உத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும் உண்மை நண்பரான கர்ணனுக்கு, அவர் அர்ஜுனனுக்கு எதிராக காட்டிய வீரத்தின் பொருட்டாக பரிசளித்த நிலப்பகுதி தான் கான்பூர்! முதலில் கர்னாபூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயர், காலப்போக்கில் கான்பூர் என்று மாறியது. மற்றொரு புராணக்கதையில், இந்த ஊர் கிருஷ்ண பகவானின் பெயரையொட்டி கன்ஹையாபூர் என்று அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் இன்றைய பெயரை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
புராண காலத் தொடர்புகள் மட்டுமல்லாமல், அவாத் நவாப்பிடமிருந்து பிரிட்டிஷாருக்கு மாற்றப்பட்ட காலனி ஆதிக்க காலத்திலும் கான்பூர் மையமான இடத்தைப் பெற்றிருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது கான்பூர் படுகொலைகள் என்ற வரலாற்று சம்பவம் இங்கு தான் நடந்தது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) உட்பட பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள இன்றைய கான்பூர், இந்தியாவின் பெருமைமிகு கல்வி மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சி.எஸ்.ஜெ.எம் பல்கலைக்கழகம், ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப நிலையம் (HBTI), ஜி.எஸ்.வி.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் டாக்டர் அம்பேத்கார் தொழில்நுட்ப நிறுவனம் (AITH) உள்ளிட்ட வேறு பல குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களும் கான்பூரில் உள்ளன.
தொழில் வளர்ச்சியைப் பொறுத்த வரையில் கான்பூர் புகழ் பெற்ற, முதல் தர தோல் மற்றும் பருத்தி தொழில்சாலைகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் பேசப்படும் தொழில் நகரமாகும்.
கான்பூரை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள்
முதல் பார்வையில், பிற இந்திய நகரங்களைப் போலவே—மிகவும் ஒழுங்கற்றதாகவும், வண்ணமயமாகவும், துடிப்பான நகரமாகவும் மற்றும் எப்பொழுதும் பரபரப்பான நகரமாகவும் கான்பூர் தோற்றமளிக்கும்.
எனினும், அதன் கடினமான வெளிஉருவத்திற்குள், நீங்கள் காண வேண்டிய பல ஆச்சரியங்கள் காத்துள்ளன! கான்பூர் சுற்றுலாவில் நீங்கள் காண வேண்டிய கோவில்களாக ஸ்ரீ இராதாகிருஷ்ணா கோவில், பித்தார்கோன் கோவில் மற்றும் துவாரகாதீஷ் கோவில் ஆகியவை உள்ளன.
இந்து கோவில்கள் மட்டுமல்லாமல், பிற மதத்தினரின் நம்பிக்கையையும் வளர்த்து வரும் வகையில் மசூதிகள் மற்றும் கோவில்களும் கான்பூரில் உள்ளன. அவற்றில் புகழ் பெற்ற ஜாமா மசூதி, கான்பூர் நினைவு தேவாலயம் மற்றும் ஜெயின் கண்ணாடி கோவில் ஆகியவற்றை முதன்மையானவையாக குறிப்பிடலாம்.
இதில் ஜெயின் கண்ணாடி கோவிலை அதன் பழமையின் பிரதிபலிப்பிற்காகவும், மற்றும் கண்ணாடி மற்றும் எனாமல் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதற்காகவும் குறிப்பிட்டு சொல்லலாம்.
கான்பூரின் காட்சிகள் உங்களை திணறடிப்பதாக தோன்றினால், கீரீன் பார்க், நானா ராவ் பார்க், மோடி ஜீல் மற்றும் பூல் பாக் ஆகிய பூங்காக்களில் தனிமையும் நீங்கள் தேட முடியும்.
பூல் பாக் என்ற வார்த்தைக்கு 'மலர்களின் தோட்டம்' என்று அர்த்தமாகும்; எனினும், 1857-ம் ஆண்டு நடந்த, முதல் இந்திய சுதந்திரப் போரின் போது நடத்தப்பட்ட படுகொலைகளின் சாட்சியாகவே இந்த பூங்கா இன்றளவும் வரலாற்றில் நிலை கொண்டுள்ளது.
இந்த பூங்காக்கள் அனைத்துமே வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மிகுந்த மக்கள் இன்ப சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் வந்து செல்லும் இடங்களாக உள்ளன.
மேலும், கான்பூர் மாநிலத்திலேயே மிகவும் சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகவும், கான்பூர் நகரத்திலேயே மிகப்பெரியதாகவும் உள்ள அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்காவும் கான்பூரில் உள்ளது.
இந்த உயிரியல் பூங்கா உண்மையில் ஒரு காட்டுப் பகுதியாகவே இருப்பதால், வன விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்படாமல், சாதராணமான அவற்றின் இயற்கை வாழிடங்களைப் போலவே சுற்றித் திரிவதையும் காண முடியும்.
கான்பூரின் உணவு வகைகள்!
இந்திய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது எந்த நகரமாக இருந்தாலும், நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் உங்கள் நாவின் சுவை நரம்புகளை விழித்தெழச் செய்யும் வல்லமை பெற்ற உணவு தான்!
அந்த வகையில், கான்பூரின் உணவு வகைகள் அந்நகரத்தின் சுற்றுலாவில் மிகச்சிறப்பான பங்கை பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது. துரித உணவகங்களின் உணவுகள், பட்ஜெட் உணவு விடுதிகள் மற்றும் உயர்தர உணவு விடுதிகள் என அனைத்து வகையினருக்கும் ஏற்ற உணவு விடுதிகள் கான்பூரில் நிறைய உண்டு.
நீங்கள் கான்பூரில் இருக்கும் போது பாதா சௌராஹாவில் உள்ள மத்தா பாண்டேவின் தாக்கு கெ லட்டு மற்றும் சிவில் லைன்ஸ்-ல் உள்ள பாட்னாம் குல்ஃபியையும் சுவைத்துப் பார்த்திட மறந்து விடாதீர்கள்!
கான்பூரை அடையும் வழிகள்
கான்பூர் நகரத்தை சாலை, இரயில் மற்றும் விமானங்களில் எளிதில் அடைந்திட முடியும்.
கான்பூர் சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற காலம்
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள கான்பூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவங்களாகும்.