அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு உலகிலேயே அதிக அடர்த்தியில் புலிகளை உடைய இடமாகவும் இந்த தேசிய பூங்கா உள்ளது.
இது மட்டுமல்லாமல் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய பூங்கா சுமார் 429.93 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மற்றும் நோவாகோன் மாவட்டங்களில் இந்த பூங்கா அமைந்துள்ளது.
ஓற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அல்லது புலிகளைப் பார்ப்பதுடன் காஸிரங்கா சுற்றுலாப் பயணம் முடிவடைந்து விடாமல், மிகப்பெரிய உடலமைப்பை உடைய தாவர உண்ணிகளான ஆசிய யானைகள், ஆசிய நீர் எருமைகள் மற்றும் சேற்று மான்கள் ஆகியவற்றையும் இங்கே பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளில் காண முடியும்.
இந்த சரணாலயத்தில் பறவைகளை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளின் காரணமாக பேர்டு லைஃப் இண்டர்நேஷனல் அமைப்பு இந்த தேசிய பூங்காவை முக்கியமான பறவைகள் பாதுகாப்பு மையங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது.
தேசிய பூங்காவிற்குள் யானை பாகன்களின் வழிகாட்டுதல்களுடன் செய்யப்படும் யானை சவாரிகள் - காஸிரங்கா சுற்றுலாவின் முக்கிய அம்சம்
நன்கு பயிற்சி பெற்ற பாகன்களின் (மகுட்) துணையுடன் காடுகளுக்குள் சுற்றித் திரிவது காஸிரங்கா சரணாலயத்தின் மிகவும் கவர்ச்சியான அம்சமாகும். பிரம்மாண்டமான விலங்குகளை அருகில் நின்று ரசிப்பதற்கான ஒரு பயணமாகவே இது உள்ளது.
இவை மட்டுமல்லாமல் ஜுப்கள் மற்றும் 4WD வாகனங்களிலும் இந்த தேசிய பூங்காவை சுற்றிப் பார்க்க முடியும். இந்த வாகனங்களை பூங்காவின் நிர்வாக அலுவலகத்தில் முன்னதாகவே பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
காஸிரங்கா தேசிய பூங்காவை சுற்றியுள்ள ஆர்வமூட்டக்கூடிய பார்வையிடங்கள்!
காஸிரங்கா தேசிய பூங்கா சுற்றுலாப் பயணம் என்பது அதன் உள்பகுதியுடன் நின்று விடாமல் அதனைச் சுற்றியுள்ள வேறு சில இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றது. அருகிலுள்ள சோனிட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபூர் ஒரு வரலாற்றுச் சிறப்பு பெற்ற நகரமாகும்.
இங்கிருக்கும் காகோக்சாங் நீர்வீழ்ச்சியும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகார் பகுதியில் உள்ள தியோபர்பத் சிதைவுகளையும் சுற்றுலாப் பயணிகள் இநத சுற்றுலாப் பயணத்தில் காண முடியும்.
காஸிரங்காவை அடையும் வழிகள்
காஸிரங்கா தேசிய பூங்காவாக இருப்பதால் அதனை சாலை வழியாக அடைவதே முதன்மையான போக்குவரத்து வழிமுறையாக இருக்கும். கௌகாத்தியிலிருந்து 225 கிமீ தொலைவில் இருப்பதால், ஒரு வாடகை காரில் இந்த பூங்காவிற்கு செல்வது சிறந்த வழிமுறையாக இருக்கும்.
இதற்கு அருகிலுள்ள பிற நகரங்களான தேஸ்பூரும், கோலாகாட்டும் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
காஸிரங்காவின் பருவநிலை
காஸிரங்கா அதிக அளவு மழைப்பொழிவு பெறும் இடமாகும். இதன் காரணமாகவே வருடத்தின் சில மாதங்கள் மூடியே இருக்கும். இந்த தேசிய பூங்காவில் கோடை, மழை மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று பருவநிலைகள் நிலவுகிறது.
கோடைக்காலத்தில் வறண்டும், அனல் காற்றுடனும் இருக்கும் இந்த சரணாலயம், மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி விடும். எனவே, குளிர்காலம் இந்த தேசிய பூங்காவிற்கு சுற்றுலா வர சிறந்த பருவமாகும்.