இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலம், எழில்மிகு மலைகளுக்கும், இயற்கைக் காட்சிகளுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், இந்த மாநிலத்தில் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. அப்படிப்பட்ட முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக முக்தேஸ்வர் விளங்குகிறது.
முக்தேஸ்வர் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அழகிய மலைப் பகுதியாகும். இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைநிடால் மாவட்டத்தில் உள்ள குமயோன் வட்டாரத்தில் அமைந்திருக்கிறது. மிகவும் அழகான மலைப் பிரதேசமாக விளங்கும் முக்தேஸ்வர் கடல் மட்டத்திலிருந்து 2286 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.
கடந்த 350 வருடங்களாக இந்து சமய கடவுளான சிவபெருமானுக்கு முக்தேஸ்வரில் ஒரு அழகிய ஆலயம் இருந்து வருகிறது. இந்த ஆலயம் முக்தேஸ்வர் தாம் என்று அறியப்படுகிறது.
இந்த ஆலயத்தின் பெயரை வைத்தே இந்த பகுதி முக்தேஸ்வர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் தன்னை நோக்கி வரும் பக்தர்களுக்கு மோட்சம் வழங்குவார் என்ற நம்பிக்கையும் இந்த பகுதியில் உள்ளது.
மலைப் பிரேதேசமான முக்தேஸ்வர் 1893 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் ஒரு கல்வி மற்றும் ஒரு ஆய்வுக் கூடமாக மாற்றப்படட்து. முக்தேஸ்வரிலிருந்து, இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான மலைச் சிகரமான நந்த தேவி சிகரத்தைப் பார்க்கலாம்.
இந்த பகுதிக்கு வேட்டையாட வந்த ஆங்கிலேய நாவலராசிரியாரான ஜிம் கோர்பட், "த மேன் ஈட்டர்ஸ் ஆஃப் குமயோன்" என்ற ஒரு நாவலை எழுதினார். இந்த நாவல் ஒரு பிரபலமான நாவல் ஆகும்.
இதன் மூலம் முக்தேஸ்வர் மேலும் பிரசித்தி பெற்றது. ஜிம் கோர்பட் இந்த பகுதியில் சுற்றி வந்த மிகவும் அபாயமான 6 புலிகளையும் மற்றும் ஒரு சிறுத்தையையும் சுட்டுக் கொன்றார். இவற்றில் இந்த பகுதியில் வாழ்ந்த 100-க்கும் அதிகமான மக்களைக் கடித்துக் கொன்ற 'சம்பவத்' என்ற புலி மற்றும் பனர் என்ற சிறுத்தை ஆகியவையும் அடக்கம்.
முக்தேஸ்வரில் இருக்கும் காடுகள், குரங்குகள், மான்கள், அரிதான மலைவாழ் பறவைகள், மலை சிறுத்தைகள் மற்றும் இமயமலைக் கருப்புக் கரடிகள் போன்ற காட்டு விலங்குகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளன.
இந்த மலைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த காடுகளில் இருக்கும் அரிதான பல பறவைகள் மற்றும் இமயமலைக் காடுகளில் இருக்கும் விலங்குகள் போன்றவற்றைப் பார்த்து ரசிக்க முடியும். மேலும் இந்த பகுதியில் பிரபலமாக இருக்கும் மலையேற்ற விளையாட்டுகளிலும் தங்களை ஈடுபடுத்தி அவர்கள் மகிழலாம்.
முக்தேஸ்வரில் இருக்கும் மிகப் பழமையான ஆலயமான முக்தேஸ்வர் ஆலயம் சிவபெருமானுக்கு நேர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் வெள்ளை மார்பிள் கல்லாலான ஒரு சிவலிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மார்பிள் சிவலிங்கத்தைச் சுற்றி, இந்து சமய தெய்வங்களான பிரம்மன், விஷ்ணு, பார்வதி, அனுமான், கணேசன் மற்றும் நந்தி போன்றவர்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிவாலயம் பக்தர்களைக் கவரும் ஒரு ஆன்மீகத் ஸ்தலமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
முக்தேஸ்வர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அழகிய மலைப் பிரதேசம் சிட்லா ஆகும். முக்தஸ்வருக்கு அருகில் இருக்கும் சிட்லா கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த மலைப் பிரதேம் 39 ஏக்கர்களில் பரந்து விரிந்து இருக்கிறது. சிட்லாவிலிருந்து, கம்பீரமாக அமைந்திருக்கும் இமய மலைத் தொடரைப் பார்த்து ரசிக்கலாம். மேலும் ஓக் மற்றும் பைன் மரக் காடுகளால் சிட்லா பகுதி நிறைந்திருக்கிறது.
முக்தேஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்ததாக சவுலி காலி ஜாலி என்று அழைக்கப்படுகின்ற சவுதி ஜாலி என்ற பகுதி அமைந்திருக்கிறது. இந்த பகுதி பராணங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரு முறை தீய சக்திக்கும், பெண் தெய்வத்துக்கும் இடையே இங்கு போர் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
அதன் அடையாளமாக யானைத் தந்தமும், ஒரு வாளும் மற்றும் மார்புக் கவசமும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
ராஜராணி என்ற இன்னுமொரு மிகப் பழைய ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் அழகிய கற்களால் அழகிய வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டது.
அடுத்ததாக பிரம்மேஸ்வரா என்ற ஒரு ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் கிபி 1050ல் கட்டப்பட்டதாகும். இந்த ஆலயத்தில், கற்களால் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்களைக் காண முடியும்.
குமயோன் மலைப் பகுதியில் நதுவக்கான் என்ற ஒரு சிறிய குக்கிராமுமும் அமைந்திருக்கிறது. இந்த பகுதியிலிருந்து இமயமலைச் சிகரங்களை மிகத் தெளிவாகப் பார்த்து ரசிக்கலாம்.
இந்த பகுதி அடர்ந்த ஓக், பைன், பிர்ச் மற்றும் கப்பால் போன்ற மரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நடை பயணம் செய்து கொண்டு அல்லது பனிச்சறுக்கு செய்து கொண்டு இயற்கை அழகை ரசிக்கலாம்.
1893ல் முக்தேஸ்வர் பகுதியில் ஆங்கிலேயர்களால் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் கால்நடை அறிவியல் வளர்வதற்கு இந்த ஆராய்ச்சி மையம் கணிசமான அளவில் தன் பங்கைச் செய்து வருகிறது.
இந்த ஆராய்ச்சி மையத்தில் பாக்ட்ரியாலஜி, ஜெனிடிக்ஸ் மற்றும் விலங்குகளின் உணவு சம்பந்தமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு இந்த மையத்தில் ஒரு கால்நடை அருங்காட்சியகம் மற்றும் ஒரு அழகிய நூலகமும் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த மையத்தைப் பார்த்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிவபெருமான் ஆலயத்திற்கு வெகு அருகில் முக்தேஸ்வர் கண்காணிப்பு பங்களா அமைந்திருக்கிறது. இந்த பங்களா எட்வர்ட் ஜேஸ்ம்ஸ் என்று அழைக்கப்படுகிற ஜிம் கோர்பட் என்ற ஒரு ஆங்கிலேயருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பங்களாவில் அவர் அதிக நாள்கள் தங்கி இருந்து, மக்களை அச்சுறுத்தி வந்த பயங்கர புலிகளை வேட்டையாட திட்டங்களைத் தீட்டினார். அவர் பயன்படுத்தி வந்த பாத்திரங்கள் இன்னும் இந்த பங்களாவில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
முக்தேஸ்வருக்கு மிக எளிதாகச் சென்றுவராலம். ஏனெனில் இந்த பகுதிக்குச் செல்ல விமான வசதி, தொடர்வண்டி வசதி மற்றும் பேருந்து வசதி ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன.
ஆண்டு முழுவதும் இந்த பகுதி மிதமான வெப்பநிலையில் இருந்தாலும், மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் இந்த பகுதிக்குச் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அந்தக் காலங்களில் விமான தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகள் இங்கு அதிகமாக இருக்கும்.