சீமாந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மதனப்பள்ளி, ஆரம்ப காலத்தில் மரியாதை ராமண்ணா பட்டணம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. அதன் பிறகு 19-ஆம் நூற்றாண்டின் முடிவில்தான் இந்த நகரம் மதனப்பள்ளி என்று அழைக்கப்பட தொடங்கியது.
மதனப்பள்ளி நகரின் பெயர் குறித்து கூறப்படும் சுவையான கதையை தவிர இந்த நகரம் இந்தியாவில் அதிகமாக வருவாய் ஈட்டித்தரும் பகுதியாக கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அதோடு மதனப்பள்ளி நகரம் விவசாயத் துறையில் வேகமாக வளர்ந்து வருவது பலரும் அறிந்திடாத செய்தி. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்ல தரத்துடன் இருப்பதால் இந்தியா முழுதும் இதற்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
மதனப்பள்ளி நகரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருவதற்கு மூல முதல் காரணமாக விளங்குவது ஹார்ஸ்லி குன்றே ஆகும். அதுவும் சீமாந்திராவின் சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்கும் அற்புதமான மலைவாசஸ்தலமாக ஹார்ஸ்லி குன்று கருதப்படுவதால் ஆந்திரா மற்றும் அருகாமை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கோடை காலத்தை இந்த மலைப்பகுதியில் கழிக்கவே விரும்புகிறார்கள்.
அதோடு இந்தப் பகுதி அன்னி பெசன்ட் அம்மையாரின் நினைவாக கட்டப்பட்ட பெசன்ட் தெஸோபிக்கல் கல்லூரிக்காக மிகவும் புகழ்பெற்றது. இவைதவிர பிரசித்திபெற்ற ரிஷி வேல்லி பள்ளிக்கூடத்தை நிறுவியவரான தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பிடமாகவும் மதனப்பள்ளி நகரம் பயணிகள் மத்தியில் பிரபலம்.
மதனப்பள்ளி நகரில் நடந்தேறிய ஒரு முக்கிய நிகழ்ச்சி இந்திய வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதாவது மகாகவி ரபீந்தரநாத் தாகூர் இந்திய தேசிய கீதத்தை மதனப்பள்ளி நகரில் எழுதியதோடு, இங்கேயே அதற்கு இசை அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
மதனப்பள்ளி நகரின் பனிக் காலங்களை தவிர மற்ற பருவங்களில் மிகவும் சூடான வானிலையே நிலவும். எனவே பயணிகள் மதனப்பள்ளி நகரை சுற்றிப் பார்க்க பனிக் காலங்களே பொருத்தமானதாகவும், ஏற்றதாகவும் இருக்கும்.
மேலும் மதனப்பள்ளி நகரிலிருந்து 115, 157, 93, 125 கிலோமீட்டர் தொலைவுகளில் முறையே திருப்பதி, பெங்களூர், சித்தூர், புட்டப்பர்த்தி போன்ற நகரங்கள் அமைந்திருப்பதால் மதனப்பள்ளி நகரை அடைவது ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது.