இந்தியாவின் முதல் முகலாய பேரரசரான பாபர் பல மசூதிகளை உருவாக்கி சென்றுள்ளார். இவற்றில் புதிதாக கட்டியவை மற்றும் ஹிந்து கோயில்களை இடித்துக்கட்டியவை என்ற இருவகைகளும் அடக்கம்.
எல்லா இந்திய மசூதிகளை போலவே இந்த கர்ணால் நகர பாபர் மசூதியும் இந்திய மற்றும் முகலாய பாணி கட்டிடக்கலை அம்சங்களின் கலவையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மசூதியின் கட்டுமானம் 1527ம் ஆண்டு துவங்கப்பட்டு ஒரு வருடத்திலேயே 1528ம் ஆண்டு முடிக்கப்பட்டுவிட்டது. இப்ராஹிம் லோடியை வென்று இந்திய சாம்ராஜ்யத்தை நிறுவிய வெற்றியை கொண்டாடும் விதமாக இது கட்டப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்டமான இந்த மசூதி ஒரு பெரிய வளாகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு தோட்டப்பூங்காவையும் இது உள்ளடக்கியிருந்தது. ஆனால் காலப்போக்கில் அது அழிந்து விட்டிருக்கிறது.
இந்த மசூதியின் பிரதான தொழுகைக்கூடம் 53.75 மீ நீளமும் 16.5 மீ அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. இதன் கூரைப்பகுதி உயரமான குமிழ் வடிவை கொண்டிருக்கிறது.
இது தவிர மாடங்களோடு கூடிய செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ள எண்முக கோபுரங்களும் இந்த வளாகத்தில் இருந்துள்ளன. ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளது.
மசூதி அமைப்பில் மொத்தம் மூன்று குமிழ் கோபுரங்கள் உள்ளன. பிரதான கோபுரத்தின் இருபுறமும் இரு சிறிய கோபுரங்கள் அமைந்திருக்கின்றன. மசூதியை சுற்றிலும் இரண்டு பெரிய சுவர்கள் அடுத்தடுத்து கட்டப்பட்டிருக்கின்றன.
குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஆழமான கிணறு ஒன்றும் இந்த மசூதி வளாகத்தில் இருந்திருக்கிறது. மசூதியில் காணப்படும் ஒரு கல்வெட்டில் மிர் பக்கி என்ற கட்டிடக்கலைஞரால் இது கட்டப்பட்டது எனும் தகவல் பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. கர்ணால் நகரத்தின் மையப்பகுதியிலேயே இந்த மசூதி அமைந்துள்ளது.