மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் மண்டலத்தில் வீற்றிருக்கும் கஜுராஹோ வரலாற்றுத்தலம் விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமியப்பகுதியாகும். உலக பாரம்பரிய ஸ்தலங்களின் வரைபடத்தில் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை இந்த கஜுராஹோ வரலாற்றுத்தலம் பெற்றிருக்கிறது.
கலையம்சம் நிரம்பிய நுணுக்கமான சிருங்கார சிற்பங்கள் இந்த ஸ்தலத்தில் உள்ள கோயில்களில் காணப்படுகின்றன. மனிதக் கைகளால் வடிக்கப்பட்டவைதானா என்று பிரமிக்க வைக்கும் படைப்பாக்கத்தை இங்குள்ள பாறைச்சிற்பங்களில் தரிசிக்கலாம்.
கஜுராஹோ கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் உலகில் வேறெங்கும் காணமுடியாத தனித்துவத்துடன் மனித நாகரிகத்தின் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணங்களாக, காலச்சுவடுகளாக காட்சியளிக்கின்றன.
கஜுராஹோ சுற்றுலா: கலைப்பாரம்பரியமும் மானுட உளவியலும்!
கஜூராஹோ கோயில்கள் மத்திய இந்தியாவை ஆண்ட சந்தேள ராஜ வம்சத்தினரால் 950 – 1050 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கின்றன. கஜூராஹோ ஸ்தலத்தில் மொத்தம் 85 கோயில்கள் உள்ளன.
இவற்றில் 22 மட்டுமே தற்போது கால ஓட்டத்தில் முழுமையாக மிஞ்சியிருக்கின்றன. வார்த்தைகளுக்குள் அடங்காத சிற்பக்கலை நுணுக்கங்கள் நிரம்பி வழியும் இந்த அற்புத வரலாற்று ஸ்தலம் உலகாளவிய கவனத்தை பெற்றுள்ளது.
1986-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பானது இந்த கஜுராஹோ கோயில் ஸ்தலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்து கௌரவித்திருக்கிறது.
கஜூராஹோ கோயில்களில் காணப்படும் சிற்பக்கலை அம்சங்களும் சித்தரிப்புகளும் மானுட முன்னோர்களின் வாழ்வியல் உன்னதங்கள் மற்றும் நாகரிகத்தை குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.
இங்குள்ள பெரும்பாலான சிற்பங்கள் பாலுணர்வு சார் அம்சங்களை பிரதிபலிப்பதாக ஒரு புரிதல் நிலவினாலும் உண்மையில் அவ்வகை சிற்பங்கள் முக்கியமான ஹிந்துக்கடவுளர்களுக்காக எழுப்பப்பட்ட கோயில்களின் ஒரு அலங்கார படைப்பு அம்சங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள கோயில்களின் உருவாக்கமும் வடிவமைப்பும் அதி உன்னத பொறியியல் நுணுக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளன.
கஜுராஹோ என்றாலே காமக்கலை சிற்பங்கள் எனும் தவறான கருத்து அல்லது புரிதல் சில போஸ்ட்கார்ட் புகைப்படங்கள் மற்றும் தனித்து எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மூலமாக பரவி வந்திருக்கிறது.
உண்மையில் கஜுராஹா வரலாற்று ஸ்தலத்தை மானுட நாகரிகத்தின் ஒரு உன்னதமான ‘ஆவண ஸ்தலம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.
மத்திய இந்தியாவில் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் செழித்தோங்கிய இந்து மன்னர் மரபின் வீரத்தையும் அறத்தையும், அக்காலத்தே வாழ்ந்த ஒப்பற்ற கலைஞர்களின் அறிவையும் கலாரசனையையும் கைத்திறனையும் புலப்படுத்துவதாக மட்டுமல்லாமல் மானுடத்தில் காமம் ஒரு அங்கமே எனும் அறிவியல் பூர்வமான கருத்தையும் இங்குள்ள சிற்பங்கள் எடுத்துரைக்கின்றன.
கற்சிற்பங்களில் காணப்படும் காதற்கலை சித்தரிப்புகளில் இயற்கையின் ஆதி அம்சமான நிர்வாணம் மட்டுமன்றி புராதன இந்திய நாகரிகத்தின் உளவியல் பார்வையும் பொதிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
இந்தியாவில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டுள்ள இந்த கஜூராஹோ ஸ்தலத்திற்கு கலாரசனை கொண்ட இந்தியர் யாவரும் வாழ்நாளில் ஒரு முறை விஜயம் செய்வது அவசியம்.
இந்திய மண்ணில் புராதன நாகரிக செழுமை குறித்த புரிதலுக்கு ஒரு முறை கஜுராஹோவுக்கு விஜயம் செய்தே ஆக வேண்டும். கல்லறைகளுக்கு கிடைத்திட்ட அங்கீகாரம் அந்நாளைய மன்னர்கள் அறத்தின் அடையாளமாய் கருதி நிர்மாணித்திருக்கும் அற்புத கோயில் படைப்புகளுக்கு ஏன் கிட்டவில்லை என்பது விடை தேடவேண்டிய ஒரு கேள்வி.
கஜூராஹோ கோயில்கள்: பிரம்மாண்ட படைப்பாக்கம்!
கஜூராஹோ ஸ்தலத்திலுள்ள கோயில்கள் மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேற்கு, கிழக்கு மற்றும் தெற்குப்பகுதி கோயில்கள் என்று அவை அழைக்கப்படுகின்றன.
மேற்குத்தொகுதி கோயில்களில் முழுக்க முழுக்க ஹிந்து தெய்வங்களுக்கான கோயில்கள் நிரம்பியுள்ளன. இவை கஜூராஹோ ஸ்தலத்தின் மஹோன்னத கலைத்திறனுக்கு மிக சிறந்த உதாரணங்களாக காட்சியளிக்கின்றன.
இவற்றில் கண்டரிய மஹாதேவா கோயில் மிகப்பெரிய கம்பீரமான கோயிலாகும். கஜூராஹோ கிழக்குத்தொகுதி கோயில்களில் ஹிந்து கோயில்களும் ஜைனக்கோயில்களும் அடங்கியுள்ளன.
இவை மேற்குத்தொகுதி கோயில்களைப்போன்று நுணுக்கமான கலையம்சங்கள் நிரம்பியதாக காணப்படாவிட்டாலும் அவற்றிற்கே உரிய தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றன.
இங்குள்ள பர்ஷவநாதர் கோயில் இருப்பதில் பெரியதான ஜைன கோயிலாகும். கஜூராஹோ தெற்குத்தொகுதியில் இரண்டு கோயில்கள் மட்டுமே அடங்கியுள்ளன.
துலாதேவ் கோயில் மற்றும் சதுர்புஜ் கோயில் ஆகியவையே இவை. ஒப்பீட்டு நோக்கில் மற்ற கஜூராஹோ கோயில்களின் கலையம்சங்களை இந்த தெற்குத்தொகுதி கோயில்களில் காண முடியவில்லை.
கஜுராஹோ சிற்பங்களின் விசேஷ அம்சமே அவற்றின் பரிமாணங்கள் மற்றும் நுணுக்கங்கள் என்று சொல்லலாம். அடிப்படையில் அக்காலத்திய இந்திய கோயிற்கலை மரபுகளை ஒட்டி இங்குள்ள கோயில்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் வடிவமைப்பு ரீதியில் ஒரு கூர்மையான துல்லியமும் தனித்தன்மையும் இங்குள்ள ஒவ்வொரு கோயில்களின் உருவாக்கத்திலும் பிரதிபலிக்கின்றன.
மனித முயற்சியா அல்லது இயற்கையின் படைப்பா என்று ஒரு கணம் மலைக்க வைக்கும் மஹோன்னத ரூபத்துடன் இங்குள்ள கோயில்கள் காட்சியளிக்கின்றன.
அதிலும் குறிப்பாக மனித உடலின் திரட்சி, பருமன் வளைவுகள் போன்றவையும் ஏனைய உருவங்களின் அசல் பொலிவும் - கருங்கல்லில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் வடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கம் உலகில் வேறெங்குமே காண முடியாத அற்புதமாகும்.
புவியின் மேம்பட்ட உயிர்வகையான மனித உடல் இங்கு அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மிகைப்படுத்தல் என்பது சிற்பங்களில் காணப்பட்டாலும் அவற்றின் மெருகு ஒன்றே மயக்க வைக்க போதுமானது.
இப்படி எல்லாவகையிலும் தனித்துவத்துடன் ஜொலிக்கும் இந்த அற்புத வரலாற்று ஸ்தலத்துக்கு பெருமளவில். வெளிநாட்டவர் விஜயம் செய்வதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?
இந்திய அரசும் உள்ளூர் மக்களும் இந்த மஹோன்னத ஸ்தலத்தை பாதுகாத்து பேணுவதில் இன்னும் இன்னும் அக்கறை செலுத்தலாம் என்பது பெரும்பான்மையான கலாரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமல்ல, விழிப்புணர்வை பிரச்சார முயற்சிகளும் தேவை என்பதும் ஒரு உண்மை.
கஜூராஹோ மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்!
பொதுவாக கஜூராஹோ கோயில்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காதல் காமக்கலை காட்சிகள் ஒரு முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு அம்சமாக விளங்குகின்றன.
சௌஸத் யோகினி கோயில், ஜவரி கோயில், தேவி ஜகதாம்பா கோயில், விஸ்வநாத கோயில் , கண்டரிய மஹாதேவா கோயில், லஷ்மணா கோயிள் உள்ளிட்ட அனேக கோயில்கள் இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ளன.
கஜூராஹோ நடனத்திருவிழா எனும் சுற்றுலா நிகழ்ச்சியும் ஏராளமான எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளை இங்கு ஈர்க்கிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 25ம் நாள் தொடங்கி மார்ச் 2ம் நாள் வரை இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
ஒரு வார காலம் நீடிக்கும் இந்த திருவிழாக்காலத்தின்போது இந்தியா முழுவதிலிருந்தும் நடனம் மற்றும் நிகழ்த்துகலை கலைஞர்கள் வருகை தருகின்றனர்.
கஜூராஹோ: தடங்கல்கள் அற்ற பயண வசதிகள்!
எல்லா போக்குவரத்து மார்க்கங்கள் மூலமாகவும் கஜூராஹோவுக்கு சுலபமாக பயணம் மேற்கொள்ளலாம். விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய வசதிகள் போன்ற அனைத்தையும் இந்த சுற்றுலாத்தலம் கொண்டிருக்கிறது.
இந்த வரலாற்றுத்தலத்தை இஷ்டம் போல் சுற்றிப்பார்க்க டாக்சிகள், ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவை வாடகைக்கு கிடைக்கின்றன. குளிர்காலம் அல்லது குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் கஜூராஹோவுக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.