நாகாலாந்து மாநிலத்திற்கு நீங்கள் சுற்றுலா சென்று வரும் போது அங்கிருக்கும் மோகோக்சங் என்ற மாவட்ட தலைநகரமாக விளங்கும் இடத்திற்கும் சென்று வந்தால் தான் உங்களுடைய பயணம் முழுமை பெறும். ஆவோ பழங்குடியினரை முதன்மையான மக்களாக கொண்டிருக்கும் மோகோக்சங், திமாபூர் மற்றும் கோஹிமாவிற்கு அடுத்தபடியாக நாகலாந்தில் இருக்கும் முக்கியமான மைய நகரமாகும்.
நாகாலாந்து மாநிலத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமாக மோகோக்சங் விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1325 மீ உயரத்தில் இருக்கும் இந்த ஆவோ பழங்குடியினர்களின் நகரம், ஆர்ப்பரித்து ஓடும் ஓடைகள் மற்றும் கண்கவரும் மலைகளை கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. அஸ்ஸாமின் வடக்கு பகுதி மோகோக்சுங்கிற்கு மிகவும் அருகில் உள்ள இடமாகும்.
மோகோக்சங் நகரம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு தினம் மற்றும் மோவோட்சு என்ற ஆவோ பழங்குடியினரின் விழாக்களின் போது களைகட்டத் தொடங்கி விடும்.
விளையாட்டு நிரம்பிய செயல்பாடுகளுடன், நள்ளிரவை நெருங்கும் புத்தாண்டு தினத்தில், உள்ளூர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நகரத்தின் மைய சதுக்கத்தை நோக்கி செல்வது இன்றைய மோகோக்சுங்கின் பாரம்பரியங்களின் ஒன்றாகும்.
மோகோக்சங் நகரத்தின் திருவிழாக்கள்
மோகோக்சங் நகரத்திலிருந்து ஒன்றரை மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் சுச்சுயிம்லாங் என்ற கிராமம் தான் ஆவோ பழங்குடியினரின் மோவோட்சு திருவிழாவின் இருப்பிடம் ஆகும்.
மே மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் இந்த திருவிழா ஆவோ பழங்குடியினரின் சமூக பிணைப்பை உறுதிப் படுத்தும் திருவிழாவாகும். இந்நாளில் பரிசுகள் பரிமாறப்படும், புதிய உறவுகள் உருவாக்கப்படும் மற்றும் பழைய இணைப்புகள் புதுப்பிக்கப்படும்.
மலை மேல் அமர்ந்திருக்கும் இந்த பசுமையான கிராமம் இந்த சமூக பிணைப்புத் திருவிழாவிற்கு மிகவும் ஏற்ற அமைவிடமாக உள்ளது.
மோகோக்சுங்கின் மற்றுமொரு பிரபலமான பண்டிகையாக ட்சுங்ரெம் மோங் உள்ளது. கிறித்தவ மதம் மிகவும் அதிகமாக பின்பற்றப்படும் மோகோக்சுங்கில் 95% பேர் ஞானஸ்நானம் பெற்றுள்ளார்கள். உண்மையில், ஆவோ இனத்தவர் தான் முதன் முதலாக 19-ம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்தை தழுவினார்கள்.