உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.
சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.
முருதேஸ்வரின் புகழுக்கு காரணமாக விளங்கி வரும் முருதேஸ்வர் ஆலயமும், சிவன் சிலையும் மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ அமைந்திருக்கிறது.
இதன் காரணமாகவே ஆரம்பத்தில் நான்கு கைகளுடன் காணப்பட்ட சிவன் சிலையின் உடுக்கை பிடித்திருந்த கை கடல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் கடும் மழையின் காரணமாக அதன் தங்க முலாமும் அழிந்து போயிற்று.
இந்தக் கோயில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்று.
பிற கவர்ச்சி அம்சங்கள்
அரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கோயிலை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் சிறு உலா போகலாம், அதோடு அரபிக் கடலில் ஆதவன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம்.
அப்பகுதியின் மற்றொரு பிரபலமான இடம் அலைக் குளம். இங்கு குடும்பத்தோடு வருபவர்கள் தங்கள் குழந்தைகளோடு குதூகலமாக பொழுதை களிக்கலாம். உங்களை சுற்றி நாற்புறமும் தண்ணீர் சூழ்ந்திருக்க பெரிய பெரிய உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் அனுபவம் அலாதியானது. உங்கள் வசதிக்கு ஏற்ற உணவகங்களும், தங்கும் விடுதிகளும் இங்கே நிறைய இருக்கின்றன.
பத்க்கல் நகரம் மற்றும் சஹயாத்ரி குன்றில் காணப்படும் உல்லாச விடுதிகள், திப்பு சுல்தானின் கோட்டை போன்றவை முருதேஸ்வருக்கு வெகு அருகில் காணப்படும் பிரபலமான சுற்றுலா பகுதிகள்.
பத்க்கல் நகருக்கு அருகில் ஜன சஞ்சாரமற்ற புறாத் தீவு என்றழைக்கப்படும் நேத்ராணி தீவு உள்ளது. பத்க்கல்லிலிருந்து படகுகளோ, மீன்பிடி படகுகளோ அமர்த்திக்கொண்டு பயணிகள் புறாத் தீவுக்கு செல்லலாம். ஆடு, மாடுகளை தவிர வேறு ஜீவன்களையே காண முடியாத புறாத்தீவு பயணிகளின் அலுத்து போன நகர வாழ்க்கைக்கு அருமருந்தாக இருக்கும்.