மாஜுலி எனும் இந்த ரம்மியமான தீவுப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை ஒருங்கே பெற்றுள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது.
மாஜூலி தீவு சிறிய சுற்றுலாத்தலம் என்றாலும் பல சுவாரசிய அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அஸ்ஸாம் பகுதியில் புதிய வைணவம் தழைத்தோங்கியிருக்கும் ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது.
சுற்றிலும் ஓடும் பிரம்மபுத்திரா ஆறு இதன் இயற்கை எழிலை கூட்டுகிறது என்றால் இங்கு அமைந்திருக்கும் சாத்ரா கோயில்கள் இந்த தீவுப்பகுதிக்கு ஒரு கலாச்சார அடையாளத்தையும் வழங்கியுள்ளன.
மாஜுலி சுற்றுலா அம்சங்கள் – தீவுப்பகுதியின் விதவிதமான சுவாரசிய பரிமாணங்கள்
உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவாக புகழ் பெற்றுள்ள இந்த மாஜூலி தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது.
ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம்.
மாஜூலி தீவில் வாழ்க்கை முழுமையாக ரசனையுடன் கொண்டாடப்படுகிறது. விடாத ஆற்று வெள்ளம் மற்றும் சூற்றுச்சூழல் சீரழிவுகள் ஆகியவற்றுக்கிடையே இங்குள்ள மக்களின் வாழ்க்கை உன்னதமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது.
கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் இந்த தீவுப்பகுதியின் முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. சாத்ரா எனப்படும் மடாலயங்கள் இந்த தீவின் உயிர்நாடியாக வீற்றிருக்கின்றன.
மொத்தம் 25 சாத்ராக்கள் இந்த தீவில் உள்ளன. உள்ளூர் மக்களின் கலாச்சார மையங்களாக இயங்கும் இவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்வதில் வியப்பொன்றுமில்லை.
அஸ்ஸாமிய மாநிலத்தின் பிரபல ஆன்மீக குருவான ஷீமண்ட ஷங்கர்தேவா மற்றும் அவரது சீடர் மாதவ்தேவா ஆகியோரால் வளர்க்கப்பட்ட புதிய வைணவ மரபின் நீட்சியாக இந்த சாத்ரா மடாலயங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த தீவுப்பகுதியில் வைணவம் புதுப்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல் முக்கியமான பாரம்பரிய இந்திய நடன வடிவமான – சாத்ரியா நடனமும் வளர்க்கப்பட்டுள்ளது.
‘க்ஷாத்ரா’ என்று அஸ்ஸாமிய மொழியில் உச்சரிக்கப்படும் இந்த சாத்ரா மடாலயங்கள் ஷீமண்ட ஷங்கர்தேவா பின்பற்றிய வைணவ ஆன்மீக கருத்துகளை பரப்பும் மடங்களாகவும் கோயில்களாகவும் காட்சியளிக்கின்றன.
மாஜூலி தீவின் சுற்றுலா அம்சங்களில் இவை பிரத்யேக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சாத்ரா அமைப்பும் தனித்தன்மையான அம்சங்களை போதிப்பவையாக அதே சமயம் ஆதி அஸ்ஸாமிய மரபின் சாரத்தை உள்ளடக்கியவையாக இயங்குகின்றன.
இவற்றில் கமலாபரி சாத்ரா முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. அவுனியாடி சாத்ரா எனும் மற்றொரு மடாலயம் அதில் கொண்டாடப்படும் ‘பால்நாம்’ எனும் திருவிழாவுக்காகவும் ‘அப்சரா நடனம்’ எனும் நிகழ்ச்சிக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இவை தவிர பெங்கநாடி சாத்ரா மற்றும் ஷாமாகுரி சாத்ரா ஆகிய இரண்டும் ஏனைய முக்கியமான சாத்ரா மடலாயங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
போக்குவரத்து வசதிகள்
ஒரு ஆற்றுத்தீவாக அமைந்திருப்பதால் பிரம்மபுத்ரா ஆற்றை ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலமாக கடந்துதான் இந்த மாஜூலி தீவிற்கு விஜயம் செய்ய முடியும். ஜோர்ஹாத் எனும் இடத்தில் உள்ள நிமாடி காட் எனும் படகுத்துறையிலிருந்து மஜூலிக்கு படகுச்சேவைகள் இயக்கப்படுகின்றன.
பருவநிலை
பருவநிலையைப்பொறுத்தவரை மாஜுலி தீவுப்பகுதி நீண்ட கடுமையான மழைக்காலத்தை பெற்றிருக்கிறது. கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடனும் வறட்சியுடனும் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாஜூலி தீவிற்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு குளிர்காலமே உகந்ததாக காணப்படுகிறது.