மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் உள்ள புல்தானா மாவட்டத்தில், லொனார் நகரம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய நகரம் மும்பையிலிருந்து 483 கிலோமீட்டர் தொலைவிலும், ஔரங்கபாத்திலிருந்து 148 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
லொனார் நகரம் பிளெய்ஸ்டொகீன் சகாப்தத்தின் காலகட்டத்தில் பூமியை தாக்கியதால் ஏற்பட்ட மிகப்பெரிய விண்கல் பள்ளத்துக்காக மிகவும் புகழ்பெற்றது. அந்த மிகப்பெரிய விண்கல் 52,000 ஆண்டுகளுக்கு முன்பு லொனார் நகரில் வந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்பு, தற்போது இந்த விண்கல் பள்ளம் ஏரியாக மாற்றமடைந்து லொனார் ஏரி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
லொனார் ஏரி 4000 அடி விட்டமும், 450 அடி ஆழமும் கொண்டது. இந்த சரித்திர புகழ்பெற்ற விண்கல் பள்ளம் ஜே.ஈ.அலெக்ஸாண்டர் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி பத்ம புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் ஐனா-ஐ-அக்பரி போன்ற வேத சாஸ்திர நூல்களில் குறிப்புகள் உள்ளன.
லொனார் ஏரிக்கு பின்னால் தைத்யா சுடன் என்ற தொன்மையான கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான புனித யாத்ரிகர்கள் ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்வர்.
லொனாரின் விண்கல் பள்ளம் ஒரு அறிவியல் அற்புதம். இதை நேரடியாக பார்த்தாலொழிய எவரும் எளிதில் நம்ப மாட்டர்கள். அப்படி நீங்கள் இந்த பள்ளத்தை நேரில் பார்க்கும் போது 50,000 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று, இறந்த காலத்தில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படும். அப்போது எல்லோரும், எப்பேர்பட்ட பிரபஞ்சத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை பெருமையோடு நினைவு கூர்வர்.