‘நவாப்புகளின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். இது கோமதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சூர்யவம்ஷி எனும் ராஜவம்சத்தினரின் ஆட்சியிலிருந்து இந்நகரத்தின் வரலாறு துவங்குகிறது. நவாப் ஆசஃப் உத் தௌலா என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரம் ஆவாத் நவாப்புகளின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இவர்களின் ஆட்சியில்தான் இந்நகரின் கலாச்சாரம் மற்றும் பிரசித்தமான உணவுத்தயாரிப்பு பாரம்பரியம் முதலியவை செழித்து வளர்ந்திருக்கின்றன.
இன்று வியக்கவைக்கும் அளவுக்கு நவநாகரீக நவீனத்தின் எல்லா அம்சங்களும் லக்னோ நகரில் கலந்து விட்டாலும் இன்னமும் இந்த நகரம் தனது புராதன அடையாளத்தையும் வாசனையையும் இழக்கவில்லை என்பது ஒரு சிறப்பம்சம்.
இந்நகரத்தின் தெருக்களில் கொஞ்சம் நடந்து உள்ளூர் மக்களிடம் உரையாடலை துவங்கும்போதே புரிந்து கொள்வீர்கள் இந்த மண்ணின் கலாச்சாரத்தை.
ஹவேலி எனப்படும் மாளிகைகள் யாவும் அழிக்கப்பட்டு நவீன பல்குடியிருப்பு வளாகங்கள் உருவாக்கப்பட்டுவிட்ட போதிலும் பழைய உபசரிப்பும் இனிமையும் இந்த மக்களிடமிருந்து மறையவில்லை என்பது ஒரு ஆச்சரியம்தான்.
நவாப்புகளின் ஆட்சி லக்னோ நகரத்துக்கு தனித்தன்மையான நாகரிகம் மற்றும் உணவுப்பாரம்பரியம் போன்றவற்றை அளித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இலக்கியம், இசை, நடனம் மற்றும் கைவினைக்கலை போன்ற யாவும் யாவும் அக்காலத்தில் செழித்து வளர்ந்திருக்கின்றன.
சித்தார் மற்றும் தபேலா வாத்திய இசைகள் மற்றும் கதக் நடன பாணி போன்றவை அப்போது பிறந்துள்ளன. காலப்போக்கில் ஆவாத் ராஜ்ஜியம் ஆங்கிலேயர்களின் வந்தபிறகு அவர்கள் விட்டுச்சென்ற சில நல்ல விஷயங்களும் இந்த நகரத்தில் கலந்து மிச்சமிருக்கின்றன.
உருது, ஹிந்துஸ்தானி மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளின் பிறப்பிடமாகவும் லக்னோ கருதப்படுகிறது. இந்திய அளவில் சிறப்பான கவிதைகள் மற்றும் இலக்கியப்படைப்புகள் இந்த நகரத்தில் உருவாகியிருக்கின்றன.
நாட்டிலுள்ள மிகச்சிறந்த கைவினைக்கலைஞர்களில் லக்னோ நகர கலைஞர்களும் மிகச்சிறப்பான இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். சிகான்காரி எனும் உடை அலங்கார வேலைப்பாட்டிற்கு இந்நகரம் பிரசித்தி பெற்றிருக்கிறது.
இவை யாவற்றையும் லக்னோ நகரத்தின் உணவுச்சுவை தனித்தன்மை நிரம்பியதாக புகழுடன் அறியப்படுகிறது. சுவையான முகாலயர் கால உணவு வகைகளான டிக்கா மற்றும் கெபாப் போன்றவை லக்னோ நகரம் வரும்போது அவசியம் சுவைக்க வேண்டிய உணவு வகைகளாகும்.
லக்னோ நகரத்தின் சுற்றுலா அம்சங்கள்
லக்னோ நகரத்தில் பார்க்கவும் ரசிக்கவும் ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் மிக முக்கியானவை பாரா இமாம்பாரா எனும் பிரம்மாண்டமான கல்லறை மாளிகை மற்றும் 1783ம் ஆண்டில் கட்டப்பட்ட பூல் புலையா எனும் சுவாரசியமான சுற்றுப்பாதை ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை.
இவற்றிற்கான அனுமதிச்சீட்டின் மூலம் சோட்டா இமாம்பாரா, ஹுசைனாபாத் கிளாக் டவர் மற்றும் கலைக்கூடம் போன்றவற்றையும் பயணிகள் ரசிக்கலாம்.
லக்னோ ரெசிடென்சியின் இடிபாடுகள் மற்றும் 1857 ம் ஆண்டு ஏற்பட்ட முதல் சுதந்திரக்கலகம் நடந்த இடமான ‘1857மெமோரியல் மியூசியம்’ எனும் வரலாற்று வளாகம் போன்றவையும் அவசியம் காணவேண்டிய இடங்களாகும். ரெசிடென்சி எனும் இடத்தில் நகரச்சந்தடிகள் அற்ற அமைதியான சூழலை ரசித்து மகிழலாம்.
லக்னோ நகரத்தில் பசுமைக்கும் பஞ்சமில்லை. லக்னோ விலங்குப்பூங்கா, பாடனிகல் கார்டன்ஸ் மற்றும் புத்தா பூங்கா, குக்ரெயில் பாதுகாப்பு வனச்சரகம் மற்றும் சிகந்தர் பாக் ஆகியவை இங்குள்ள இயற்கை எழில் ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன.
லக்னோ நகரத்தில் பல கண்ணைக்கவரும் நினைவுச்சின்னங்கள் மற்றும் புராதன கட்டிடங்களும் ஆவாத் நவாப் கால கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றுகளாக வீற்றிருக்கின்றன.
கேய்சர்பாக் அரண்மனை, தாலுக்தார் ஹால், ஷா நஜஃப் இமாம்பாரா, பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க் மற்றும் ரூமி தார்வாஸா எனும் லக்னோ நகர நுழைவாயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இந்த நுழைவாயில் இந்தியாவிலுள்ள முக்கியமான வரலாற்று கட்டிடச்சின்னங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இவை தவிர 1423ம் ஆண்டு சுல்தான் அஹமத் ஷா என்பவரால் கட்டப்பட்ட ஜமா மசூதியும் ஒரு முக்கியமான அம்சமாக இங்கு அமைந்திருக்கிறது.
முழுவதும் மஞ்சள் நிற மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி நுணுக்க வடிவமைப்பு மற்றும் கலையம்சங்களுடன் இந்தியாவிலுள்ள அழகிய மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மெயின் காட் அல்லது தஹாஸ் காட் மற்றும் தஹா ஏரிக்கு அருகிலுள்ள மண்மேடு ஆகியவையும் லக்னோ நகரத்திலுள்ள இதர சுற்றுலா அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இந்த மண் மேட்டுப்பகுதி சுற்றுலாப்பயணிகள் கூடாரத்தங்கலுக்கு பயன்படுத்தும் ஸ்தலமாக இருந்து வருகிறது.
போக்குவரத்து வசதிகள்
லக்னோ நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.
விஜயம் செய்ய ஏற்ற காலம்
அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள காலம் லக்னோ நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.