 250 வகைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு புலம் பெயர்ந்து வருகின்றன.
இந்த சரணாலயம் ஒரு ஏரியையும் கொண்டுள்ளது. இவ்வேரியில் தண்ணீரைத் தேக்கும் பொருட்டு, இதனை சுற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட சுமார் 12 கி.மீ. அணை காணப்படுகிறது.
இந்தியாவின் அனைத்து நகரங்களிலும், சிற்றூர்களிலும் கோயில்கள் பெருமைமிகு பொக்கிஷங்களாகப் போற்றப்படுகின்றன. ஜஜ்ஜாரும் இதற்கு விதிவிலக்கல்ல. பேரி நகரில் உள்ள பேரி கோயில் இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும்.
இக்கோயிலில் பாண்டவர்களின் குலதெய்வமான பீமேஷ்வரி தேவி, குக்தேவி ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன. கௌரவர்களின் ராஜமாதாவாகிய காந்தாரி இங்குள்ள பேரி மரத்தின் வழியே கடந்து சென்றதாகவும், அதன் பின் இக்கோயிலை கட்டியதாகவும் நம்பப்படுகிறது.
முக்கியமாக, தங்களின் திருமண பந்தத்தை புதிப்பிக்க இங்கு வருகை தரும் தம்பதிகள் இக்கோயிலை மிகவும் புனிதமானதாகப் போற்றி வழிபடுகின்றனர்.
அமைதியை நாடி வருவோர் ஜஜ்ஜாரின் புவா வாலா தலாப்பில் மன நிம்மதியைப் பெறலாம். புராணங்களின் படி, இந்த தலாப் அல்லது குளம், சோகத்தில் முடிந்த ஒரு காதல் ஜோடியின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. அமைதியான இந்த இடம் ஜன சந்தடியிலிருந்து விலகி ஓய்வெடுக்க மிகவும் சிறந்த ஸ்தலமாகும்.
குருகுல் தொல்பொருளியல் அருங்காட்சியகம், குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். இந்த அருங்காட்சியகம் 1959 ஆம் வருடம், அதன் தற்போதைய இயக்குனராக விளங்கும் சுவாமி ஓமானந்த் சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு, ஹரியானாவின் மிகப்பெரும் அருங்காட்சியகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், அலஹாபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி போன்ற நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் நாணயங்கள் அணிவகுக்கின்றன.
ஜஜ்ஜார் செல்ல ஏற்ற காலகட்டம்
மிகவும் ரம்மியமான பருவநிலை நிலவக்கூடியதான அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஜஜ்ஜார் செல்ல ஏற்ற காலகட்டம் ஆகும்.
ஜஜ்ஜார் செல்வது எப்படி?
ஜஜ்ஜார், இந்தியாவின் இதர நகரங்களுடன் இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.