ஆலப்புழா நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும் புகழ்பெற்றது.
மாராரிக்குளம் கிராமத்து மக்கள் இன்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரம்பரிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சனல் தயாரிக்கும் தொழிலிலேயே ஈடுபடுவதால் மாராரிக்குளம் கிராமம், கயிறு மற்றும் சனல் தயாரிப்புக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது.
மேலும் மீனவர்கள் அதிகமாக வாழும் பகுதியான இங்கு நீங்கள் மீனவர்களோடு மீனவர்களாக கடலில் படகுப் பயணம் செய்து அவர்களின் போராட்டங்களையும், சந்தோஷத்தையும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெறுவதோடு, உங்களுக்கு அது ஒரு வித்தியாசமான சுற்றுலா அனுபவமாகவும் இருக்கும்.
மாராரிக்குளம் கிராமத்தின் பிரதான யாத்ரீக மையமாக செயின்ட் தாமஸ் அவர்களால் நிறுவப்பட்ட கொக்கமங்கலம் தேவாலயம் அறியப்படுகிறது. கன்னி மேரிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் தும்போலி எனும் கடற்கரை நகரத்தில் அமைந்திருக்கிறது.
மாராரிக்குளம் கிராமத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம், அரூர், அருந்தன்கால், பூச்சக்கால், பணவல்லி, வெலோர்வட்டம் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
அதோடு கட்டிடக் கலைக்கு பெயர்போன சிவன் கோயில், சேர்தலா கார்த்தியேணி கோயில், காஞ்சிகுங்க்லரா கோயில் போன்ற ஹிந்துக் கோயில்களையும் நீங்கள் மாராரிக்குளம் சுற்றுலா வரும் போது பார்க்கலாம்.
மேலும் பயணிகள் மாராரிக்குளம் கடல் பகுதியில் கட்டுமரத்தில் பயணம் செய்வது, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.